உடலைப் பொறுத்து தொற்றுநோய்கள் வெகு வேகமாகப் பரவுகின்றன!
கோவிட் – 19 என்ற தொற்று பல கோடி உலக மக்களுக்கு பற்பல நாடுகளிலும் பயங்கரமாகப் பரவியதோடு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டவர்களில் பல லட்சம் மக்கள் உயிரைப் பறி கொடுத்த பரிதாப நிலையும் நாம் பார்த்த ஒன்று! (2021)
அது விட்டு விட்டு பற்பல ‘அவதாரங்களை’ எடுத்து இன்னமும் மனித வர்க்கத்தைத் துன் புறுத்திக் கொண்டேதான் உள்ளது!
அது மட்டுமா?
பன்றிக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் என்பது போன்ற,
பலவித ‘உயிர்க்கொல்லி’ வைரஸ் காய்ச்சல் வகையறாக்கள்.
அவ்வப்போது மருந்துகள் தடுப்பூசிகள், எல்லாம் கிடைத்ததால் பலரும் நலம் பெற்று வாழத் திரும்பினர்!
எனவே உடல் நோய்களுக்கு சிகிச்சை தர மருந்துகள் (ஊசி மருந்துகள் உள்பட) பல, அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்டதால் அவை தடுப்பணைகளாக அமைந்தும் அல்லது மீள் சிகிச்சை மூலமும் தேறிட வாய்ப்புகள் உண்டு.
ஆனால் மனிதர்களின் மன நோய்கள் பலவற்றிற்கும் மருந்துகள் இனி தேடிக் கண்டுப்பிடிக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன!
எளிதில் அவை கிட்டுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.
இவ்வரிசையில் பல விஷயங்கள் உண்டு. முதலில் மனிதனின் விளம்பர ஆசைகள் ஒருதனி ரகமாக ‘பெருஉரு’ (விஸ்வரூபம்) கொள்ளுவது மிகப் பெரும் கொடுமையாகும்!
சிலர், அதுவும் மடாதிபதிகள் ‘பட்டணப் பிரவேசம்’ என்ற ஒன்று செல்வதை எவ்வளவு டாம்பீகமான விழாவாக – பகட்டு, பவிசுடன் பல்லக்கில் அமர்ந்து கொண்டு – மனிதக் கழிவை மனிதனே சிற்சில ஊர்களில் இன்னமும் தலையில் சுமந்துகொண்டு அதற்குரிய ஊதியப்படி வாழ்வாதாரத்தைப் பெறும் அவலம்போல, வாழும் மனிதனை வளர வேண்டிய மனிதர்கள் வயிற்றுப்பாட்டிற்காக சுமந்து தூக்கிச்செல்லும் அவலம் சில ஊர்களில், சில மடாதிபதிகளால் நடத்தப்படுவதுபோல, தங்கள் செல்வத்தை சுய விளம்பரம் செய்து, ‘பெரிய மனிதர்களா’க்கிக் கொள்ளுகிறார்கள் – தங்களைத் தாங்களே!
என்னே விசித்திரம்!
பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, தாங்களே முழு முதலீடு செய்து திரைப்படங்களில் நடித்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளுவது ஒருவகை விளம்பர வியாதிதானே!
சில மாதங்களுக்கு முன் பிரபல ‘டிபார்ட் மெண்டல் ஸ்டோர்ஸ்’ வணிகக் கடை முதலாளியோ அல்லது அதற்கு உறவுவகைகளோ, தங்களது பொருள்களை விற்பனை செய்ய விளம்பர தாரர்களாக தாங்களாகவே பல நாரிமணிகளுடன் நடனமாடும் ‘கண் ெகால்லும் காட்சி’களைக் கண்டு தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் தங்களது தலையில் அடித்துக் கொண்டு கதறுகிற ‘‘நவீன சீத்தலை சாத்தனார்கள்’’ ஆனார்கள்!
என்னே கொடுமை! கூச்ச நாச்சமில்லா விளம்பர மோகம்!
தொலைக்காட்சிகள் அல்லது ஏடுகளில் தங்களது முகத்தைத் தாங்களே பார்த்துப் பார்த்து ‘பரவசம்’ கொள்ளும் விந்தை நிகழ்ச்சிகளைக் கண்டு அவர்களையே ரசித்து மகிழும் ‘வேடிக்கை மனிதர்’களுக்குப் பஞ்சமற்ற பூமி நம்முடையது!
தன் பெயர் நாளேடுகளில் எப்படியாவது வாழ்நாளில் வர ஆசைப்பட்ட ஒரு மனிதன், சாலைவிபத்தில் திட்டமிட்டே திளைத்து, அடுத்த நாள் அவரது பெயர் செய்தி ஏடுகள், ஊடகங்களில் வந்துள்ளதா என்று பார்க்க விரும்பிய அவரது கனவு நிறைவேறியது.
ஆனால் பரிதாபத்திற்குரிய அவரோ அந்த செய்தியை பார்க்க வாய்ப்பற்றுப் போனது.
(தொடரும்)