மதுரை, ஜூன் 7- தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 5.6.2025 அன்று தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், சிறீரங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளி லும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்க வேண்டும். பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன
அப்போது, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக்குழு அமைக்கப் பட்டுள்ளது. பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மாணவர்கள் புகார் கடிதங்களைப் போடலாம். இந்தப் புகார் கடிதங்களைப் படித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி மாணவர்களின் உடல்நலம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத் தப்பட்டது. 11 மாவட்டங் களில் உள்ள 11,820 அரசுப் பள்ளிகளில் அறிவுரைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் மாற்றி அமைக்க 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பள்ளிக் கல்வித் துறை கூறியபடி, எஞ்சிய மாவட்டங்களில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுவை விரைந்து மாற்றி அமைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தனர்.