சக்தி யாருக்கு? சாமிக்கா, மின்சாரத்துக்கா?

Viduthalai
1 Min Read

  கடலூர், ஜூன் 8 – கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கடலூர் வட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சின்ன இருசாம் பாளையம் கிராமத்தில் முத்து மாரியம்மன் ஆலய விழா நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து 6.6.2025 அன்று இரவு  சாமி ஊர்வலம் நடைபெற்றது. அய்ந்து பக்தர்கள் சேர்ந்து சாமியை ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அப்பொழுது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் சாமிசிலை உரசியது.

இதில் சாமியை தூக்கிச் சென்ற அய்ந்து பக்தர்கள் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் புதுச்சேரி, அரியாங்குப்பம் மனவெளி பெரியார் நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கர்ணாசந்திரன்(40) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சின்ன இருசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவமணி (22), ஹரி கிருஷ்ணன் மகன் கண்ணன் (55), பெருமாள் மகன் முருகையன் (35) மற்றும் மணிகண்டன் மகன் சிறீவேஷ் (6) ஆகிய நான்கு பக்தர்களும் படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டி சாவடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கர்ணாசந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *