ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (17)
வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
பாடம் 17
‘உள்ளத்தனையது உயரம்’
மெல்பர்ன் இளைஞர் மய்யம் அரங்கினுள் நுழைந்த உடன் தோழர்கள் எழுப்பிய வாழ்த்து முழக்கம் நிகழ்வுக்கான எழுச்சியை ஏற்படுத்தி விட்டது. ஆசிரியர் அவர்கள் வந்திருந்த பார்வையாளர்களின் ஊடே சென்று அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்தும் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஆசிரியரை மிகுந்த அன்புடனும் மதிப்புடனும் வரவேற்று வணக்கம் கூறி மகிழ்ந்தார்கள்.
நிமிர்ந்து நில்லுங்கள் என்று ஜான் முலே அவர்களுக்கு
சால்வையை வீசி அணிவிக்கிறார் ஆசிரியர்
சிட்னி, பிரிஸ்பேன், மெல்பர்ன் ஆகிய மூன்று இடங்களில் ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்த மூன்று கூட்டங்களும் உலக மகளிர் நாளை ஒட்டிஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக மெல்பர்ன் நிகழ்ச்சியின் தலைப்பு ‘தமிழர் கலை, இலக்கிய, வரலாற்றில் பெண்ணியம் ‘என்பதாகும். அதற்கேற்ப மிகச்சிறந்த முறையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினர்கள் மூன்றுபேர். இருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் கரீனா கார்லண்ட், திரு. ஜான் முலே மற்றும் விக்டோரியா மாநில செனட்டரான மிஷேல் ஆனந்தராஜா ஆகியோர். பேச்சாளர்களாக மூன்று பேர் உரையாற்றினர். ரம்யா மனோகரன்,ரேணு கிருஷ்ணபாபு, முஜிபுர் ரகுமான் ஆகியோர். ஆக மூவரில் ஒருவர் ஆண். விழா நிகழ்வுகளை தொய்வின்றி தேவையான குறிப்புகளோடு ஒருங்கிணைத்து இணைப்புரையை வழங்கியவர் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்ட செயற்குழு உறுப்பினர் ராதிகா.
மேடையில் இடதுபுறம் இருந்து டாக்டர் கரினா கார்லண்ட் MP டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா, ஆசிரியர், அருள்மொழி, திரு.ஜான் முலே MP
மெல்பர்ன் நிகழ்ச்சியின் முக்கியப் பொறுப்பாளரான தோழர் அரங்க மூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அவரது உரையில் மெல்பர்னில் இத்தகைய நிகழ்வு முதல்முறையாக நடப்பதையும், ஆசிரியர் அவர்கள் வருகை தந்திருப்பதன் முக்கியத் தையும், சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற நாடாளு மன்ற உறுப்பினர்களின் பணிகளையும் எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினரகள் டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா, திரு.ஜான் முலே ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி “தி கலெக்டிவ் ஒர்க்ஸ் ஆஃப் பெரியார்” என்ற புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார்கள். டாக்டர் கரினா கார்லேண்ட் அவர்களுக்கு நான் சால்வை அணிவித்து அதே நூலை வழங்கினேன்.
திரு. ஜான் முலே அவர்களுக்கு சால்வை அணிவிக்கும்போது ஒரு சுவையான நிகழ்வு நடந்தது. ஜான் முலே அவர்கள் ஆசிரியரை விட நல்ல உயரம். ஆசிரியர் அவர்களால் தனது உயரத்திற்கு சால்வை அணிவிக்க முடியாது என்று எண்ணி அவர் குனிந்து நின்றார். ஆசிரியர் அவர் தோளைத்தட்டி நிமிர்ந்து நில்லுங்கள் என்றார். அவர் அய்யத்துடன் சற்று நிமிர்ந்தார். நேராக நில்லுங்கள் என்று சொன்ன ஆசிரியர் அவர்கள் ஒரு கையால் சால்வையின் நுனியை தோளின் மறுபுறம் வீசி அந்த சால்வையை அணிவித்த நேர்த்தியினை ஜான் முலே அவர்களும், பார்வையாளர்களும் ஆரவாரத்துடன் பாராட்டினார்கள். இக்காட்சியை தமிழ்நாட்டில் ஆசிரியர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கண்டுள்ளோம். ஆஸ்திரேலியாவிலும் இது நடந்ததுதான் சிறப்பு.
அரங்கில் புத்தக விற்பனை.. இடமிருந்து எழுத்தாளர் ஜெயகுமரன், சிவசுதன், ஶ்ரீதேவி , சுரேஷ்
உரையரங்கம் தொடங்கியுடன் ஆஸ்திரேலியா தமிழ் வணிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரான ( Australian Tamil Chamber of Commerce) தோழர் மிதுன்ராஜன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் பற்றியும், அவர்கள் ஆற்றிவரும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைக்கான பணிகளையும் குறிப்பிட்டு சிறந்த அறிமுக உரையை ஆற்றினார். திரு. ஜான்முலே உள்ளிட்ட மூவரும் மக்களை இனம், நிறம், நாடு, பாலினம், பாலியல் தேர்வு ஆகிய காரணிகளால் வேறுபடுத்திப் பார்ப்பதையும் அவர்களுக்கு சம உரிமை மறுப்பதையும் எதிர்த்து தாங்கள் ஆற்றிவரும் செயல்பாடுகளைப் பற்றிக்கூறி ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி உரையாற்றினார்கள். டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா, டாக்டர் கரினா கார்லண்ட் இருவரும் ஒரு பெண்ணாகவும்,சமூகத்தின் பிரதிநிதியாகவும் அரசியல் அதிகாரங்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் கடந்து தாங்கள் செயல்படுவதையும் சாதித்தவற்றையும் குறிப்பிட்டு உரையாற்றினார்கள்.
டாக்டர் கரினா கார்லேண்ட் அவர்களுக்கு சால்வை
இரண்டாவதாக சிற்றுரை அரங்கம் தொடங்கியது. ஊடகவியலாளர் ரம்யா மனோகரன் அவர்கள் The Hindu, Times of India உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றயவர். அவர் ஊடகத்துறையில் பணியாற்றிய தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். குறிப்பாக தான் பத்திரிகைத் துறையில் நுழைந்தபோது தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஜாதியினர் மற்றும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே பத்திரிகையாளர் உலகில் எளிதில் நுழைய முடியும். அத்தகைய எந்தப் பின்புலமும் இல்லாமல் ஆனால் ஊடகவியல் கல்வியில் அரசியல் பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்றாலும் கூட, அவர்களது ஆதிக்கத்தைக் கடந்து உள் நுழைய தான் எதிர்கொண்ட போராட்டத்தையும், மேற்கூறிய பின்னணி உடையவர்களுக்கு அவர்களது பெற்றோரோ உறவினரோ ஏற்கெனவே செல்வாக்கு பெற்றிருப்பதால் ‘அவர்கள் ‘யாரையேனும் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டுமென்றால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் அது நடந்துவிடும்,ஆனால் தன்னைப் போன்றவர்கள் இருபது முறையாவது தொலைபேசியி்ல் தொடர்பு கொண்டு அய்ந்து முறையாவது நேரில் போய் அனுமதி கேட்டால்தான் ஒரு பேட்டி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். தான் சந்தித்த அவமானங்களையும், போராட்டங்களையும் வேதனையுடன் நினைவு கூர்ந்தார். ஒரு காட்டுப்பூனையைப் பார்த்து புலி ஊருக்குள் வந்துவிட்டது என்று ஒரு செய்தி பரவியபோது அதைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அனுபவத்தைக் கூறி எந்தப் பணி கொடுத்தாலும் அதைத் தனக்குரிய திறமையுடன் வெளிப்படுத்தினால்தான் வெற்றிபெற முடியும் என்றும் அழுத்தமாகப் பேசினார். செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் முக்கியத்துறைகளான விளையாட்டு, அரசியல் போன்ற துறைகளில் பெரும்பாலும் ஆண்களைப் பற்றிய செய்திகளே உள்ளன என்பதையும் புள்ளி விவரத்துடன் குறிப்பிட்டு பத்திரிகையாளராக சாதிக்க விரும்பும் பெண்களுக்கு குடும்பம் துணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து உரையாற்றிய நாடகத்துறை செயற்பாட்டாளர் ரேணு கிருஷ்ணபாபு அவர்கள்,தமிழ்த் திரைப்படங்களில் பெண்ணியம் என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆய்வுரையை மிகக் குறைந்த நேரத்தில் வழங்கினார். தான் இளம் வயதில் பார்த்த திரைப்படங்களில் வந்த பெண் மய்யக் கதைகளில் வந்த பெண் பற்றிய கருத்துகளே பெண்ணியம் என்று கருதியதாகவும் குறிப்பாக இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களில் வந்த கதாநாயகிகள் கோபமாகப் பேசுவார்கள்,ஆனால் தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாமல் குடும்பத்திற்காகத் தியாகம் செய்பவர்களாகவே இருந்தார்கள் என்பதையும், அது பெண்ணியம் அல்ல என பின்னாளில் அறிந்து கொண்டதாகவும், பெண்ணியத்திற்கும், போலி பெண்ணியத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வழக்குரைஞர் அருள்மொழியின் உரைகள் தனக்கு உதவியதாகவும், அதன்மூலம் 2000ஆவது ஆண்டிற்குப்பின் தனக்குள் எழுந்த பெண்ணுரிமை பற்றிய கேள்விகளுக்கு 1920 களில் தந்தை பெரியார் அவர்கள் விடை சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டதாகவும் கூறினார். சுதா கொங்கரா, ப.ரஞ்சித், கார்த்திக் 90 சுப்புராஜ் போன்ற இயக்குநர்களின் படங்களில் பெண்ணிய சிந்தனையுள்ள கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன என்பதையும் இன்னும் தேவைப்படும் மாற்றங்களையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மெல்பர்ன் இலக்கியச் சொற்பொழிவாளர் முஜிபுர் ரகுமான் உரையாற்றினார். அவர் ‘இலக்கியத்தில் பெண்ணியம்’ என்ற தலைப்பில், பெண் தலைமையில் இயங்கிய தாய்வழிச் சமூகம் பற்றி ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் எழுதிய ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற நூலில் கூறப்பட்ட செய்திகளையும், ஆண்கள் நல்லவர்களாக , ஒழுக்கமானவர்களாக இருந்தால்தான் ஒரு நாடோ காடோ நிலமோ நன்மையுடயதாக இருக்க முடியும் என்று வலியுறுத்திய அவ்வையார் பாடலையும் எடுத்துக் காட்டினார்.
மேலும் மனமாற்றம் ஏற்பட்டால்தான் பெண்ணுரிமை நடைமுறைக்கு வரும் என்பதற்கு எல்லா வேலைகளிலும் பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கி விட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தையும் தன் தங்கைக்கும் மகளுக்கும் வேலை கிடைக்குமானால் ஒரு ஆண் ஏன் அதை எதிர்க்கப் போகிறான் என்ற கேட்ட தந்தை பெரியாரின் சமூகவியல் சிந்தனையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்றும் சிறப்பாகக் கூறி தன் உரையை நிறைவு செய்தார். ஆசிரியர் அவர்கள் ஒவ்வொருவருடைய உரையையும் கூர்ந்து கேட்டு பாராட்டு தெரிவித்தார்.
இத்தனை உரைகளையும் ஆர்வமாகக் கேட்டுப் பாராட்டிய அவை அடுத்த சிறப்பு உரையரங்கிற்குத் தயாரானது.
(தொடரும்)