சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல், அன்னியர்களிடம் இருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல், மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப் பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும், தன்மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஓர் இயக்கமாகும்.
இவ் வியக்கத்தின் முக்கிய கொள்கையெல்லாம், கட்டுப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால், சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம். இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத்தையும்பற்றி நாம் நினைத்துப் பார்ப்போமானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும்.
சாதாரணமாக, இவ்வியக்கம் தோன்றி 3, 4 வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு இது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும் கூட, இவ் வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா, அல்லவா என்பது நன்றாய் விளங்கும்.
நிற்க, தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல் அன்னியர் களின் முட்டாள்தனத்திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசியக் கூட்டத்தார்கள் என்பவர்களும், சமய இயல்பில் வைதிக பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும் இவ்வியக்கத்தால் தங்களுடைய வாழ்விற்கும் பெருமைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி, இவ்வியக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி – அதாவது, சு.ம. இயக்கம் தேசத் துரோக இயக்கமென்றும், சமயத் துரோக இயக்க மென்றும், நாத்திக இயக்கம் என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவோ முயற்சியும் கட்டுப்பாடுமான சூழ்ச்சி களும் செய்துங்கூட, இவ்வளவுக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் – அடிக்க அடிக்கப் பந்து எழுவதுபோல, விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேசம் முழுவதும் ‘பஞ்சில் நெருப்புப் பிடிப்பது போல்’ மக்களிடம் பரவிக்கொண்டே போகின்றது.
இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக தமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது, அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த சுதேச மித்திரன்’, ‘இந்து’, ‘சுயராஜ்யா’, ‘தமிழ் நாடு’,’நவசக்தி’, ‘லோகோபகாரி’ ஊழியன் முதலிய தேசியப் பத்திரிகைகள் என்பவைகளும்; மற்றும் பல குட்டிப் பத்திரிகைகளும், கூலிப் பத்திரிகைகளும் – மனதார, நடத்தவைகளைத் திரித்துக் கூறுவதும், கருத்துகளை மாற்றிக் கூறுவதும் பொது மக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாக்கும்படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன. மற்றும், பிரச்சாரம் செய்வதிலும் தேசியத் தலைவர்கள், பிரச்சாரகர்கள் என்பவர்கள். (இன்றும் அதே நிலைதான் சமூகவலைத் தளங்களிலும்!) எல்லோருமே ஒரேமுகமாய் சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கமென்றும், நாத்திக இயக்கமென்றும் இதைக் கொல்லு வதற்கு ‘ஆண்டவன் அருள்கொண்டு’ துணிந்து விட்டோமென்றும்; கடவுள் துணைகொண்டு இறங்கிவிட்டோமென்றும்; கிருஷ்ண பகவானே துணை என்றும் கர்ச்சித்துக்கொண்டு தொண்டை கிழியப் பேசியும் பார்த்தார்கள். அவர்களுக்குள் வருணாசிரம மகாநாடு, சைவ மகாநாடு முதலிய மகாநாடுகள் கூட்டித் தீர்மானித்தும் பார்த்தார்கள். மற்றும், புராணப் பண்டிதர்கள், புத்தகக் கடைக்காரர்கள், பூசாரிகள், குருக்கள், மடாதிபதிகள் முதலிய கூட்டத்தார்களும் தேசிய மேடையிலும், ‘சுயமரியாதை இயக்கம் சமயத்தைப் பாழ்பண்ணி வருகின்றது; இதை ஒழிக்க வேண்டும்’ என்று கூட்டங்கள் போட்டுக் கூவிப் பார்த்தார்கள்.
இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரச்சாரம் செய்தும் பார்த்தார்கள். இனியும் இரகசியமாகச் செய்த இழிதகைப் பிரச்சாரத்திற்கு அளவே இல்லை. என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப்பற்றியும், நடவடிக்கைகளைப் பற்றியும், ஒழுக்கங்களைப் பற்றியும் எவ்வளவோ கேவலமாகப் பேசியும், கூலி கொடுத்துக் காலிகளை ஏவிவிட்டுப் பேசச் செய்தும் செய்யப்பட்ட இழி பிரச்சாரத்திற்கு அளவே இல்லை. இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்றுவிடுவதாகவும், குத்திவிடுவதாகவும், சுட்டுவிடுவதாகவும் மற்றும் பலவிதமாய் அவமானப் படுத்திவிடுவதாகவும் கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும், பொய்க் கையெழுத்திட்ட கடிதங்களுக்கும் கணக்கே இல்லை. மற்றும், நமக்குள் இருந்த தொண்டர்களைக்கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவே இல்லை.
இவ்வளவு சங்கடங்களையும் தாண்டி இவ்வியக்கம், இன்றைய தினம்
ஒருவாறு தமிழ்நாட்டிலுள்ள பொது மேடைகளையெல்லாம் கைப்பற்றி –
தேசியத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் முக்காடிட்டு, மூலையில் உட்கார வைத்தும்; பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள் சமயவாதிகள், சமயத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கு இல்லாமல் செய்துவிட்டதுடன், ஜாதி இறுமாப்பையும் சமய இறுமாப்பையும் பண்டித இறுமாப்பையும்
‘கசகச’வென்று நசுக்கிக்கொண்டு வருகின்றது.
இவ்வளவு சங்கடங்களையும் தாண்டி இவ்வியக்கம், இன்றைய தினம் ஒருவாறு தமிழ்நாட்டிலுள்ள பொது மேடைகளையெல்லாம் கைப்பற்றி – தேசியத் தலைவர்கள் என்பவர் களை எல்லாம் முக்காடிட்டு, மூலையில் உட்கார வைத்தும்; பெரிய பெரிய பண்டி தர்கள், சாஸ்திரிகள் சமயவாதிகள், சமயத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கு இல்லாமல் செய்துவிட்டதுடன், ஜாதி இறுமாப்பையும் சமய இறுமாப்பையும் பண்டித இறுமாப்பையும் ‘கசகச’வென்று நசுக்கிக்கொண்டு வருகின்றது.
இன்றைய தினம் நமது இயக்கத்திற்குத் தமிழ்நாட்டில் விரோதமாக ஏதாவது ஓர் அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக்கின்றதா என்று யாராவது பரீட்சை பார்க்க விரும்பினால், இதுபோது நாட்டில் நடந்துவரும் தேர்தல்களையும், அவற்றின் முடிவுகளையும் கவனித்துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும். அது மாத்திரமல்லாமல், தேசியத்தின் பேராலும், ஆஸ்திகத்தின் பேராலும் தேர்தலுக்கு நிற்க ஆட்களே இல்லாமற் போனது, நாத்திகத்தின்’ செல்வாக்குக்கும் வெற்றிக்கும் ஒரு பரீட்சையாகும். ‘காங்கிரசே பெரிது’ என்ற காங்கிரஸ் தலைவர் திரு. அய்யங்கார் தேர்தலைப்பற்றித் தான் ஒன்றுமே கவனிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். “தேசமே பெரிது’ என்ற கட்சித் தலைவர் திரு. வெங்கட்ராம சாஸ்திரியார், வேலைபோன மந்திரிகள் ஆகியவர்கள் இருக்குமிடமே தெரியவில்லை. ‘உத்தியோகமே பெரிது’ என்ற பின்பற்றுவோர் இல்லாத குட்டித் தேசியக் கட்சி ஸ்தாபகரும் தானே தலைவருமான திரு. வரதராஜுலு, காங்கிரஸ் தோல்வியுற்ற சந்தோஷத்திலும் அய்யங்கார் மூலையில் அடங்கிய சந்தோஷத் திலும் மூழ்கிக்கிடக்கின்றாரே அல்லாமல், தன்னைப்பற்றி நினைக்கவோ, உலகம் என்ன பேசிக்கொள்கிறது என்பதைக் கேட்கவோ, நாட்டில் தனது நிலைமை என்ன என்பதைப் பார்க்கவோ, தனது கட்சியின் யோக்கியதை என்ன என்பதைப் பற்றி யோசிக்கவோ சிறிதும் நேரமில்லாமல் இருக்கின்றார். மற்றும், சைவ சமயமே பிரதானம், சமய ஆச்சாரிகளே தனது உயிர் என்ற திரு.கல்யாணசுந்தர முதலியார், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் சென்று சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு ஓட்டுக் கிடைக்காது’ என்று மிரட்டுவதும், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஓட்டர்கள் வீட்டுக்கு இரகசியமாய் நடந்து நாஸ்திகக் கட்சிக்கு ஓட்டு செய்யாதீர்கள் என்று சொல்லிப் பார்ப்பனர்களுக்குச் சில ஓட்டுகளை வாங்கிக் கொடுத்துவிட்டதுடன், அவர் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். மற்றபடி, ஆஸ்திகக் கூலிகளோ – வாங்கின பணம் சரிவர ஜீரணம் ஆயிற்றா, இல்லையா? என்பதையுங்கூடக் கவனிக்காமல், இனியும் ‘பணம், பணம்’ என்று கூவிக்கொண்டு, ‘கொடுக்கின்றாயா, அல்லது எதிர்க் கட்சியில் சேர்ந்துகொள்ளட்டுமா?” என்று திரு. அய்யங்காரை மிரட்டிக்கொண் டிருக்கின்றார்கள்.
(‘குடிஅரசு’ – தலையங்கம் – 25-8-1929)