படுக்கை வசதிக்கு இனி முக்கியத்துவம் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பை நிறுத்த முடிவு அய்.சி.எப். அதிகாரி தகவல்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 8- படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு இனி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் சாதாரண இருக்கை கொண்ட வந்தே பாரத் ரயிலின் தயாரிப்பு பணி நிறுத்தப்பட உள்ளதாக அய்.சி.எப், அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே 75-க்கும் மேற்பட்ட இருக்கை வசதிகொண்ட (சேர் கார்) வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏ.சி. வசதி, பயோ கழிப்பறை, தானியங்கி கதவு, நவீன பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதனால், இந்த வகை ரயில்கள் பகலில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதற்கிடையே, இரவு நேரங்களில் நீண்ட தூரம் இயக்குவதற்கு ஏற்ற வகையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்தது.

தயாரிப்புப் பணி நிறுத்தம்

பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல் (பெமல்) மற்றும் பெரம்பூரில் உள்ள அய்.சி.எப். ஆகியவை ஒருங்கிணைந்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை தொடங்கின. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தயாரிப்புப் பணிகள் முழுமையாக முடிந்தன. மிக விரைவில் இந்த ரயில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இருக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க அய்சிஎப் இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன் பின்னர் இருக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்புப் பணியை முழுமையாக நிறுத்திக் கொள்ள உள்ளது. இனிவரும் காலங்களில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *