நமது கருத்துகளை மற்றவர்களுக்கு தெரிவிக்க உதவும் கருவியாக இருப்பது மொழி. அந்த வகையில் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள் செம்மொழி என்ற சிறப்பு அங்கீகாரத்தை சில மொழிகளே பெற்றிருக்கின்றன. செம்மொழி என்றால் என்ன? எந்த மொழிகள் எல்லாம் செம்மொழி யாக இருக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்!
செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழைமை அடிப்படையில் கொடுக்கப்படும் சிறப்புப் பெருமை ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத் தேர்ந்தெடுக்க அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும், பழைமையானதாகவும் இருக்க வேண்டும். 16 செவ்வியல் தன்மை களான தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என்பனவற்றை உள்ளடக்கிய மொழியாக இருப்பதையே செம்மொழி என்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட மொழியானது 1,500 முதல் 2 ஆயிரம் ஆண்டுகள் வரை யிலான வரலாற்றையும் பண்டைய இலக்கியங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். அந்த வரிசையில் இந்திய மொழி களில் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 ஆம் ஆண்டு இதே நாளில் ஜூன் 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தார்.
இந்திய அரசால் இதுவரை 11 மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி,பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி போன்ற மொழிகள் ஆகும். தமிழில் உள்ள சங்க இலக்கிய நூல்களும், காப்பியநூல்களும், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களும் தமிழ் செம்மொழியாக மாறுவதற்கு முக்கியமான காரணங்களாய் திகழ்கின்றன.