உலகமே காலைக் கதிரவனின் ஒளி வீச்சால் சுறுசுறுப்பாக இயங்கும் இனிய காலைப் பொழுது. முகில் கூட்டத்தில் (Mist) மூழ்கிக் கிடந்த நீலமலைச் சிகரம், சோம்பல் முறித்து மெதுவாக விழித்த நேரம். ஆனாலும் நோய்களுக்கு நேரம் ஏது? அன்று எங்களுக்கு ஒரு புதிய கடமை. முதலமைச்சர் கலைஞரின், “மக்களை நாடி மருத்துவம்” என்ற திட்டத்தின் கீழ் ஒரு ஆதிவாசிகள் வசிக்கும் ஒரு சிறிய குடியிருப்பிற்கு நானும், மற்ற மருத்துவக் குழுவினரும் சென்று, அங்கேயே அவர்களைச் சோதித்து அவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டிய கடமை காத்திருந்தது.
காலை 8 மணி. எங்களை அழைத்துச் செல்ல, “பொறி வண்டி” (Geep – General Purpose vehicle) ஆயத்தமாக இருந்தது. மருத்துவக் குழுவினர், மருந்துகளோடும், மற்ற எளிய மருத்துவ பொருள்களோடும், வண்டியில் புறப்பட்டோம். அன்று நாங்கள் போக வேண்டிய இடம் “யானை பள்ளம்” என்ற பகுதி. (யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அந்தப் பெயர்). வண்டி அந்தப் பகுதி வரைச் செல்ல முடியாது. சாலைப் பகுதி ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே முடிந்து விடுகிறது. அங்கிருந்து நடந்துதான் நாங்கள் யானை பள்ளம் பகுதிக்குச் செல்ல வேண்டும். காட்டுப் பகுதியில், ஒற்றையடி பாதையில், நடைப்பயணம்! சுமார் ஒரு மணி நேர நடைப் பயணத்திற்குப் பின், நாங்கள் அடைய வேண்டிய யானைப் பள்ளத்தை அடைந்தோம். ஒரு சிறிய குடியிருப்பு. சுமார் 50 குடிசைகள் உள்ள குடியிருப்பு. வெளி உலகம் என்ற ஒன்றே இருப்பது தெரியாதவாறு சுற்றிலும் மலைத் தொடர்கள். நடுவில் உள்ள ஒரு சிறிய சமவெளியில் அந்தக் குடியிருப்பு.
குழந்தைகளும், சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும், முதியவர்களும் என்று ஒரு இரு நூறு பேர்கள் கொண்ட ஆதிவாசிகள் வசிக்கும் சின்னப் பகுதி அது. நாங்கள் அமர்ந்து மருத்துவப் பணி செய்யக் கூட ஒரு பொது இடம் இல்லை. ஒரு பெரிய மரம் ஊருக்கு மத்தியில் இருந்தது. தென்றல் காற்றின் சிலு, சிலுப்பான இனிய ஓசையும், அதற்கு மேளம் வாசிப்பதுபோல் மரத்தின் இலைகள், கிளைகள் எழுப்பிய நாதமும்! எங்கள் பணியைத் துவக்கினோம். ஒவ்வொரு நோயாளியாகப் பரிசோதித்து, மருத்துவ ஆய்வுகளும் செய்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகள் எல்லாம் கொடுத்துக் கொண்டே வந்தோம். அப்பொழுது…!
ஒரு 45 வயதுள்ள ஒரு பெண்மணி அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி! அவர் முகத்தின் இடது புறம் மிகப் பெரிய வீக்கம். இன்னொரு முகத்தை ஒட்டி வைத்தது போல் அவ்வளவு பெரிய வீக்கம். அந்த அம்மாவை நான் பரிசோதிக்கத் தொடங்கினேன். அந்த அம்மாவின் பெயர் மருதி. வயது 43. “எத்தனை காலமாக இந்த வீக்கம் உள்ளது அம்மா?” என் கேள்வி. “அது கொஞ்சம் வருஷமாகவே இருக்கு” அவர் பதில். “கொஞ்சம் வருஷம்னா ஒரு இரண்டு வருஷம் இருக்குமா?” “அதெல்லாம் தெரியாது. ஆனா பல வருஷமாக இருக்கு.” “சரி, எப்படி ஆரம்பித்தது?” “முதலில் கீழ்நாடியில் ஒரு சின்னக் கொப்புளம் போல் வந்துச்சி. அப்புறம் மஞ்சள் மிளகு எல்லாம் அரைச்சு வச்சோம். மூலிகை இலை, பச்சிலையை எல்லாம் அரைச்சு வச்சிப் பார்த்தோம். இங்கு பக்கத்திலே ஒரு மந்திரவாதி இருக்காரு. அவரிடம் போய் காட்டினோம். அவர், “அம்மக் கட்டுதான், சரியாக்கிவிடலாம் என்று தாயத்து மந்திரிச்சுக் கட்டிவிட்டார். பாருங்க, இதுதான் அந்த தாயத்து” என்று மேற்கையில் கட்டியிருந்தத் தாயத்தைக் காட்டினார். ஆனால் என்னா செஞ்சும் வியாதி சரியாகவில்ல. முதல்லே சின்னதா ஆரம்மிச்சது, நாளாவட்டத்துலே கொஞ்சம், கொஞ்சமா. பெரிசாகிக் கொண்டே வந்துடுச்சு.
இப்ப இவ்வளவு பெரிசா ஆயுடுச்சு. இன்னும் பெரிசாயிடுமோன்னு பயமாயிருக்கு. இவ்வளவு பெரிசாயிட்டதாலே, அந்தப் பக்கமே படுக்க முடியாது” என்று தனக்கிருக்கும் தொல்லையை விளக்கினார். நான் அவரிடம் “வாயைத் திறக்க முடிகிறதா?” என்று கேட்டேன், “பெரிசா தொறக்காது. கொஞ்சம் துறக்கும்” என்றார். “சாப்பிட்றிங்களா?” “சாப்பிடுவேன், ஆனா வாய கொஞ்சமாத்தான் தொறக்க முடியறதால் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவேன்!” நான், “வலி இருக்கிறதா?” “இல்ல, நோவெல்லாம் இல்ல, ஆனா மூஞ்சு கனமா இருக்கு” என்றார்.
அவர் கூறியதையெல்லாம் குறிப்பெடுத்தப் பின் அவரை சோதித்தேன். பொதுவான உடல் பரிசோதனைகள் முடித்த பின், முகத்தைச் சோதித்தேன். முகவாயிலிருந்து, காது வரை இடது புறம் வீக்கம் இருந்தது. தொட்டுப் பரிசோதித்துப் பார்த்ததில் நோய் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. வீக்கம் அழுத்திப் பார்க்க முடியாத அளவு கடினமாக இருந்தது. அந்த வீக்கம், ஒரு வகை “கட்டி” என்பதை உணர்ந்தேன். புற்றுநோய்க் கட்டிக்கு உண்டான அறிகுறிகளும் ஏதுமில்லை. அது புற்று நோயற்ற ஒரு கட்டி தான் என்று உறுதி செய்து கொண்டபின் முகத்திலும், வாயின் உள்ளும் சோதித்தேன்.
கட்டி தாடையின் முன்புறமிருந்து, முழுக் கீழ்த்தாடை முழுவதும் பரவி இருப்பதைக் கண்டுபிடித்தேன். “அம்மா, இது கட்டி. அம்மை கட்டெல்லாம் கிடையாது. ஆப்பரேஷன் செய்துதான் சரி செய்ய முடியும். செஞ்சுக்கிறீங்களா?” என்று கேட்டேன். “அதுக்கெல்லாம் என்கிட்ட துட்டு இல்லீங்க” என்று அந்தம்மா பரிதாபமாகக் கூறினார். “அம்மா, துட்டு எல்லாம் செலவு செய்யவேன்டாம். அரசாங்க ஆஸ்பத்திரியில் இலவசமா செய்கிறேன். வந்து செஞ்சுக்கிறீர்களா?” என்று கேட்டேன், அவர் அருகில் இருந்த உறவினர்கள், “உயிருக்கு ஆபத்தில்லியே அம்மா?” என்று கேட்டனர். “ஒன்றும் பயப்பட வேண்டாம். தைரியமாக வந்து செஞ்சுக்கோங்க” என்று கூறினேன். ஒரு வழியாக அவர்கள் கேட்ட மற்ற சந்தேகங்களை எல்லாம் தீர்த்தபின் அவர்கள் அறுவை மருத்துவத்திற்குச் சம்மதித்தனர். மறுநாள் கூறியபடியே மருத்துவமனைக்கு மருதி, தன் உறவினர்களுடன் வந்தார். நானும் மகிழ்ச்சியோடு அவரை மருத்துவமனையில் சேர்த்தேன்.
அந்தக் காலக் கட்டத்தில் இப்பொழுதுள்ளதுபோல் CT, MRI போன்ற ஆய்வுகள் எல்லாம் கிடையாது. சாதாரண ‘ஊடு கதிர்’ ஆய்வுதான். ஊடு கதிர் எடுத்துப் பார்த்ததில் கையால் உணர்ந்துப் பார்த்ததைவிட மிகவும் பரவியும், பெரியதாகவும் இருந்தது. இரத்தம், சிறுநீர் போன்ற வழமையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அறுவை மருத்துவத்திற்கு இரண்டு, மூன்று குடுவை இரத்தம் தேவைப்படும். எங்கள் மருத்துவமனையில் இரத்த வங்கி சேவை இல்லை. மருதியின் இரத்த வகையைச் சோதித்து, அதே வகை இரத்தம் உடைய கொடையாளிகளை வரவழைத்தோம். மருதியைப் பற்றி அவர்களிடம் விளக்கி, அவருக்கு செய்யப்படும் அறுவை மருத்துவம் பற்றி கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியோடு இரத்தம் கொடுக்க முன்வந்தனர். அறுவை மருத்துவத்திற்கு முன் நாள் அவர்களை வரச் சொன்னேன்.
அவர்களிடமிருந்து மூன்று குடுவைகள் இரத்தம் எடுத்து குளிர்பதனப் பெட்டியில் சேகரித்து வைத்தோம். அறுவை மருத்துவத்திற்கு முன் பரிசோதனைகள் அனைத்தும் முடிவுற்றது. மயக்குநரின் (Anaesthetist) ஆய்வுக்கு நோயாளியை அனுப்பினோம். அவரும், நோயாளியை முழு அளவு ஆய்வு செய்து, நோயாளி அறுவை மருத்துவத்திற்குத் தகுதிச் சான்றளித்தார். எனக்கும் உள்ளுக்குள் சற்று பதட்டமாக இருந்தது. அதுவரை எத்தனையோ பேருக்குக் கட்டிகளை அறுவை மருத்துவம் மூலம் அகற்றியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை இதுவரை நான் பார்த்ததுமில்லை, அகற்றியதும் இல்லை. நோயாளிக்கு நல்ல முறையில் அறுவை மருத்துவம் செய்து, கட்டியை அகற்றி நல்லபடி வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமே என்ற பதட்டம் அதிகமாகவே இருந்தது. அந்த இரவு இந்த நினைவுகளால் தூக்கமின்றி போனது. முகத்தின் கீழ்நாடி எலும்பை முழுவதும் துண்டாக்கி எடுக்க வேண்டும். முகம் அழகின்றி ஒரு புறம் சப்பையாகி விடும். அது அசிங்கமாகத் தெரியாமல் இருக்க என்ன செய்வது என்று சிந்தித்தேன். அந்த இடத்தில் விலா எலும்பை அந்த அம்மாவின் நெஞ்சுப் பகுதியிலிருந்து எடுத்துப் பொருத்தலாம் என்று முடிவெடுத்தேன்.
நம் உடலில் விலா எலும்புகள் பக்கத்திற்கு 12 ஆக மொத்தம் 24 விலா எலும்புகள் உள்ளன. நம் நெஞ்சின் உள் அமைந்திருக்கும் இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதுகாப்பது இந்த விலா எலும்புகள்தான். இந்த 24 எலும்புகள் பின்புறம் முதுகெலும்பில் இருந்து துவங்கும். இவற்றில் ஏழு எலும்புகள் முன்னோக்கி வந்து நேரடியாக நெஞ்செலும்பில் இணைந்து இருக்கும். மீதி மூன்று விலா எலும்புகள் குறுத்தெலும்புகளால் (Cartirages) ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். கடைசி இரண்டு விலா எலும்புகள் முன்புறம் இணைப்பு இன்றி இருக்கும். அவற்றை ‘தொங்கும்’ அல்லது ‘மிதக்கும்’ (Hanging Floating ribs) விலா எலும்புகள் என்று அழைப்போம்.
அந்தக் கடைசி எலும்பை (Floating 12th rib) எடுத்து அதை முகத்தில் பொருத்துவது என்ற முடிவெடுத்தேன். இந்த சிந்தனைகள் முடிவுற்று,மனம் அமைதியடைந்த வேளையில் இரவும் முடிவுற்று விட்டது. அறுவை மருத்துவம் செய்ய வேண்டிய நாளும், நேரமும் நெருங்கியது. என்னுடன் பணியாற்றிய வேறு இரண்டு மருத்துவர்கள், மயக்குநர் ஆகியோருடன் அறுவை மருத்துவ அரங்கிற்குச் சென்றேன். நோயாளி அறுவை மருத்துவ மேசையில் படுத்திருந்தார். வழமையான அறுவை மருத்துவ முன் மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்டன. முக கீழ்த்தாடை எலும்பை எடுத்து, வாயின் உள் பகுதியில் தையல் போட வேண்டி இருக்கும் என்பதால் மயக்க மருந்துக் குழாயை மூக்கு வழியாகச் (Naso endotracheal route) செலுத்தச் சொல்லி மயக்குநரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் அதை, அவ்வாறு செலுத்தி நோயாளியை மயக்கமடையச் செய்தார்.
நான் அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். கீழ் உதட்டின் நடுப்பகுதியிலிருந்து கீறி, கீழ் தாடையை ஒட்டி கீரலை கழுத்துப் பகுதியில் நீட்டி காது வரைக் கொண்டுச் சென்றேன். இரத்தக் குழாய்களைக் கட்டி இரத்தம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தி, கட்டி இருக்கும் பகுதியை அடைந்தேன். கீழ்த்தாடை முழுவதும் கட்டி படர்ந்து இருந்தது. சதைப் பகுதிகளை மெல்ல விலக்கி கட்டியால் பாதிப்படைந்த எலும்பு முழுவதையும் தனியாக்கினேன். கட்டி, எதிர்பார்த்ததைவிட மிகவும் பெரியதாக இருந்தது.
எலும்போடு இருந்த அனைத்து இணைப்புகளையும் விலக்கி, அடுத்தப் புற நல்ல எலும்பிலிருந்து பிரித்து, எலும்போடு இணைத்துள்ள கட்டியை முழுமையாக பிரித்தெடுத்து, முகத்திலிருந்து அகற்றினேன். மார்பு எலும்பு எடுக்க நெஞ்சுப் பகுதியில் கீறி 12ஆவது மிதக்கும் விலா எலும்பையும் எடுத்தோம். அந்த விலா எலும்பை கீழ்த்தாடையின் மற்ற எலும்போடும், காதின் முன்பகுதியில் இருந்த எலும்போடும் வெற்றிகரமாகப் பொருத்தினேன். முகத்தின், தசைகள், தோல் ஆகியவற்றை தையலிட்டு மூடினேன். முகத்தில் குறைபாடு தெரியாத அளவில் அறுவை மருத்துவம் முடிந்தது.
நோயாளி சிறப்பான முறையில் எந்தத் தொல்லையுமின்றி 8ஆம் நாள் தையல்கள் அகற்றப்பட்டு, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த மருத்துவம் செய்து அவருக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. மருதி எப்பொழுதாவது யானைப் பள்ளத்திலிருந்து குன்னூர் வந்தால் என்னை சந்திக்காமல் இருக்கவே மாட்டார். மிகவும் வருந்தத்தக்க விதமாக ஒரு ஆறு மாதத்திற்கு முன் மாரடைப்பால் அவர் மறைந்த செய்தி கிடைத்தது. நானும், எனது நண்பர்களும் அங்கு சென்று இறுதி மரியாதை செலுத்திவிட்டு வந்தோம்.
– மருத்துவம் தொடரும்…