கன மழையால் மின் இணைப்பு துண்டிப்பு நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 6ஆம் தேதி தீர்ப்பு

2 Min Read

சென்னை, ஜூன் 4– கன மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டதால், நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை வருகிற 6ஆம் தேதி பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனமழை

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வு நடந்தபோது, சென்னை அடுத்துள்ள ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், மின்தடை ஏற்பட்டது.

ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களால் இருளில் தேர்வு எழுத மிகுந்த சிரமம் ஏற்பட்டது. சிறிய அளவிலான வெளிச்சத்தில் தேர்வு எழுதியதால், கூடுதல் நேரம் கேட்டனர். தேர்வு மய்ய அதிகாரிகள் கூடுதல் நேரம் வழங்க மறுத்து விட்டனர்.

மீண்டும் தேர்வு

இதையடுத்து எஸ்.சாய்பிரியா உள்ளிட்ட 13 மாணவ, மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், “கனமழையினால் ஏற்பட்ட மின்தடையினால், இருளில் தேர்வு எழுத முடியவில்லை.

அதனால், எங்களுக்கு நீட் தேர்வு மய்யத்தில் மீண்டும் தேர்வு நடத்தவேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு இ-மெயில் அனுப்பினோம். இதுவரை எந்த பதில் இல்லை. எனவே, மீண்டும் நீட் தேர்வை எங்களுக்கு நடத்த உத்தரவிட வேண்டும். ஏற்கனவே நடந்த தேர்வின் முடிவை வெளியிட தடை விதிக்கவேண்டும்” என்று கூறியிருந்தனர்.

தடை விதிப்பு

இந்த வழக்கை கோடை விடுமுறை கால நீதிபதி லட்சுமி நாராயணன் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கிற்கு ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும். அது வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பாக நேற்று  (3.6.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி, “நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மின் தடையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் யாரும் அப்போது இதுதொடர்பாக எந்த புகாரும் அளிக்கவில்லை.

நீக்க வேண்டும்

அந்த தேர்வு மய்யங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர் என்பதால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த முடி யாது. எனவே, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

மனுதாரர்கள் தரப்பில், ‘மின்தடை காரணமாக எந்த பாதிப்பும் இல்லை என்பதற்கும், போதிய வெளிச்சம் தேர்வு மய்யத்தில் இருந்தது என்பதையும் நிரூபிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 6ஆம் தேதி பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *