ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்
சில பாடங்கள் (16)
வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
பாடம் 16
கொள்கைப் பணிக்கே வாழும் மாண்பு
மெல்பேர்ன் நகரில் அரங்க மூர்த்தி அவர்களுடைய வீட்டில் நடை பெற்ற குடும்ப சந்திப்பில் இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை திராவிடர் கழகக் குடும்பத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கும்பகோணம் மாவட்டம் சாக்கோட்டையில் திராவிடர் தொழிலாளர் சங்கத்தில் செயலாற்றிவரும் குமரவேல் அவர்களின் மகன் இளையமதி, தந்தை பெரியாரின் தேவையை அவரது சிந்தனைகளை தங்கள் அனுபவத்தால் உணர்ந்த ஆத்தூர் தோழர் கார்த்திக், எழில்குமரன் போன்ற இளைய தலைமுறையினரும் பங்கேற்றது மட்டுமன்றி சுயமரியாதைக் கொள்கைக் குடும்பத்துடன் திருமண உறவு கொண்டதன் மூலம் இந்த இயக்கத்தையும் ஆசிரியரையும் அறிந்து கொண்ட பெண்களும் பங்கேற்று தங்கள் எண்ண ஓட்டங்களை எடுத்துரைத்தது மகிழ்ச்சி அளித்தது.
கூட்டத்திற்குப் புறப்படும் முன்..
குறிப்பாக தோழர் விவேக் அவர்களின் மாமியார் திருமதி வசந்தி அவர்கள் தந்தை பெரியாரின் தத்துவம் மற்றும் நமது இயக்கம் பற்றி உளப்பூர்வமாகப் பாராட்டியதும், தோழர் பாலாஜி அவர்களின் மாமியார் மல்லிகா அவர்கள் பேசியதும், தோழர் ஷீலா,தோழர் ரேணு, தோழர் சரண்யா ஆகியோரின் உரைகளும் ‘சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வதைப் போலவே மிக முக்கியமானது அதனை வாழ்வியல் கொள்கையாக கடைப்பிடித்துக் காட்டுவது; அதன்மூலம்தான் பழமை நம்பிக்கையில் இருப்பவர்களுக்கும், புதிய இளைஞர்களுக்கும் தந்தை பெரியார் கொள்கையின் மீது ஈர்ப்பும் மதிப்பும் ஏற்படும். அதனைப் பின்பற்றினால் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்படும்’என்று ஆசிரியர் அவர்கள் சுயமரியாதை இணையேற்பு விழாக்களில் தொடர்ந்து எடுத்துக் கூறி வரும் கருத்தை உறுதிப் படுத்துவதாக இருந்தது.
ஆசிரியருடன் திருமதி வசந்தி.
அதேபோல பல்வேறு துறைகளில் பணியாற்றும் இளைஞர்களை அங்கு சந்தித்தோம். ரம்யா மனோகரன் என்ற தோழர் The Hindu, Times of India,ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். தற்போது ஊடகத்துறையில் ஆய்வாளராக செயலாற்றி வருகிறார். அவரது இணையர் ஜெரமையா இருவரும் பங்கேற்று தங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர். ஆஸ்திரேலியாஅரசுப் பணியிலும், ஊடகத் துறையிலும் பணியாற்றியபடி கொள்கைப் பணியும் ஆற்றிவரும் பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் ராதிகா தன் மகள்களுடன் வந்து கலந்து கொண்டு உரையாற்றினார். இலக்கியச் சிந்தனையாளரும் புகழ்பெற்ற பேச்சாளருமான முஜிபுர் ரகுமான் அவர்களும் பங்கேற்று உரையாற்றினார்.
ஆசிரியருடன் எழில் குமரன்.
(பெரியார் நூலக வாசகர் வட்டம்
பஞ்சாட்சரம் அவர்களின் பெயரன்)
அனைத்திற்கும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது ஆஸ்திரேலியா தொல்காப்பிய மன்றத்தின் தலைவரும்,சிறந்த தமிழறிஞருமான தமிழ்ச்செம்மல் நடேசன் சுந்தரேசனார் அவர்களின் பங்கேற்பாகும். அவர் ஆசிரியருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஆஸ்திரேலியத் தோழர்களுடன் தொடரும் தனது கொள்கைப் பயணம் பற்றிக் குறிப்பிட்டு வாழ்த்துரையாற்றினார். ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர்அண்ணாமலை மகிழ்நன் மெல்பேர்ன் தோழர்களின் செயல்பாடுகளைப் பாராட்டி உரையாற்றினார்.
தமிழ்ச்செம்மல் நடேசன் சுந்தரேசனார் அவர்களுக்கு
ஆசிரியர் சால்வை அணிவிக்கிறார்
தொடர்ந்து நான் உரையாற்றினேன்.
இறுதியாக ஆசிரியர் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறி கொள்கை வாழ்வியல் குறித்து உரையாற்றினார். குறிப்பாக வாழ்வின் முன்னேற்றம் தேடி ஆஸ்திரேலியா வந்துள்ள தமிழர்கள் அந்நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து அனைவருடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்றும், தந்தை பெரியாரின் தொண்டால், திராவிட இயக்க ஆட்சியால் நாம் பெற்ற பலன்களை, முன்னேற்றத்தை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். குடும்ப சந்திப்பை சிறப்பாக ஏற்பாடு செய்த அரங்க மூர்த்தி அவர்களையும், அவரது இணையர் மைதிலி அவர்களையும் பாராட்டினார். அதன்பின் அருமையான விருந்துடன் குடும்ப சந்திப்பு நிறைவு பெற்றது.
அரங்க மூர்த்தி குடும்பத்தினருடன் ஆசிரியர்.
உடன் மைதிலி, அருள்மொழி அரங்க மூர்த்தி, மகள் மான்யா
மெல்பேர்ன் நகரின் முதல் நிகழ்வு இப்படிக் கொள்கைக் கொண்டாட்டமாக அமைந்த மகிழ்வுடன் ஆசிரியர் அவர்கள் “ நாளை தான் நமக்கு கடைசி தேர்வு “ என்று நினைவுபடுத்தி விட்டு ஓய்வெடுக்கச் சென்றார்.
ஆம், மறுநாள் 22.3.2025 அன்று மாலை மவுன்ட் வேவர்லே என்ற பகுதியில் அமைந்துள்ள இளைஞர் மய்யம் Mount Waverley Youth Centre என்ற அரங்கில் நடக்கும் பொதுக்கூட்டம்தான் ஆஸ்திரேலியாவில் ஆசிரியரும் நானும் பங்கேற்கும் கடைசிப் பொது நிகழ்ச்சி. அதாவது பொது அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கடைசி; மற்றபடி பேட்டிகள்,குடும்ப சந்திப்புகள், காணொலி நிகழ்ச்சிகள் எல்லாம் கணக்கற்றவை.
இடமிருந்து தோழர் கார்த்திக், அருள்மொழி
ஆசிரியர், ‘தமிழ்ச்செம்மல்’ நடேசன் சுத்தரேசனார்
இவற்றுக்கு இடையில் ஆசிரியர் அவர்களை வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தவர்கள் எண்ணிக்கை அதிகம். அனைத்தையும் ஏற்றுக் கொள்ள நேரமில்லை. ஓரிரண்டு இடங்களுக்கு தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டி இருந்தது. அதற்கும் நேரத்தை ஒதுக்கி சென்று வருவது ஆசிரியருக்கு உடல் நலிவையே ஏற்படுத்தியது. எனவே மறுக்க முடியாத இரு அழைப்புகளை மட்டுமே ஆசிரியர் ஏற்றார்.
குடும்ப சந்திப்பில் ஆசிரியர் உரையாற்றுகிறார்
அத்தகைய ஓர் அன்பழைப்பை ஏற்று 22.3.2025 அன்று காலை ஆசிரியரும், தோழர் கபிலனும் மதிய விருந்திற்குச் சென்று வந்தார்கள். நானும், அண்ணன் மகிழ்நனும் மெல்பேர்னில் வசிக்கும் மருத்துவர் பவானி அவர்கள் வீட்டிற்குச் சென்று வந்தோம். மதியம் மிகக் குறைந்த நேரம் தான் ஆசிரியருக்கு ஓய்வு. மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி. எனவே உடனே தயாராகி விட்டோம்.
எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்
மெல்பேர்ன் நகரம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைவிட, மெல்பேர்ன் கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மெல்பேர்ன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் தமிழிலும் அச்சிட்டுப் பரப்பப் பட்டிருந்ததால் சில புதிய எதிர்ப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்து அவர்கள் பரவ விட்ட ஒரு எதிர்ப்புப் பிரச்சாரம் மெல்பேர்ன் நிகழ்ச்சி களை கட்ட காரணமாகி விட்டது.
அண்ணாமலை மகிழ்நன்
இத்தகைய எண்ணங்களுடன் ஆசிரியர் அவர்களை அழைக்கச் சென்றபோது அவர் எங்களுக்கு முன் தயாராகி அமர்ந்து பேசவேண்டிய செய்திகளின் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். எந்த ஒரு நிகழ்ச்சியையும் கூட்டத்தையும் தான் பாடம் நடத்த வேண்டிய பல்கலைக்கழக வகுப்பாக எண்ணி குறிப்புகளோடும், ஆதாரங்களோடும் மேடையேறும் தலைவர் ஆசிரியர் மட்டும்தான்.
தோழர் சிவா
எங்களைப் பார்த்தவுடன் புறப்படலாமா என்று கேட்டபடி தன் புத்தகப்பை காரில் ஏற்றப்பட்டதா என உறுதி செய்துகொண்டு காரில் அமர்ந்தார்.
தோழர் சுப்ரமணியன்
குறித்த நேரத்தில் அரங்கின் வாயிலுக்கு எங்களை அழைத்துச் சென்று விட்டார் அரங்க மூர்த்தி. ஆனால் சற்று நேரம் பொறுத்து உள்ளே செல்லலாம் என்றார் . ஏன் காத்திருக்கிறோம் என்ற கேள்வியுடன் சில நிமிடங்கள் கழிந்தன. வாருங்கள் என்ற அழைப்பு கிடைத்தவுடன் எங்களை அரங்கத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்.
தோழர் ராதிகா
அரங்கில் நுழையும்போதே தந்தை பெரியார் வாழ்க ! தமிழர் தலைவர் வாழ்க !! என்று தாயுமானவன் பாஸ்கரனார் தலைமையில தோழர்கள் முழக்கம் எழுப்பினார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் இயக்க மாநாட்டிற்குள் நுழைந்தது போல இருந்தது. அதற்காகத்தான் சிலநிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.
தோழர் விவேக்..
தோழர் சுரேஷ்
தோழர் ஜெரமையா
ஊடகவியலாளர் ரம்யா மனோகரன்
முஜிபுர் ரகுமான்
(தொடரும்)