மதவாதத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்!
திராவிட இயக்கச் சித்தாந்தம் இருக்கும் வரை – எத்தனை சித்து விளையாட்டுக்களை நடத்தினாலும் அமித்ஷாவின் பிளவுவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!
சென்னை, ஜூன் 10 – ‘‘மதவாதத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்! திராவிட இயக்கச் சித்தாந்தம் இருக்கும் வரை – எத்தனை சித்து விளையாட்டுக்களை நடத்தி னாலும் அமித்ஷாவின் பிளவுவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!’’ என்று தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா
எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா நேற்று (9.6.2025) காலையில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு :–
நேற்றைய தினம் (8.6.2025) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசிய பேச்சை அனைவரும் அறிவோம். நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அவர் பேசியதை சுருக்கிச் சொல்ல வேண்டும் என்றால், அப்பட்டமான பொய், அருவருப்பான, வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. இந்த மூன்றையும் தவிர அவரின் பேச்சில் என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மதவாத பிளவை வேண்டுமென்றே உருவாக்க முயற்சிக்கிறார்கள்!
நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு வரும் போது, அவருக்கு இருக்கும் தகுதி, பொறுப்பு, கடமை உணர்ச்சி ஆகியவற்றைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைகொள்ளாமல், அவதூறுகளை அள்ளி வீசுவதும்; மாற்றுக் கட்சி ஆட்சி அந்த மாநிலத்தில் நடந்தால், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதும், மதவாத பிளவை வேண்டுமென்றே உருவாக்கி, அமைதியாக இருக்கும் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, கலவரத்தைத் தூண்டி, அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெற முடியுமா என்ற அருவருப்பான உணர்ச்சிதான் அவருடைய பேச்சில் வெளிப்பட்டுள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு அழகல்ல. மாநில – ஒன்றிய அரசிற்கு இடையே இருக்கும் சுமுக உறவிற்கு குந்தகம் விளைவிக்கும் பேச்சை அவர் பேசியுள்ளார்.
அவர் பேச்சை ஒவ்வொரு வரியாக ஆதா ரத்தோடு எங்களால் பொய் என நிரூபிக்க முடியும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை, பா.ஜ.க. விரும்பாமல், அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமித்ஷாவின் பேச்சை – போக்கை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அரசியல் சித்து விளையாட்டுகளை அமித்ஷா இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது!
முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு அமைதி, வளர்ச்சி திட்டங்கள், ஒன்றிய அரசின் நிதி பல நேரங்களில் கிடைக்காவிட்டாலும் மாநில அரசின் நிதியை கொடுத்து வளர்ச்சி திட்டப்பணிகள் தடைபடாமல் விரைவாக வழங்கி நடை முறைப்படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசும், பா.ஜ.க. கட்சியும், அமித்ஷாவை வரவைத்து இப்படி ஒரு கேலிக்கூத்தான, அருவருப்பான அரசியல் நாகரிகத்திற்குப் புறம்பான காரியத்தை அரங்கேற்றியுள்ளார்கள். அமித் ஷா என்ற தனிநபருக்கு மட்டும் அல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல. இந்த அரசியல் சித்து விளையாட்டுகளை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது.
இவ்வாறு குறிப்பிட்ட ஆ.இராசா தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:பா.ஜ.க. அரசாங்கம் அதிகமாக நிதி ஒதுக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதே? –
பதில்: மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் நேரடி நிதி வருவாய் எவ்வளவு? தற்போது எவ்வளவு? நான்கு மடங்கு நேரடி நிதி வருவாய் உயர்ந்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. கொடுக்கும் நிதி மிகக் குறைவாகவே உள்ளது.
பா.ஜ.க.வின் எந்த மாதிரியான பிளவுவாதமும்,
மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை
கேள்வி: அமித்ஷா வருகை தி.மு.க.விற்கு ஷாக் அடிக்கின்றதாக கூறுகிறார்களே?
பதில்: அமித்ஷாவை பார்த்து தி.மு.க.விற்கு எதற்கு ஷாக் அடிக்க வேண்டும்? தி.மு.க.வைப் பார்த்து பா.ஜ.க.விற்கு ஷாக் அடித்த காரணத்தால்தான் உள்துறை அமைச்சரே வந்துள்ளார். பா.ஜ.க.வின் எந்த மாதிரியான பிளவுவாதமும், மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. எல்லா தேர்தல்களிலும் மக்கள் திமுகவின் பின்னால் நிற்கிறார்கள். இதை புரிந்துகொள்ள முடியாமல், ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இவர்கள் பேசுவதை பார்த்து எங்களுக்கு எதற்கு பயம்? இவர்களைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 முறை நாட்டின் பிரதமர் தமிழ்நாடு வந்தார். அவரின் வருகையே சொல்லும் யாருக்கு பயம் என்று.
வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றை
‘திராவிட மாடல்’ அரசு செய்துள்ளது
கேள்வி: தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?
பதில்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், அதற்கும் ஒரு குழு அமைத்துள்ளார் முதலமைச்சர். வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றை இந்த அரசு செய்துள்ளது. எங்கு விவாதத்தை வைத்தாலும் நான் வர தயார். ஆனால், ஹிந்தியில் மட்டும் பேசக்கூடாது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டிய எய்ம்ஸுக்காக இன்னமும் மாநில அரசு காத்துக்கொண்டுள்ளது.
அமித்ஷா, மோடி ஆகியோரை பார்த்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்களுக்கு பின்னால் ஒரு சித்தாந்தம் ஒளிந்துகொண்டு மற்ற இடங்களில் அது வெற்றி பெறுகிறது. ஆனால், இங்கு அதனால் வெற்றி பெற முடியாததற்கு காரணம், எங்களிடம் அதற்கான மாற்று சித்தாந்தம் உள்ளது. திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் டில்லியோ, அரியானாவோ, மகாராட்டிராவோ அல்ல; நாங்கள் தமிழ்நாடு.
கேள்வி: தொகுதி மறுசீரமைப்பு பற்றி அமித் ஷா ஏன் பேச மறுக்கின்றார் என்பது குறித்து?
பதில்: எந்த அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வர போகிறது என தி.மு.க. தொடர்ந்து கேள்வி எழுப்பினாலும் எந்தப் பதிலும் பா.ஜ.க.விடம் இல்லை. 800–க்கும் அதிகமான இருக்கைகளை வைத்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்ட என்ன அவசியம்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செய்தால் – கொண்டு வந்தால் தென் இந்தியா முற்றிலும் பாதிக்கப்படும். தென் இந்திய மாநிலங்களின் துணை இல்லாமலே எந்த ஒரு மசோதாவையும் அவர்களால் நிறைவேற்ற முடியும் என்பதுதான் அதற்குள் இருக்கும் சூது. இதை முறியடித்த ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். அதை டில்லிவரைஅனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஹிந்தியைக் கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக சமஸ்கிருத மொழியைக் கொண்டு வருவார்கள்!
கேள்வி: மதுரையில் பா.ஜ.க. நடத்தும் முருகன் மாநாடு குறித்து – உங்கள் கருத்து என்ன?
பதில்: அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டை போல் அல்லாமல், இவர்கள் மதவாதத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பதை மதுரை மக்களே விரும்பவில்லை. தமிழைப் பற்றி இவ்வளவு பேசும் அமித்ஷா, கீழடி ஆய்வையும், இரும்பு பயன்பாட்டின் அறிக்கையையும் ஒன்றிய அரசு திரும்பத் திரும்ப ஏன் நிராகரிக்கிறது எனத் தெரியவில்லை. தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், திராவிடத்திற்கும் எதிரான மனநிலையை அவர்களே வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். அதற்கான தண்டனையை 2026 தேர்தலில் நிச்சயம் பா.ஜ.க. அறுவடை செய்யும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்திய மொழிகளின் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். ஹிந்தியைக் கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக சமஸ்கிருத மொழியைக் கொண்டு வருவார்கள்.
கேள்வி: மோடி, அமித் ஷா ஆகியோரின் வருகை தி.மு.க. அணியின் வெற்றியையே உறுதி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக. இதற்கு முன் எத்தனை முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்தாரோ அத்தனை வாக்கு வித்தியாசம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்குக் கிடைத்தது. தற்போது எத்தனை முறை அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகிறாரோ அத்தனையும் வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச பா.ஜ.க.விற்கு எந்தத் தகுதியும் இல்லை. பில்கிஸ் பானு, மணிப்பூர் போன்றவற்றை பார்த்து மவுனமாக இருந்தார்கள்.
கேள்வி: ஏக இந்தியா என்று பா.ஜ.க. கூறுவது பற்றி…
பதில்: ஒரே தேசம் என்று சொன்னால், ஒடிசாவில் போய், ஒரு தமிழர் உங்களை ஆளலாமா என்று கேட்டவர் எப்படி ஏக இந்தியா, ஒரே தேசம் எனக் கூறமுடியும். பா.ஜ.க.வினர் கூறுவது அனைத்தும் பொய். ஆர்.எஸ்.எஸ்.இன் இலக்கிற்கு மோடியும், அமித்ஷாவும் பகடைக்காய் ஆகியுள்ளனர்.
எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறன் எங்கள் முதலமைச்சருக்கு உண்டு!
கேள்வி: கூட்டணி ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்வார் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
பதில்: கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா கூறியது குறித்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறன் எங்கள் முதலமைச்சருக்கு உண்டு.
இவ்வாறு ஆ.இராசா பேட்டியளித்தார்.