சென்னை, ஜூன் 7- அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்பு செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.97.95 கோடி நிதியானது தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2025-2026ஆம் கல்வியாண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் தொடர் செலவினத்துக்காக அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது.
எனவே, முதல்கட்டமாக 50 சதவீத தொகை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவதற்காக தற்போது நிதி மாவட்டங்களுக்கு விடுவிக்கப் பட்டுள்ளது.
ரூ.97.95 கோடி
அதன்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,476 அரசுப் பள்ளிகளுக்கும் ரூ.97.95 கோடி நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கையடக்கக் கணினிக்கு (டேப்லெட்) சிம் கார்டு வாங்கவும் (ஓர் ஆசிரியருக்கு தலா ரூ.110) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல் மாணவர்களுக்கு தனியாக கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், தூய்மைப் பணிகள், கட்டடப் பராமரிப்பு போன்றவற்றுக்காகவும் பள்ளிகளுக்கான பொருட்கள் வாங்குதற்காகவும் செலவிட வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய காலத்துக்குள் மானியத்தை பயன்படுத்த வேண்டும்.
மேலும், செலவின அறிக்கையை பயன்பாட்டுச் சான்றிதழுடன் இணைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதையை கடக்கும்போது கைபேசியை பயன்படுத்தாதீர் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 7- ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, அலைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும் என, பன்னாட்டு லெவல் கிராசிங் நாளை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ரயில் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது, சிலர் பாதுகாப்பு விதிமுறை பின்பற்றுவதில்லை. இதனால், ரயில்களில் மோதி உயிரிழக்கின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் பன்னாட்டு லெவல் கிராசிங் வாரமாக கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், பன்னாட்டு லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியை, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் கூடுதல் ரயில்வே மேலாளர் தேஜ் பிரதாப் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் எண்- 26 முன்பு, ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி சத்தியசீலன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
ரயில்வே கேட்களை பாதுகாப்பாக கடந்து செல்லக் கோரி வழிகாட்டி துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. ரயில்வே பாதுகாப்பு விதிகளை பார்த்து, கடந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. மூடப்பட்ட ரயில்வே கேட்டை பொதுமக்கள் கடந்து செல்லக்கூடாது என்றும், ரயில் கேட் அருகே தண்டவாளத்தை கடந்து செல்லும் போது, அலைபேசியில் பேசவோ, ஹெட்போனில் பாட்டு கேட்டப் படியோ செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.