செஞ்சி, ஜூன் 25 பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல சாமியார்கள் வலம் வருகிறார்கள். இவர்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ‘நானே கடவுள்’ என நாடகமாடிய சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மக்களைக் காப்பாற்றுவதற்காக தான் இந்த பூமியில் மனித உருவில் வந்த கடவுள் என்று சொல்லியபடி, பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதாகவும் நாடகமாடி வந்த செஞ்சி சந்தோஷ்குமார் என்ற சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தன்னை மகாவிஷ்ணு என்றும், தன் இரு மனைவிகளை சிறீதேவி, பூதேவி என்றும் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்குமுன் பழைய பட்டுத்துணிகளை வீட்டுக்கு வீடு சென்று வாங்கி, அதை ஒட்டுப்போட்டு பட்டுத் துணிகள் மொத்தமாக வாங்கும் ஏஜெண்டுகளிடம் விற்றுவந்தவர் – சில நூறுகள் வருவாய் ஈட்டிவந்தவர் தான் ‘சாமியார் அவதாரம்’ என்று கூறி, பெரிய பங்களா உள்பட அனைத்து வசதிகளுடன் குறுகிய காலத்திலேயே மக்களை ஏமாற்றி சம்பாதித்துவிட்டார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.