சென்னை, ஜூன் 7- அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் என்னென்ன பாடப்பிரிவுகள், பட்டமேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
பட்ட மேற்படிப்பு
பிளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் ஏற்கெனவே சிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்து மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி (Open House 2025) ஜூன் 9ஆம் அன்று நடைபெற உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துறை கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கிண்டி பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறையில் வழங்கப்படும் பிஇ சிவில் இன்ஜினியரிங், பிஇ ஜியோ- இன்பர்மேட்டிக்ஸ், பிஇ சிவில் இன்ஜினியரிங் (தமிழ் வழிக்கல்வி), பிஇ சிவில் இன்ஜினியரிங் (பகுதி நேர படிப்பு) குறித்தும், சிவில் இன்ஜினியரிங் மற்றும் அது தொடர்புடைய படிப்புகளில் வழங்கப்படும் எம்இ, எம்டெக் மேற்படிப்புகள் குறித்தும் விளக்கப்படும்.
முதுநிலை படிப்பாக எம்டெக் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை, எம்இ தொலையுணர்வு மற்றும் புவி-தகவலியல், எம்இ கட்டுமானப் பொறியியல் மற்றும் மேலாண்மை, எம்இ சுற்றுச்சூழல் மேலாண்மை, எம்இ சுற்றுச்சூழல் பொறியியல், எம்இ நீரியல் மற்றும் நீர்வள பொறியியல், எம்இ நீர்ப்பாசன நீர் மேலாண்மை, எம்இ சாயில் மெக்கானிக்ஸ் மற்றும் பவுண்டேஷன் இன்ஜினியரிங், எம்இ கட்டுமானப் பொறியியல், எம்இ போக்குவரத்து பொறியியல் என பலதரப்பட்ட முதுநிலை படிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவில் இன்ஜினியரிங் துறையின் பாறை அரங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். அன்றைய நாள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவில் இன்ஜினியரிங் துறையின் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மய்யங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ்ரகள் ttps://forms.gle/o3nyxh63UBvJxU2f8 என்ற இணையதள இணைப்பில் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு கிண்டி பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை தெரிவித்துள்ளது.