கி.வீரமணி
3-6-1934 ‘புரட்சி’ ஆசிரியர் ஈ.வெ.கி. அவர்கள் தளை செய்யப்பட்ட இன்னொரு செய்தியினைத் தெரிவிக்கின்றது.
‘புரட்சி’ மீது மன்னார்குடி அடிஷனல் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலிருந்து தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களுக்கு அரஸ்ட் வாரண்ட் வந்து 2-6-34 மாலை 5 மணிக்குப் போலீசாரால் அரஸ்ட் செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டார். 4ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும்”.
இச்செய்திப்படி ஈ.வெ.கி. அவர்கள் கைது செய்யப்படும் அளவிற்கு இலக்கானார் என்பதும், பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் கடமை தவறாது மன்னார்குடிக்குச் சென்றார் என்னும் சூழ்நிலை நமக்கு விளங்குகிறது. ‘சமன்’ எனப்படும் நடுவர் மன்ற அழைப்பு அவருக்குக் காட்டப்படாமலேயே அவரைக் குற்றவாளியாகக் காட்டி அவரைக் கொச்சைப்படுத்தியது அன்றைய காவல்துறை என்ற உண்மையும் நமக்குப் புலப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால் பின்னர் மன்னை மாவட்ட உதவி ஆட்சியரால் அவ்வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இச்செய்தியை 21-10-1934ஆம் நாளிட்ட ‘பகுத்தறிவு’ – கிழமை இதழ் தெரிவிக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரியார் அவர்கள் ‘புரட்சி’யை நிறுத்தி விட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். நமக்குக் கிடைக்கும் 17-6-1934ஆம் நாளிட்ட ‘புரட்சி’ வரை எந்த இதழிலும் அது பற்றிய அறிக்கை எதுவும் காணப்படவில்லை. ஆயினும் 9-12-1934ஆம் நாளிட்ட ‘பகுத்தறிவு’ – கிழமை யேட்டில், “இந்த வருஷத்தில் மாத்திரம் 3 தடவை பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டதாலும்,2,3 தடவை ஜாமீன் கட்டும்படி உத்தரவு செய்யப்பட்டதாலும் 3 கேசுகள் ஏற்பட்டு அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டதாலும் எதிர் வழக்காடியதாலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டங்கள் ஏற்பட்டது” என்னும் அறிக்கை இடம் பெற்றிருப்பதை வைத்து, பெரியார் அவர்களுக்கு விளைந்த கட்டாய நிலைகள் பற்றி நம்மால் கற்பனை பண்ண முடிகிறது.
இவ்வண்ணமாக அரும்பெரும் தன்மான சமனிய பகுத்தறிவுக் கருத்துகளை அள்ளியள்ளித் தமிழினத்திற்கு ஊட்டிக் கொண்டிருந்த ‘புரட்சி’ இதழின் வீரவரலாறு ‘புரட்சி’ தோன்றிய அன்றே, ‘புரட்சி’ எந்த நேரத்திலும் குத்துப்பட்டாலும் படலாம்; எந்த வினாடியும் கொலையுண்டாலும் உண்டாகலாம் என்று பெரியாரவர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டவாறே திடீரென்று முடிவுக்கு வரவேண்டியதாயிற்று!
‚, ƒ, „, ˜z, ˜y, ˜s, ˜d எழுத்துகள் மாற்றம்
சென்ற வாரம் பகுத்தறிவில் எழுத்தில் சீர்திருத்தம் என்று ஒரு சிறு உபதலையங்கம் எழுதி இருந்ததில் இவ்வார முதல் கொண்டு நமது பத்திரிகை பழைய பெயராகிய குடிஅரசு என்னும் பெயராலேயே வெளியிடலாம் என்று கருதி அதில் ‚, ƒ, „ என்கின்ற எழுத்துகளை முறையே ணா – றா – னா – ணை – லை – ளை – னை என்று அச்சில் பிரசுரிக்கப்படும் என்பதாக எழுதி இருந்தோம் அந்தப் படிக்கே விஷயங்களை எழுத்துக் கோர்த்து இருந்தோம். எவ்வளவோ முயற்சி எடுத்தும் குடிஅரசுக்கு இன்று வரை போஸ்டல் உத்திரவு கிடைக்காததால் சனிக்கிழமை இரவு வரை தந்தியை எதிர்பார்த்தும் கடைசியாக இவ்வாரம் பகுத்தறிவு என்னும் பெயராலேயே பிரசுரித்து அனுப்ப நேர்ந்தது. வாசகர்கள் விஷயத்தைப் படிக்கும்போது ணா – றா – னா என்கின்ற எழுத்துகள் வரும் போது அவற்றை ‚, ƒ, „ என்ற உச்சரிப்புப் போலவும், ணை – லை – ளை – னை என்கின்ற எழுத்துகள் வரும் போது அவற்றை ˜z, ˜y, ˜s, ˜d என்ற உச்சரிப்புப் போலவும், என்கின்ற எழுத்துகள் வரும் போது உச்சரிப்புப் போலவும் உச்சரித்துக் கூட்டி வாசித்துக் கொள்ள வேண்டுமாய் கோருகிறோம். இந்தப்படியே சில புஸ்தகங்களும் பிரசுரிக்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
– ‘பகுத்தறிவு’ – 06.01.1935
பின்னர் புரட்சி நிறுத்தப்பட்டு ‘பகுத்தறிவு’, என்னும் பெயரில் புதிய வார ஏடு வெளியானது.
”பகுத்தறிவு”வாரப் பத்திரிகையின் முதல் மாலை முதல் மலர் 26.08.1934 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கைகளைப் பற்றிக் ‘குடிஅரசு”. “ரிவோல்ட்”, “புரட்சி”, “பகுத்தறிவு” (தினசரி) ஆகிய பத்திரிகைகளின் அபிமானிகளுக்கும், வாசகர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டியதில்லை.
சுருக்கமாக, ஒரு வாக்கியத்தில் சொல்லித்தீர வேண்டுமானால். “பகுத்தறிவு “தோன்றலானது, இன்றைய உலக வழக்கில் இருந்துவரும் காரியங்களில் பெரும்பான்மை மக்களால் முதன்மையானதாகவும், இன்றியமையாதனவாகவும் கருதப்படும்.
எங்கும் நிறைந்த இறைவனை “வழுத்தவோ, ”
எல்லாம் வல்ல மன்னனை வாழ்த்தவோ.
”யாதினும் மேம்பட்ட வேதியனை”
வணங்கவோ,
”ஏதும் செய்யவல்ல செல்வவானை”
வாழிய செப்பவோ கருதி அல்ல வென்பதே யாகும்.
மேலும் மனித சமூகத்தில் மவுட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி,மதம்,தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதானமாய்க்கருதி உழைத்துவரும் என்றும் சொல்லுவோம்.
இத்தொண்டாற்றுவதில் “பகுத்தறிவு” வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ அடிமையாகாமல், கொள்வன கொண்டு தள்வன தள்ளி, தானே சுதந்தரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும், ஆற்றலையும் துணையாகக் கொண்டு தன்னாலான தொண்டாற்றிவரும்.
முடிவாய்க் கூறுமிடத்து “பகுத்தறிவு” மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமே ஒழிய, எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும். என்று அதன் முதல் தலையங்கத்தில். குறிப்பிடப்பட்டிருந்தது. (‘பகுத்தறிவு’ – 26.8.1934)
பின்னர் அது குறித்து வெளியான அறிவிப்பு :
எதற்காகத் தெரியுமா?
நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது கஷ்டப் பட்டு இரண்டு அல்லது ஒரு சந்தாதாரரையாவது சேர்த்து, 8 அணாவாவது அட்வான்ஸ் வாங்கி, விலாசத்துடன் நமக்கு அனுப்பிக்கொடுங்கள்.
ஏன்?
பகுத்தறிவு ஒரு தனி மனிதனுடைய சுயநலத் துக்கோ ஒரு தனி வகுப்பாருடைய நன்மைக்கோ நடைபெறுவதல்ல.
ஆனால், இன்று ஆதிக்கத்திலிருக்கும் வகுப்பாருடைய விஷமமும் சூழ்ச்சியும் நிறைந்த எவ்வளவோ எதிர்ப்புகளையும், தொல்லைகளையும் சமாளித்துக்கொண்டு இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்காகவும், ஏழ்மைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பின்தள்ளப்பட்ட மக்களுக்காவும் நடைபெறுகின்றது.
இந்த வருஷத்தில் மாத்திரம் 3 தடவை பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டதாலும் 2, 3 தடவை ஜாமீன் கட்டும்படி உத்திரவு செய்யப்பட்டதாலும். பத்திரிகை விஷயமாய் 3 கேசுகள் ஏற்பட்டு அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டதாலும், கேசுகளை எதிர் வழக்காடியதாலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டங்களேற்பட்டதோடு பத்திரிகை சந்தா எண்ணிக்கையும் குறையத் தலைப்பட்டு விட்டது. ஏஜண்டுகள் பெரும்பாலோர் அதாவது இயக்கத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால் இயக்கத்தில் உள்ளவர்களால் இயக்க நன்மைக்காகப் பாடுபட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் எங்கெங்கு ஏஜண்டாயிருந்தார்களோ, அவர்களது பாக்கிகள் 100க்கு 90 ரூபாய் வீதம் வசூலாகாமல் போய்விட்டதுடன் கண்டித்துக் கேட்கப் பட்டதினால் அவர்களது விரோதத்துக்கும் ஆளாக நேரிட்டுவிட்டது. மற்ற பொது ஏஜண்டுகளும் சிலர் ஒழுங்காய் நடந்து கொள்ளாததால் எலக்ஷனுக்குப் பிறகு பத்திரிகை அனுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
ஆதலால் “பகுத்தறிவு”க்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கருதுகின்ற ஒவ்வொரு தோழர்களும் தயவு செய்து இரண்டு சந்தாதாரர்களையாவது சேர்த்துக் கொடுக்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப்பட்ட வேண்டியவர்களாகி விட்டார்கள். இதைச் சிறிது முக்கியமானதாகக் கருதவேண்டுமாய் வேண்டுகிறோம்.
பத்திராதிபர்,
(‘பகுத்தறிவு’, 2.12.1934)
‘குடிஅரசு’
அடுத்த வாரம் அதாவது ஜனவரி மாதம் 6 ந் தேதி வெளியாகும் பத்திரிகை ‘குடி அரசு’ என்னும் பேரால் (அது நின்று போன 9-வது மாலை 22-வது மலரிலிருந்து 23-வது மலராக) வெளியிடலாம் என்று கருதி இருக்கிறோம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அவசரமாய் நடைபெறுகின்றன. தபால் அதிகாரிகள் அனுமதி அவசரமாய் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ற அறிவிப்பு 30.12.1934 தேதிட்ட பகுத்தறிவு இதழில் வெளியானது. சில அனுமதி கிடைக்காத காரணத்தால் 06.01.1935 அன்று ‘பகுத்தறிவு’ இதழே வெளியானது. ‘குடிஅரசு’ பத்திரிக்கை 13.01.1935 அன்று வெளிவந்தது. அப்போது எழுதபட்ட அதன் தலைங்கத்தில் அதில்,
“குடிஅரசு” பத்திரிகை துவக்கப்பட்டு இன்றைக்கு 11-வது வருஷம் நடக்கின்றது. மத்தியில் ஒரு வருஷ காலம் அது அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டி ஏற்பட்டு அதன் கொள்கைகள் ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ என்னும் பெயரால் வெளியிடப்பட்டு வந்து இப்போது மறுபடியும் 1935-வது வருஷம் ஜனவரி மீ முதல் பழையபடி குடி அரசு என்னும் பெயராலேயே அது வெளியாக்கப்பட்டு முன் நிறுத்தப்பட்டதிலிருந்தே தொடர்ந்து 9-ம் மாலை 23-வது மலராய் வெளிவருகிறது. ஆதியில் ‘குடி அரசு” மனித சமூகத்துக்கு என்ன தொண்டு செய்ய முன் வந்ததோ, அதே தொண்டை எப்படிப்பட்ட கஷ்டமான காலத்திலும், நெருக்கடியான காலத்திலும் பின்னடையாமல் செய்து வந்திருப்பதோடு இப்போதும் அதையே கடைப்பிடித்து தன்னாலான தொண்டாற்ற துணிவுடன் முன் வந்திருக்கிறது.
(‘குடிஅரசு’ – 13.1.1935)
(தொடரும்)