சென்னை, ஜூன் 8- நமது மண், மொழி, மானம் காக்க தமிழ் நாட்டு மக்களை ஓரணியில் இணைத்து சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று நேற்று (7.6.2025) தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டமன்ற தேர்தல் பணி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க., சட்ட மன்ற தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட்டது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார். 8 மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சார இயக்கம் நம் மண், மொழி, சுயமரியாதையை காக்க தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களிடமும் (2 கோடி குடும்பங்கள்) கொண்டு சென்று அதில் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒரே அணியில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சார இயக்கம் மூலமாக தமிழ்நாடு இந்திய அரசுக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். “அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம். ஒற்றுமையுடன் ஓரணியில் தமிழ்நாடு நிற்கும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காணொலி மூலம் ஆலோசனை
தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான இந்த பிரச்சார இயக்கம் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், – மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று (7.6.2025) ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மை செயலாளர் கே.என்.நேரு,துணை பொதுச் செயலாளர்கள் அய்.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி மற்றும் அமைச்சர் களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.இந்த கூட்டம் 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். திராவிட மாடல் அரசின் திட்டங்கள், சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய பா.ஜனதா அரசிடம் அ.தி.மு.க. அடகு வைத்ததையும் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் துரோக கூட்டணியான பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் முழுமையாக விரட்டியடிக்கப்பட வேண்டும். திராவிட மாடல் அரசு தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிக்காக தி.மு.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டும். இப்பணியில் அயராது உழைக்க வேண்டும். தமிழ் நாட்டில் 7ஆவது முறையாக தி.மு.க.ஆட்சி அமைய வேண்டும். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நமது கூட்டணிதான் நிச்சயம் வெல்ல போகிறது. மீண்டும் நமது ஆட்சிதான் அமைய போகிறது.
கடமைக்காக செய்யக்கூடாது
மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீதம் புது வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இதனை வெறும் கடமைக்காக செய்ய கூடாது. லட்சிய நோக்கமாக கொண்டு செயல்படுத்த வேண்டும்.
நமது அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் விளக்கி கூறி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் 30 சதவீதம் புதுமுக வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் வேண்டும்.’ என்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காலத்தின் கட்டாயம்
இந்த காணொலி கூட்டத்தின் சில நொடிகள் அடங்கிய பதிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் இந்த கூட்டத்தில், ‘நமது மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையில் கீழ் ஒன்றாக இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது” என்று பேசிய காட்சி இடம்பெற்றது.
“இந்த காட்சிப் பதிவு தொகுப்புடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப் படவும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என தி.மு.க.வில் இணைத்திடவும் சொல்லாற்றல்-செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது.
களம் 2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் தி.மு.க.வினரின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.