பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும்
அரசியல், எதார்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்: இல்லையென்றால் அரசியலால் பயனில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எந்த ஓர் அரசியல் ஏற்பாட்டையும் பற்றிக் கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அதன் ஆதார அடிப்படையைப் பரிசீலிப்பது அவசியம்.
“ஆதார அடிப்படை” என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று சிலர் வினவலாம். அரசியல் திட்டத்தை எந்த ஒரு சமுதாயத்துக்குப் பிரயோகிக்கிறோமோ அதன் சமூக அமைப்பையே இங்கு அர்த்தப்படுத்துகிறேன்.
அரசியல் அமைப்பானது சமூக அமைப்பின் மீதுதான் அமைந்துள்ளது என்பதை நிரூபிப்பதற்கு எந்த வாதங்களும் தேவையில்லை. அரசியல் அமைப்பின்பால் சமூக அமைப்பு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் அய்யமில்லை. சமூக அமைப்பு அரசியல் அமைப்பின் செயல்பாட்டை மாற்றலாம்; அதைச் செல்லுபடியற்றதாக்கலாம். இன்னும் சொல்லப்போனால் அதனைக் கேலிக் கூத்தானதாகவும் ஆக்கலாம்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் சமூக அமைப்பு ஜாதி முறையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ஹிந்து நாகரிகத்தின் கலாச்ஜாரத்தின் ஒரு பிரத்தியேக சிருஷ்டி, படைப்பு.
ஜாதி முறையைப் பற்றி அனைவருக்கும் தெரியும், எனவே அது குறித்து இங்கு விவரமாகக் கூற வேண்டியதில்லை. மொழிவாரி மாநிலங்கள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதைப் பீடிகை எதுமில்லாமல் நேரடியாகவே கூற முடியும்.
ஜாதி முறையில் நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய சில பிரத்தியேக அம்சங்கள் இருக்கின்றன:
(1) எந்த ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் ஒரு பெரும்பான்மை ஜாதியினரும் சிறு சிறு ஜாதிகளும் இருப்பதைக் காணலாம். கிராமத்திலுள்ள பெரும்பாலான நிலம் பெரும்பான்மை ஜாதியினருக்கே சொந்தமாக இருக்கிறது. இதனால் சிறு எண்ணிக்கையிலுள்ள மற்ற ஜாதியினர் பொருளாதார ரீதியில் பெரும்பான்மை ஜாதியினரைச் ஜார்ந்திருக்க வேண்டியுள்ளது: அவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டியுள்ளது.
(2) ஜாதி முறையில் ஏற்றத் தாழ்வு நிலவுவது மட்டுமல்ல, அந்த ஏற்றத்தாழ்வு படிப்படியான முறையிலும் அமைந்துள்ளது. எல்லா ஜாதிகளையும் சமத்துவமானவை என்று கூற முடியாது. அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கின்றன. அவற்றிடையே வெறுப்பும் துவேஷமும் சில சமயங்களில் ஏறுமுகமாகவும் சில சமயங்களில் இறங்குமுகமாகவும் உள்ளன.
(3) ஒரு தேசத்திற்குரிய தனித்தன்மையும் பெருமிதமும் ஒரு ஜாதிக்கு உண்டு. எனினும் ஜாதிகளின் தொகுப்பைச் சிறிய, பெரிய தேசங்களின் தொகுப்பாகக் கருதுவது தவறு.
இந்த விஷயத்தைப் புள்ளிவிவரங்களுடன் இங்கு விளக்க முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன். இவை போன்ற விஷயங்களில் தகவல் திரட்டுவதற்கு ஒரே ஆதாரமாக இருக்கும் மக்கட் தொகைக் கணக்கெடுப்பு எனக்கு உதவக் கூடியதாக இல்லை. இந்திய மக்கட் தொகைக் கணக்கெடுப்பு முறை தோன்றியதிலிருந்தே ஜாதிகள் சம்பந்தப்பட்ட அட்டவணைகளை வெளியிடுவது ஒரு முக்கிய அம்சமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மக்கட் தொகைக் கணக்கெடுப்பில் இந்த அட்டவணைகள் அறவே நீக்கப்பட்டு விட்டன. இந்திய அரஜாங்கத்தின் உள்துறை அமைச்சர்தான் இந்த நீக்கத்துக்குப் பொறுப்பானவர். “அகராதியில் ஒரு குறிப்பிட்ட சொல் காணப்படவில்லை என்றால், அந்தச் சொல் எதை அர்த்தப்படுத்துகிறதோ அந்த விஷயமே இல்லாததுதான் இதற்குக் காரணமாக இருக்கும்” என்று விந்தையான முறையில் அவர் இதற்கு விளக்கம் தருகிறார். இந்தக் கணக்கெடுப்பைத் தயாரிப்பவர்களின் அற்ப அறிவுத் திறத்துக்காக நாம் அனுதாபம்தான் பட வேண்டும்.
ஜாதி முறையில் ஏற்றத் தாழ்வு நிலவுவது மட்டுமல்ல, அந்த ஏற்றத்தாழ்வு படிப்படியான முறையிலும் அமைந்துள்ளது. எல்லா ஜாதிகளையும் சமத்துவமானவை என்று கூற முடியாது. அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கின்றன. அவற்றிடையே வெறுப்பும் துவேஷமும் சில சமயங்களில் ஏறுமுகமாகவும் சில சமயங்களில் இறங்குமுகமாகவும் உள்ளன.
அரசியல் ஜாதி முறையால் ஏற்படும் விளைவுகள் வெள்ளிடை மலை; கைப் புண்ணுக்குக் கண்ணாடித் தேவையில்லை. எந்த ஒரு பிரதிநிதித்துவமுள்ள அரஜாங்கத்துக்கும் தேர்தல்கள் தான் அடித்தளம்: ஒற்றை உறுப்பினர் தொகுதிகளின் அடிப்படையிலேயே இந்த நாட்டின் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத் தேர்தல்களில் ஜாதி முறை எத்தகைய பிரதிபலிப்பை ஏற்படுத்தி வருகிறது. எப்படி ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி வருகிறது. இவ்விஷயத்தில் அது எவ்வாறு புகுந்து விளையாடி வருகிறது என்பது அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
தேர்தல்களில் ஜாதி முறை ஏற்படுத்தும் விளைவுகளைப் பின் கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம்:
(1) வாக்கெடுப்பு எப்போதும் வகுப்புவாரி அடிப்படை யிலேயே நடைபெறுகிறது. வாக்காளர் தனது சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்; போட்டியிடு பவர்களில் மிகச் சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதில்லை.
(2) வகுப்புவாதப் பெரும்பான்மை காரணமாகப் பெரும்பான்மை சமூகமே சம்பந்தப்பட்ட இடத்தைக் கைப்பற்றுகிறது.
(3) பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி சிறுபான்மை சமூகத்தினர் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
(4) பெரும்பான்மை சமூகத்தினர் நிறுத்தும் வாக்காளரை எதிர்த்துப் போட்டியிட்டு சிறுபான்மை சமூகத்தினரின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்குத் தேவையான வாக்குகள் சிறுபான்மை சமூகத்தினருக்கு இருப்பதில்லை.
(5) ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பின் காரணமாக, மேல் ஜாதி சமூகங்களைச் (பெரும்பான்மையினர்) சேர்ந்த வாக்காளர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க ஒரு போதும் மனமுவந்து முன்வருவதில்லை. ஆனால் அதே சமயம் சமூக ரீதியில் அடி மட்டத்திலுள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர் பெரும்பான்மை சமூகத்தின் வேட்பாளருக்கு வாக்களிப்பதில் பெருமிதம் கொள்கின்றனர்.
காங்கிரஸ் எப்போதுமே வெற்றி பெறுகிறது; இது தெரிந்த விஷயம். ஆனால் காங்கிரஸ் ஏன் வெற்றி பெறுகிறது என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. காங்கிரஸ் மிகவும் செல்வாக்கு பெற்றிருக்கிறது என்று இதற்குப் பதில் கூறலாம். ஆனால் காங்கிரஸ் பெரும்பான்மையினராக உள்ள ஜாதிகளைகளைச் சேர்ந்த வேட்பாளர்களையே காங்கிரஸ் எப்போதும் நிறுத்துகிறது என்பதே இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும். ஜாதி முறையைத் தனது சுயநல நோக்கத்திற்குப் பயன்படுத்தியே காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் போது இந்தக் கொடிய விளைவுகள் மேலும் கூர்மையடையும். சிறுபான்மை சமூகத்தினர் நசுக்கப்படுவர். அப்படி நசுக்கப்படவில்லை என்றாலும் கொடிய அடக்குமுறைக்கும் வன்நெஞ்சக் கொடுமைக்கும் அவர்கள் உள்ளாவர். அவர்களுக்கு எதிராக நிச்சயம் அப்பட்டமாகப் பாரபட்சம் காட்டப்படும்; சட்டத்தின் முன்னால் அவர்களுக்குச் சமத்துவம் மறுக்கப்படும்; பொது வாழ்க்கையில் சமத்துவ வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
தேசங்களின் வரலாற்றையும் அவற்றின் சித்தாந்தங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் பற்றி ஆக்ஷன் பிரபு ஆழமாக, சீரிய முறையில் ஆராய்ந்துள்ளார். அவர் கூறுகிறார்:
“பழைய ஐரோப்பிய அமைப்பில் தேசிய இனங்களின் உரிமைகள் அரஜாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை; மக்களும் அவற்றை வலி யுறுத்தவில்லை; அந்த உரிமைகள் வேண்டுமென உறுதியாகக் குரல் எழுப்பவில்லை. தேசங்களின் நலன்களுக்காக அல்லாமல் ஆளும் குடும்பத் தினரின் நலன்களை அனுசரித்தே எல்லைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன; மக்களின் விருப்பங்களை எவ்வகையிலும் கணக்கெடுத்துக் கொள்ளாமல் ஆட்சி நிர்வாகம் நடத்தப்பட்டது. சகல சுதந்திரங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டன; தேசிய சுதந்திரக் கோரிக்கைகள் பெரிதும் உதாசீனம் செய்யப்பட்டன. ஓர் இளவரசிக்கு ஒரு ராஜ்யமே சீதனமாகத் தரப்பட்டது என்று பெனலன் கூறுகிறார்.
– ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
(தொகுதி 1) நூலிலிருந்து