வழி– விழி– மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்த நாளில் சூளுரைப்போம்!

viduthalai
3 Min Read

தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் (2004)
செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி கிடைத்தது – தமிழ் மொழியால்தான் (2005)
செம்மொழி நாயகர் கலைஞருக்கு நன்றி காட்டும் விழா!

தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் (2004). வட மொழியான சமஸ்கிருதத்துக்கு செம்மொழித் தகுதி கிடைத்தது – அதற்குப் பிறகுதான் (2005). அதற்கும் காரணம், தமிழ் மொழிதான்! மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இந்நாளில், வழி – விழி – மொழி இம்மூன்றும் நமக்கு மூச்சுக் காற்றென சூளுரைப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

இன்று (ஜூன் 3, 2025) முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்த நாள் – பெருவிழா!

‘உங்களை ஒரு வரியில் மதிப்பீடு செய்து கூறுங்கள்’ என்ற கேள்விக்கு,

மானமிகு சுயமரிதைக்காரர் கலைஞர்

‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னைக் கூறி, இறுதிவரை அக்கொள்கையில் உறுதி காட்டி நின்றதோடு, அக்கொள்கை லட்சியப் பயணத்தில் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்று, ஒரு புதுமைத் தமிழ்நாட்டை தனது ஆளுமையால் உருவாக்கியவர்!

நீதிக்கட்சி ஆட்சி போட்ட அடிக்கட்டுமானத்தின்மீது அறிஞர் அண்ணா எழுப்பிய ‘திராவிட அரசியல்’ ஆட்சிக் கட்டடத்தை மேலும் வலிவோடும், கொள்கைச் சாதனைகளை – புதுப்புது சமூகப் புரட்சி சட்டங்கள்மூலமும் தந்து வரலாறு படைத்தவர் மானமிகு சுயமரியாதைக்காரரான நம் செம்மொழி நாயகர்!

மக்களின் இதயச் சிம்மாசனத்தில் என்றைக்கும் வீற்றிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், நம்மை மேலும் பூரிப்படையச் செய்து, தமது ஆட்சியினை ‘‘திராவிட மாடல் ஆட்சி’’ என்று அகிலமே அழைத்துப் பெருமைப்பட வைத்த சாதனை நாயகர் இன்றைய நமது ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்!

ஆட்சி வெறும் காட்சிக்கல்ல –

அடிமைப்பட்ட இனம் மீட்சிக் காணவே!

என்று நிரூபித்து, சமரசமற்ற கொள்கை லட்சியப் பயணத்தை கலைஞர் போட்ட பாதையையே மேலும் விரிவாக்கி, வெற்றிக் களம் நோக்கி ஏறுநடை போட்டு,

‘‘உறவுக்குக் கைகொடுப்போம் –

உரிமைக்குக் குரல் கொடுப்போம்’’

என்று கலைஞர் அவர்கள் உருவாக்கிய முழக்கத்தின் முழுப் பொருளை செயல்மூலம் உலகத்திற்குக் காட்டி வருகிறார்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்தவர் கலைஞர்

நம் தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியை உரிமைக்குரல் மூலமும், தக்க அரசியல் உறவுக்குக் கை கொடுத்தும், 2004 இல் 21 ஆண்டுகளுக்கு முன்பு – பெற்றுத் தந்த பெம்மான் நம் கலைஞர் என்ற செம்மொழித் தளபதி.

‘‘தமிழைச் செம்மொழி’’ என அறிவிக்க வலியுறுத்தி, 1918 ஆம் ஆண்டிலேயே ‘‘நீதிக்கட்சி’’ – திராவிடர் இயக்கம் – மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது!

தமிழ் செம்மொழி ஆனதால் அன்றோ, வட மொழிக்கு செம்மொழி சிம்மாசனத் தகுதி கிடைத்தது?

இந்த உண்மையை எவரே மறுப்பர்?

இந்திய ஒன்றிய அரசின் ஆணையால்  2004 இல் ‘செம்மொழி தமிழ்’ ஆகியது.

பிறகே சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி கிடைத்தது (2005– ஓராண்டு பின்னாளில்)

செம்மொழி நாயகர் கலைஞருக்கு
நன்றி காட்டும் விழா!

எந்த மொழியை ‘நீஷ பாைஷ’ என்று இழிவாகப் பேசினரோ, அதன் வழியே கிடைத்ததே, ‘‘தேவபாைஷ’’ என்று ‘அவாளால்’ சொல்லப்படுகின்ற, பேச்சு வழக்கொழிந்த சமஸ்கிருத மொழிக்கு செம்மொழித் தகுதி என்பது – திராவிடத்தின் பெருந்தன்மைக்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

பகைமை பாராட்டியவர்களுக்கும் வழிகாட்டிய மானுடநேயத்தின் மறுபெயரே திராவிடமும், அதன் ஆட்சி நாயகர்களும்!

அப்படிப்பட்ட நம் கலைஞருக்கு, ‘‘செம்மொழி நாயகர்’’ என்று நன்றி காட்டும் விழாவே இது!

விழியும், வழியும், மொழியும் நமக்கு என்றும் மூச்சுக் காற்று என்று இன்று சுயமரியாதைச் சூளுரைப்போம்!

 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை  
3.6.2025  

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *