சென்னை, ஜூன் 10- ‘தமிழ்மொழி மீதும், தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுத்தோல் போர்த்திய புலி போன்றது’ என தி.மு.க. கடுமையாக சாடி உள்ளது.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பா.ஜனதாவின் அஜெண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ் நாட்டுக்கு வரும்போதெல்லாம் ‘ஒரே ஆள் ஒரே பேச்சு’ என்ற ரீதியில் பேசிவருகிறார்.
தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது என மதுரையில் சொல்லியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கோவைக்கு வந்த போதும், இதேபோன்று தான் பேசினார். தமிழ்மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது ‘பசுத்தோல் போர்த்திய புலி’ போன்றது. ஒடிசா, அரியானா, மராட்டியம், டில்லி போன்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் பா.ஜனதா ஆட்சி மலரும் என சொல்லியிருக்கிறார்.
கபட வேடம்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டை சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை பா.ஜனதா கட்சியினர் எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா? என அமித்ஷா சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என கபட வேடம் போடுகிறார்.
ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவிலில் இருக்கவேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டுக்கு சென்று விட்டது என சொல்லி தமிழர்களை திருடர்கள் என்பது போல கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.
ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது போல தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பார்களாம். ஒடிசாவின் லட்சணம் தான் இந்தியாவுக்கே தெரியுமே.
பலாத்கார வழக்குகள்
ஆட்சிக்கு வந்த 5 மாதத்தில் மட்டும் ஒடிசாவில் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருக் கிறார்கள். 41 கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகியிருக் கிறார்கள்.
கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிக பட்சமாக 509 பலாத்கார தேர்தல் வழக்குகள் பதிவாகி உள்ளது.
அந்த ஒடிசாவின் ஆட்சியைத் தான் தமிழ்நாட்டுக்குத் தரப் போகிறார்களா?.
திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று விட்டார்.
பொய் மூட்டை
அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணி அமைத்த அமித்ஷா, தி.மு.க. ஆட்சி மீது அவதூறு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதும், தமிழ்நாட்டுக்கான நிதியை தர மறுப்பதும் பா.ஜனதா மீது தமிழ்நாட்டு மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜனதாவுக்கும், அக்கட்சிக்கு துணை போகிறவர்களுக்கும் தமிழக மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்.
தேர்தலில் வெல்வது அல்ல பா.ஜனதாவின் நோக்கம். அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் ஒற்றை இலக்கு.
நம்பிக்கையைப் பெற்ற தி.மு.க.
தொண்டர்களின் நம்பிக்கை யையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படி பெற முடியும்?.எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது.
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக் கையை பெற்ற தி.மு.க. கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல, அதன் பிறகு வரும் தேர்தல்களி லும் தொடர் வெற்றியை பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.