* நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல;
* ‘விடுதலை’ ஏடு எவ்வளவு காலம் வாழவேண்டும் என்பதுதான் முக்கியம்!
‘விடுதலை’ வாழ்ந்தால்தான் தமிழர்கள் வாழ்வார்கள்;
‘விடுதலை’ நம் மக்களுக்குப் பாதுகாப்பு ஆயுதம்!
சென்னை, ஜூன் 2 தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட போராயுதங்கள்தான் ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகள். ‘விடுதலை’ வெறும் ஏடல்ல – அது வாழ்ந்தால்தான், நாம் வாழ முடியும் – தமிழர்களுக்கு மிகப்பெரிய போர் ஆயுதம்; பாதுகாப்புக் கேடயம் ‘விடுதலை’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா –
‘விடுதலை’ 91 ஆம் ஆண்டு தொடக்க விழா- நூல் வெளியீட்டு விழா!
நேற்று (1.6.2025) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா – ‘விடுதலை’ 91 ஆம் ஆண்டு தொடக்க விழா- ‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’: ஒரு முத்துக்குளியல்’’ நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை யுரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’:
ஒரு முத்துக்குளியல்’’
ஒரு முத்துக்குளியல்’’
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு நிறைவு விழா – ‘விடுதலை’ நாளேட்டின் 91 ஆம் ஆண்டு தொடக்க விழா என்ற சிறப்பான இவ்விழா மேடையில், ‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’: ஒரு முத்துக்குளியல்’’ என்ற ஒரு நல்ல ஆய்வு நூல் – ஆய்வாளர்கள் சொன்னதைப்போல, அவர்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு நூலை இங்கு வெளியிட்டு, நூற்றாண்டு கண்ட குடிஅரசைப் பற்றி, தெளிவான ஓர் ஆழமான ஒரு பீடிகை போன்ற ஆய்வு ரையை சுருக்கமான நேரத்தில் தந்துள்ள நம்முடைய திராவிட இயக்க மூத்த ஆய்வாளரும், பெருமைக்குரிய சிந்தனையாளருமான அருமைத் தோழர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்களே,
‘விடுதலை’ நாளேட்டின் நிர்வாக ஆசிரியர்
தொடக்கவுரையாற்றிய கழகத்தின் துணைத் தலைவரும், ‘விடுதலை’ நாளேட்டின் நிர்வாக ஆசிரியரு மான அருமைக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
எப்பொழுதும் ஆழ்ந்த கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய பேராசிரியராகவே என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், திராவிட ஆய்வாளருமான அருமைத் தோழர் பேராசிரியர் மானமிகு ஜெகதீசன் அவர்களே,
இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்துக் கொண்டி ருக்கக் கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
இந்த அறிவார்ந்த அவையின் பெருமக்களே, பேரறிஞர்களே, நண்பர்களே, தாய்மார்களே, சகோதரி களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்கச் செல்வங்களில் ஒருவர்
நிறைவாக நன்றி கூறவிருக்கக்கூடிய செவிலியர் கல்லூரியின் மேனாள் முதல்வரும், இயக்கச் செல்வங்க ளில் ஒருவருமான வி.கே.ஆர்.பெரியார்செல்வி அவர்களே,
எவ்வளவு விபத்துகள் எங்களுக்கு ஏற்பட்டாலும், மீண்டு வருவோம்; மீண்டும் வருவோம்!
சற்று நேரத்திற்கு முன் கழகத்தின் செயலவைத் தலைவர் தோழர் வீரமர்த்தினி அவர்கள் இங்கே வந்து புத்தகம் வாங்கினார். சில வாரங்களுக்கு முன், ஒரு விபத்திற்கு ஆளானார்; எங்களுக்கெல்லாம் கொஞ்சம் கவலையாகக்கூட இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, தோழர்கள் நலம் விசாரித்தனர். நானே எதிர்பாராமல், நல்ல வாய்ப்பாக அவரே இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றார் என்றால், ஒன்றை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்; ‘‘விபத்துகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல; பத்திரிகை களுக்கும் விபத்துகள் வரும்; அதுபோன்று, ‘விடுதலை’ நாளேட்டிற்கும் விபத்துகள் வந்ததுண்டு. எவ்வளவு விபத்துகள் எங்களுக்கு ஏற்பட்டாலும், மீண்டு வரு வோம்; மீண்டும் வருவோம், மீண்டு மீண்டு வருவோம்’’ என்பதற்கு அடையாளமாகத்தான் அவர் இங்கே வந்திருக்கின்றார். அதற்காக நம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்கே அறிஞர் பெருமக்கள் எல்லாம் நிறைய வந்திருக்கின்றீர்கள். ஞாயிற்றுக்கிழமையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களே என்று நாங்கள் நினைத்தோம். ஒரு பக்கத்தில் ஞாயிறைப்பற்றி சிறப்பான பாட்டு உண்டு.
‘‘ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்’’ என்று.
ஆனால், இப்போது பொதுக்கூட்டங்கள் நடத்துப வர்கள் எல்லாம், ‘‘ஞாயிறு தூற்றிடும், ஞாயிறை தவிர்த்திடும்’’ என்றுதான் பாடுகிறார்கள்.
எல்லா நாள்களும்
நமக்குப் பணி நாள்களே!
நமக்குப் பணி நாள்களே!
ஏனென்றால், அன்றைக்கு ஒருநாள்தான் ஓய்வாக வீட்டில் அமர்ந்திருப்பார்கள். ஆனால், நம்முடைய தோழர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல், எல்லா நாள்களும் நமக்குப் பணி நாள்களே என்று கருதக்கூடிய கடமை உணர்வோடு இங்கே வந்திருக்கிறார்கள்.
இங்கே நம்முடைய திராவிட இயக்க மூத்த ஆய்வாளர் அய்யா திருநாவுக்கரசு சொன்னார், ‘‘நூறாண்டு நான் வாழவேண்டும்’’ என்று.
இதைக் கேட்கும்போது, எனக்கு தந்தை பெரியார் அவர்கள் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகின்றோம்.
நம்மைப் போன்றவர்கள் நூறாண்டு வாழுகிறோமோ, இல்லையோ – வாழ்வதற்கு விஞ்ஞானம் அதற்கு இடம் கொடுக்கிறது. ‘‘அவன் செயல்’’ என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானியினுடைய செயலாகவும், உழைப்பவனுடைய செயலாகவும் – கூட்டு முயற்சியாக வும்தான் அது இருக்கிறது.
எங்களைப் போன்றவர்கள் வாழுகிறோமோ இல்லையோ, ‘விடுதலை’ போன்ற நாளேடுகள் வாழவேண்டும்;
நூறாண்டை தாண்ட வேண்டும்!
நூறாண்டை தாண்ட வேண்டும்!
நம்முடைய வாழ்க்கை முறை என்பது மிகவும் அவசியம் என்றாலும்கூட, என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், எங்களைப் போன்றவர்கள் வாழுகிறோமோ இல்லையோ, ‘விடுதலை’ போன்ற நாளேடுகள் வாழவேண்டும்; நூறாண்டை தாண்ட வேண்டும்.
ஏனென்றால், ‘‘‘விடுதலை’ வாழ்ந்தால், எவரே வீழ்வர்; ‘விடுதலை’ வீழ்ந்தால், எவரே வாழ்வர்’’ இதுதான் அதற்கு சரியான காரணம்.
‘விடுதலை’யினுடைய சிறப்பு என்னவென்றால், இந்தக் கொள்கைகளைச் சொல்லுகின்றன.
தமிழுக்குப் பெரியார் என்ன செய்தார் என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்!
ஒவ்வொரு ஏடும் சாதாரணமானவையல்ல. பெரிய புரட்சி, பெயரிலேயே! கவிஞர் அவர்கள் உரையாற்றும்போதுகூட சொன்னார், ‘‘தமிழ்ப் பெயர்கள்’’ – தமிழுக்குப் பெரியார் என்ன செய்தார் என்று சிலர் புரியாமல் கேட்கிறார்களே, அவர்களுக்குப் பதிலாகத்தான், பத்திரிகையினுடைய பெயரைத் பார்த்தாலே புரியும் அவர்களுக்கு.
‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘பகுத்தறிவு’, ‘உண்மை’ இது போன்ற பெயர்களைப் பார்த்தாலே தெரியும்.
தமிழில் பெயர் வைத்தார் என்ற கண்ணோட்டத்தோடு மட்டும் அதைப் பார்க்காதீர்கள். அது ஒரு குறுகிய வட்டம். அதைத் தாண்டி விரிவாக இன்னொரு பொருள் இருக்கிறது.
மொழியைத் தந்தை பெரியார் பார்த்த பார்வையும், கணிப்பும் மிக முக்கியமானதாகும்!
மொழியைப்பற்றித் தந்தை பெரியார் அவர்கள் சொல்லும்போது, மொழியைத் தந்தை பெரியார் பார்த்த பார்வையும், ஒரு மொழி எப்படி இருக்கவேண்டும் என்று பெரியார் கணித்த கணிப்பும், மிகவும் முக்கியமானதாகும்.
பெரியார் அவர்கள், ஒப்பற்ற சுயசிந்தனையாளர். ஆகவே, எப்போதும் தனிப்பட்ட முறையில் வித்தியாச மாக யோசிப்பவர்.
மொழியை, மூத்த மொழி, முன்னாள் தோன்றிய மொழி என்றுதான் புலவர்கள் வர்ணித்தார்கள்.
மொழி ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்!
ஆனால், பெரியார்தான், மொழி எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், மொழி ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும் என்று சொன்னார்.
போர்க் கருவி என்று சொல்வதில், பல பொருள் ஆழம் பொதிந்தது.
போருக்கான கருவி என்பது மட்டுமல்ல; ஒரு போர் எப்போது வெற்றி அடையும்? போர்க் கருவி என்று சொல்லும்போது, காலத்திற்குக் காலம் அது மாறும்.
தந்தை பெரியாருடைய ஒவ்வொரு சொற்களுக்குப் பின்னும், ஆழமான கருத்தாழம் உண்டு.
பழைய கால போர்க் கருவிகள் இன்றைய காலகட்டத்திற்குப் பயன்படுமா?
இராமன் காலத்து வில்லும் அல்லது இன்னொருத்த ருடைய வேலும் இன்றைக்குப் பாகிஸ்தான் படை யெடுப்புக்குப் பயன்படுமா? என்றால், நிச்சயமாகப் பயன்படாது.
இன்றைக்கு ஏன் ரபேல் விமானத்தை தேடுகிறார்கள்; ஏன் வெளிநாட்டு ஏவுகணைப்பற்றி சொல்கிறார்கள்? காரணம், காலத்திற்கு ஏற்றாற்போல் போர்க் கருவிகளும் மாறவேண்டும் என்பதுதான்.
அப்படி இல்லாமல், இராமர் ஆயுதமான வில்லை வைத்து, போர் செய்வோம்; ‘‘அது ஏழு மராமரங்களையும் துளைத்து, எதிரிகளைத் துளைத்து, அதுவே ரத்தக் கறைகளையெல்லாம் துடைத்து, மீண்டும் அம்பராத் தூணிக்குள் புகுந்தது’’ என்றவுடன், எல்லோரும் கைதட்டுகிறார்கள்.
ஆனால், இன்றைக்கு அது பயன்படுமா? என்றால், நிச்சயமாகப் பயன்படாது.
எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டிய அளவிற்குத் தமிழ் வளரவேண்டும்!
அதுபோன்றுதான் தந்தை பெரியார் சொன்னார், தமிழுக்கு நாம் பழம்பெருமை பேசுவதால் பயனில்லை. தமிழை, மற்ற மொழிகளோடு ஒப்பிடும்போது, இன்றைய வேகத்திற்கு அது எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டிய அளவிற்குத் தமிழ் வளரவேண்டும் என்று சொன்னார்.
‘‘அறிவு விடுதலை இயக்கம்!’’
அதற்காகத்தான் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது தந்தை பெரியார் அவர்கள், சொல்கிறார், ‘‘இந்த இயக்கத்திற்கு இன்னொரு பெயர் சொல்லலாம்; என்ன அந்தப் பெயர் என்றால், ‘‘அறிவு விடுதலை இயக்கம்’’ என்றார்.
சுயமரியாதை இயக்கம் – அறிவு விடுதலை இயக்கம்; திராவிடர் கழகமே, அறிவு விடுதலை இயக்கம்; நீதிக்கட்சியே, அறிவு விடுதலை இயக்கம்தான்.
எப்பொழுது விடுதலை தேவைப்படும்; அடிமையாக இருந்தால்தான் விடுதலை தேவைப்படும்.
இதுவரையில், நம்மை அடிமையாக்கினான்; நம்மைச் சூத்திரனாக்கினான்; நம்மைப் பஞ்சமனாக்கினான்; நம்முடைய பெண்கள், சகோதரிகளையெல்லாம் கொச்சைப்படுத்தி, மிகமிக அடிமைகளுக்கும் கீழே அடிமைகளாக்கினான்.
இதையெல்லாம் போக்கக்கூடிய இயக்கம் நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம் என்ற பெரியார் இயக்கம்.
ஆகவே, பெயரில் கூட, ‘விடுதலை’, ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘உண்மை’ என்று வைத்தார் தந்தை பெரியார்.
இவை எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கிற்று என்றால், இந்தியா குடியரசாகி, 75 ஆண்டுகள் என்று இங்கே சொன்னார்கள்.
‘குடிஅரசு’ ஏடு புரட்டிப் போட்டது
பல நூற்றாண்டுகளை!
பல நூற்றாண்டுகளை!
கால் நூற்றாண்டு – இந்தக் கால் நூற்றாண்டில் வெளிவந்த ஏடு, ‘குடிஅரசு’ புரட்டிப் போட்டது பல நூற்றாண்டுகளை – அதுதான் அதனுடைய தனிச் சிறப்புமாகும்.
காலங்காலமாக இருந்த பழைமைக் கருத்துகளை யெல்லாம், ஏவுகணை போன்று பாய்ந்து எல்லாவற்றை யும் புரட்டிப் போட்டு, ஒரு பெரிய புரட்சியை செய்தது.
‘‘தமிழில் பெயர் சூட்டவேண்டும்’’
தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்!
இன்றைக்குக்கூட மதுரையில் நடைபெற்ற திரா விட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்களில் ஒன்று, ‘‘தமிழில் பெயர் சூட்டவேண்டும்’’ என்பதுதான்.
இதை நன்றாக யோசித்துப் பார்த்தோமேயானால், பெருமைக்குரிய கோரிக்கை அல்ல – ஆனால், இன்றைக்கு அதைச் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழ்நாட்டில், தமிழில் பாடுவதற்குப் போராட்டம்; வாயில் நுழையாத பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
அன்றைக்குக் கால் நூற்றாண்டு கால ஏடு, ‘குடிஅரசு’ எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கிற்று என்றால், இதைப் படித்தவர்கள் மாறி, இந்தப் பெயர்களையே தங்களுடைய பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.
இது எவ்வளவு பெரிய புரட்சி!
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருப்பவருக்குப் பெயர் விடுதலை!
எங்கேயும் ஆயுதத்தை எடுத்து மிரட்டவில்லை; துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திச் சொல்லவில்லை; சட்டம் போட்டும் சொல்லப்படவில்லை. அதை எப்படி சாதித்திருக்கிறார்கள் என்றால் நண்பர்களே, ‘விடுதலை’ என்று பெயர் வைத்திருப்பவருக்கு இன்று என்ன வயது தெரியுமா? கிட்டத்தட்ட 65 வயது. பெரிய சட்ட மேதையாக இருக்கிறார். உச்சநீதிமன்றத்தினுடைய மூத்த வழக்குரைஞராக இருக்கிறார். தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்து, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருப்பவருக்குப் பெயர் விடுதலை. மேனாள் அமைச்சர் ராகவானந்தம் அவர்களுடைய மகன் அவர்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் படித்த மாணவியின் பெயர் ‘குடிஅரசி!’
அதேபோன்று, ‘குடிஅரசி’ என்று பெயர் வைத்தி ருக்கிறார்கள். நம்முடைய இயக்கத் தோழர் – அவருடைய பெண், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மிகச் சிறப்பாகப் படித்து, இன்றைக்குச் சிங்கப்பூரில் இருக்கிறார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழ கத்தில் படித்த மாணவிகளில், 100 பேருக்கு மேல், சிங்கப்பூரில், நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்குப் பெயர் ‘குடிஅரசி’ என்பதுதான்.
‘குடிஅரசு’ செய்த வேலை என்ன? ‘விடுதலை’ செய்கின்ற வேலை என்ன?
பிரின்சு அவர்களுடைய அப்பாவின் பெயர் ‘சமதர்மம்’ அவர்களுக்கு 80 வயது. எவ்வளவு காலத்திற்கு முன், அப்போது இந்தக் ‘குடிஅரசு’ செய்த வேலை என்ன? ‘விடுதலை’ செய்கின்ற வேலை என்ன? அது என்ன சாதாரணமானதா?
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
அழகிரிதான் சொல்வார், ‘‘ஈட்டி எட்டிய வரையில் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும்; எங்கள் பெரியார் இராமசாமியினுடைய கொள்கை, அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கு அப்பாலும் பாயும்’’ என்றார்.
அண்ட பிண்ட சராசரங்களுக்கெல்லாம் இப்போது பெரியார் கொள்கை பரவியிருக்கிறது.
இந்த இயக்கத்தினுடைய சாதனை!
இந்த இயக்கத்தினுடைய அணுகுமுறைகள் அத்தனையும் மிக முக்கியமானவையாகும்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய தன்மை உலகளாவியதாக இருக்கும் என்றார் தந்தை பெரியார்.
‘‘என்னையே நம்பி
இப்பெரும் பழி ஏற்றேன்!’’
இப்பெரும் பழி ஏற்றேன்!’’
யாரை நம்பி இந்த இயக்கத்தைத் தொடங்கினார் என்பதை அவர் சொல்லும்போது, ‘‘என்னையே நம்பி இப்பெரும் பழி ஏற்றேன்’’ என்றார்.
கவிஞர் இங்கே உரையாற்றும்போது சொன்னார், ‘‘யார் படித்தாலும், படிக்காவிட்டாலும், நான் ஓர் ஆள் படிப்பேன், எழுதுவேன்’’ என்று பெரியார் அவர்கள் சொன்னதைப்பற்றி.
பெரியார் அவர்கள் இயக்கப் பத்திரிகைகளை லாபத்திற்காக நடத்தவில்லை.
கண்டம் விட்டு, கண்டம் தாண்டி, கடல் தாண்டிப் போய் செய்த வேலையினால்…
‘விடுதலை’யினுடைய வாழ்வில், ‘குடிஅரசு’வி னுடைய மிக முக்கியமான அந்தக் கருத்துகள் கடல்தாண்டி போகின்றது; கண்டம் விட்டு கண்டம் தாண்டிப் போகின்றது. பாய்கணை என்று சொல்வார்களே, அதுபோன்று, அறிவுக்கணை இது – கண்டம் விட்டு, கண்டம் தாண்டி, கடல் தாண்டிப் போய் செய்த வேலையினால் – அந்த நாட்டில் இருக்கக்கூடிய புலம் பெயர்ந்தவர்கள் நம்மவர்களை எல்லாம் – உறவுக்குரியவர்களாக உரிமைப் பெறக்கூடிய வர்களாக்கிற்று.
சிங்கப்பூர் குடியரசில், நல்ல அளவிற்குத் தெளிவான மக்களாக அவர்கள் வாழ்வதற்கு, ‘குடிஅரசு’ ஏடு அந்தக் காலத்திலேயே அங்கு மிகப்பெரிய அளவிற்கு, அவர்களுக்கு அறிவூட்டியிருக்கிறது.
1929 ஆம் ஆண்டு மலேசிய பயணம்!
1929 ஆம் ஆண்டு தந்தை பெரியாரும்,. அன்னை நாகம்மையார் அவர்களும் சென்றனர். பெரியார் அவர்கள், மலேசியாவில் தோட்டப்புரத் தொழிலாளிகளாக இருந்தவர்கள் மத்தியில், உரையாற்றினார்.
கள்ளுக்கடை வைத்திருக்கிறார்கள்; காளி கோவில் வைத்திருக்கிறார்கள். கங்காணிகள், இவர்களை யெல்லாம் அழைத்துப் போய், அவர்களுக்கு உரிய கூலியைக் கொடுக்காமல், ரப்பர் தோட்டத்தில் பணி யாற்றச் செய்தனர்.
‘குடிஅரசு’ ஏடு அங்கே போகிறது; அதைப் படித்துத்தான் மாறுகிறார்கள்.
‘குடிஅரசு’ இதழில் பதிவாகி இருக்கிறது!
சிங்கப்பூரில் இருந்த ‘குடிஅரசு’ முகவர்கள்பற்றிய தகவல்கள் ‘குடிஅரசு’ இதழில் பதிவாகி இருக்கிறது.
இதுபோன்ற ஓர் இயக்கம், ஒரு நூறாண்டு கால வரலாற்றுக்குள் இவ்வளவு பெரிய சாதனை செய்த இயக்கம் வேறு உண்டா?
ஒவ்வொரு ஆண்டும் சந்தா அதிகமாயிற்று.
அய்யா அவர்கள் உரையாற்றும்போது, வித்தியாசமான கருத்தைச் சொல்கிறார்.
எனக்கு அதிகமான அளவிற்கு சந்தாக்கள் வந்தி ருக்கிறது என்றார்.
ஒதுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் சந்தாவில் சலுகை!
அதிலும், பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் சந்தாவில் சலுகை உண்டு. ஏனென்றால், அவர்களுக்கு வாங்குவதற்குச் சக்தி இருக்காது. ஆகவே, அவர்களுக்குச் சலுகை என்று சொன்னார்.
‘‘இப்போது எனக்கு 3 ஆயிரம் சந்தாக்களுக்குமேல் வந்தாயிற்று. இப்போது நிறைய சந்தாக்கள் வந்ததினால், அடக்கக் கணக்கைப் போட்டுப் பார்த்ததில், சந்தாக்கள் தொகையை குறைக்கலாமா’’ என்று நினைக்கிறேன் என்றார்.
ஆயுதம் ஏந்தாமல், அறிவாயுதத்தை மட்டுமே கொண்ட ஒரு புரட்சி!
தந்தை பெரியார் தொடங்கிய இயக்கம், நடத்திய பத்திரிகைகள்மூலமாக ஓர் அறிவுப்புரட்சி, அமைதிப் புரட்சி, கருத்துப் புரட்சி – ஆயுதம் ஏந்தாமல், அறிவா யுதத்தை மட்டுமே கொண்ட ஒரு புரட்சி என்ற அளவில் சிறப்பாக நடந்திருக்கிறது.
தந்தை பெரியார் ‘குடிஅரசு’ இதழில் எழுதிய தலையங்கம்!
1.5.1932 இல் வெளிவந்த ‘குடிஅரசு’ இதழில் எழுதிய தலையங்கத்தில் சொல்கிறார்,
‘‘இந்த வெற்றி வந்தாலொழிய, பகுத்தறிவிற்கு மதிப்பு கொடுத்து, மக்கள் எல்லோரும் சமத்துவம் என்கிற உண்மையான மனிதத்தன்மைக்கு தாராளமாய் இடம் கொடுக்கின்ற ஒவ்வொருவருக்கும் இடம் ஒதுக்கி வைக்கும் எண்ணம் கொண்ட இம்முயற்சியில் ஈடுபட்டோம். இம்முயற்சி கஷ்டமானது என்றும், அளவுக்கு மீறிய துன்பத்தையும், தொல்லைகளையும் கொடுக்கக் கூடியது என்றும் நாம் நன்றாய் உணருகிறோம்.
வாலிபர்களுடைய கூட்டுறவும், அனுதாபமும், ஆதரவும் மலிந்து கிடப்பதாலும்
துணிந்து இறங்கிவிட்டோம்!
துணிந்து இறங்கிவிட்டோம்!
எனினும், இது வெற்றிக்கு வந்தாலொழிய, நமது சமுகம் மாத்திரமல்ல; நமது நாடு மாத்திரமல்ல; உலகம் முழுவதும், உலக சமூகம் எல்லாவற்றிலும், நிர்பயமான விடுதலையோ, சாத்தியமோ, ஓய்வோ இல்லை என்கின்ற முடிவினாலும், இம்முயற்சி இன்றைய பெரியோர்கள் எனப்படும் வயது சென்றவர்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் பெற முடியாவிட்டாலும், பெரும்பான்மையான பரிசுத்த தன்மை உடைய வாலிபர்களுடைய கூட்டுறவும், அனுதாபமும், ஆதரவும் மலிந்து கிடப்பதாலும் துணிந்து இறங்கிவிட்டோம்.
முடிவில், இதனுடைய வெற்றி – தோல்வியைப்பற்றி நாம் அதிகமான கவலை எடுத்துக் கொள்ளாமல், இந்த முயற்சி சரியா? தப்பா? என்பதைப்பற்றி மாத்திரம் தீர யோசித்து தைரியமாய் இறங்கியிருக்கிறோம்.’’
இதுதான் பெரியாருடைய அணுகுமுறை. இந்த வெற்றியினுடைய அணுகுமுறை என்னவென்றால், இது வெற்றியடையுமா? தோல்வியடையுமா? என்று பார்த்தால், மனிதனுக்குப் பலகீனம் வரும். அதை நான் பார்க்கமாட்டேன். வெற்றி – தோல்வி என்பதெல்லாம் எனக்கு முக்கியமல்ல; இதை செய்யவேண்டுமா? செய்யவேண்டாமா? இதைச் செய்வதற்கு நம்மைத் தவிர வேறு ஆள் உண்டா? என்று.
சுயநலத்தை முழுமையாகத் தூக்கி எறியவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இதைச் செய்ய முடியும் என்கின்ற உணர்வோடுதான் அதைச் செய்தார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்!
இன்றைக்கும் ‘விடுதலை’யைப் பார்த்தீர்களேயானால், நவீன முறையில் வெளிவருகிறது – எங்களால் அதை செய்ய முடிந்தது. ஆனால், வீடுதோறும் விடுதலை – தவத்திரு குன்றக்குடி அடிகளார் இதே இடத்தில்தான் சொன்னார் – ‘‘தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் விடுதலை அங்கே இருக்கவேண்டும்’’ என்று.
‘விடுதலை’யால் பயன்பெற்றவர்களால் ‘விடுதலை’ பயன் பெற்றிருக்கிறதா?
அதேபோன்று, ‘விடுதலை’யால் பயன் பெற்றவர்கள் எவ்வளவோ பேர். ஆனால், ‘விடுதலை’ அவர்களால் பயன் பெற்றிருக்கிறதா? என்றால், ஏமாற்றம் இருக்கலாம்.
ஆனால், அதற்காக இந்தப் பணியை நாங்கள் விட்டுவிடுவதாக இல்லை. தொடர்ந்து நடத்துகின்றோம்.
தோழர்களே, எண்ணிப் பாருங்கள்!
நாளேடு நடத்துவது என்பது
மிகமிகக் கடினம்!
மிகமிகக் கடினம்!
ஒரு நாளேடு நடத்துவது என்பது சாதாரணமான ஒன்றா? வார ஏடு நடத்துவதே சாதாரணமானதல்ல. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாளேடு நடத்துவது என்பது மிகமிகக் கடினம்.
பெரிய பெரிய கட்சிகள் இருக்கின்றன. அவர்க ளுக்கென்று ஒரு நாளேட்டினை வெற்றிகரமாக, அதிக மாகப்பூர்வமாக நடத்த முடிகிறதா, என்றால், இல்லை.
முதன் முதலில் இணையத்தில் வெளிவந்த முதல் தமிழ் ஏடு ‘விடுதலை’!
இன்றைக்கு நம்முடைய ‘விடுதலை’ பல வகைகளில் சிறப்புக்குரியதாக அமைந்து, முதன் முதலில் இணை யத்தில் வெளிவந்த முதல் தமிழ் ஏடு ‘விடுதலை’ ஏடு தான் என்ற அந்தப் பெருமைக்குரியதாகவும் உள்ளது.
நான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வெளிநாடு சென்றேன் என்றால், 10 நாள்கள், 15 நாள்கள் கழித்துத்துதான் ‘விடுதலை’ வரும். ஆனால், இன்றைக்கு நவீன முறையால், நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்வதற்கு முன், அமெரிக்காவிலிருந்து தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘‘இன்றைக்கு ‘விடுதலை’யைப் படித்தேன்; மிகச் சிறப்பாக இருக்கிறது’’ என்று சொல்கிறார்கள்.
கொள்கைகள் பரவினால்,
மானமும், அறிவும் பரவும்!
மானமும், அறிவும் பரவும்!
‘விடுதலை’யால் வளர்ந்தவர்கள், மற்றவர்களுக்கு அதனை அறிமுகப்படுத்துங்கள். அது பணத்திற்காக அல்ல; இந்தக் கொள்கைகள் பரவினால், மானமும், அறிவும் பரவும். வாய்ப்புகள் வரும்.
அந்தக் கருத்துக்காகத்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
சிலர் கேட்கிறார்கள், இன்றைக்குக் கோவில் திருவிழாவில் கூட்டம் இருக்கிறதே என்று.
கூட்டம் இருக்கிறது, உண்மைதான். ஆனால், பக்தி இருக்கிறதா? உண்மையான பக்தி இருக்கிறதா?
‘சாமி’ கண்ணைக் குத்திவிடும் என்று முன்பெல்லாம் நினைத்தார்கள் – ‘குடிஅரசு’, ‘விடுதலை’ வெளிவருவ தற்கு முன்பு. இப்போது ‘சாமி’ தோளின்மீதே கையைப் போடுகிறான்.
இப்போது யாரும் தயாராக இல்லை!
Simply Rituals – வெறுமனே சடங்கு – அது ஒரு பொழுதுபோக்கு. பல இடங்களில் மக்கள் கூடுவது போன்று, கோவிலிலும் கூடுகிறார்கள். ‘சாமி கண்ணை குத்திவிடும்’ என்று நினைப்பதற்குக்கூட இப்போது யாரும் தயாராக இல்லை.
ஆகவேதான் நண்பர்களே, இந்த ஏட்டினுடைய பணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்னும் அவை பரவவேண்டும்.
நோயாளிகளைவிட, மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்!
மருத்துவக் கல்லூரிகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்; மக்களுடைய எண்ணிக்கைப்படியோ, நோயாளிகளின் எண்ணிக்கைப்படியோ மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்காது. நோயாளிகளின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமாகத்தான் இருக்கும்; மருத்து வர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.
ஆனால், நோய்கள் பதுப்புது உருவத்தில் இப்போது வருகின்றன; கோவிட் புது உருவில் வருகிறது என்பதால், மருத்துவம் தோல்வியடைந்துவிட்டது; மருத்துவ விஞ்ஞானம் அறவே போய்விட்டது என்று சொன்னால், அது எவ்வளவு பொருந்தாத பைத்தியக்காரத்தனமோ, அதுபோன்றதுதான், ‘‘நாங்கள் என்ன சாதித்துவிட்டோம்’’ என்று கேட்பதுமாகும்.
நாங்களும் இல்லையென்றால், என்னாகும்?
நாங்கள் இருப்பதினால்தான் இந்த மாற்றங்கள்; நாங்களும் இல்லையென்றால், என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
எனவேதான்,
‘‘‘விடுதலை’ வாழ்ந்தால், எல்லோரும் வாழ்வார்கள்;
‘விடுதலை’ வீழ்ந்தால், எல்லோரும் வீழ்வார்கள்!’’
மான வாழ்வும், அறிவுள்ள வாழ்வையும் உண்டாக்குவதுதான் இயக்க ஏடுகளின் பணி!
இது ஒரு தனி மனிதருக்கு அல்ல; தனி இனத்திற்கு அல்ல; ஒடுக்கப்பட்ட சமுதாயம், கடைசி மூடநம்பிக்கைக்காரன், கடைசி ஜாதி வெறியன், கடைசி மத வெறியன், கடைசி முட்டாளாக இருக்கின்றவன், திருந்தமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றவன் அத்தணை பேரையும் மாற்றிக் காட்டி, மான வாழ்வும், அறிவுள்ள வாழ்வையும் உண்டாக்குவதுதான் இந்த ஏடுகளுடைய பணி.
வீடுதோறும் ‘விடுதலை’யை உருவாக்குங்கள்!
பெரியார் தந்த போர்க் கருவிகள், எப்போதும் அவற்றி னுடைய வலிமை குறையாது.
வார்த்தெடுப்போம் – அதன் பின் வரிசையாக செல்வோம்!
வருகை தந்த உங்களுக்கெல்லாம் நன்றி!
வீடுதோறும் ‘விடுதலை’யை உருவாக்குங்கள்!
ஓர் அன்பான வேண்டுகோள்!
தோழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
ஓர் அய்ந்தாயிரம் புதுக் குடும்பங்களைத் தேர்ந்தெடுங்கள்; உற்ற நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் – இவர்களுக்கு நீங்கள் சந்தா கட்டுங்கள்.
அதேபோன்று, நிகழ்ச்சிகளில் தோழர்களுக்குப் பொன்னாடை போர்த்த வேண்டாம்; உங்களது புதிய நண்பர்களுக்கு ஓராண்டு ‘விடுதலை’ சந்தா கட்டுங்கள். மூன்று மாதம் அவர் ‘விடுதலை’யைப் படிக்கட்டும்; பிடிஎஃப் பைலாக அனுப்புங்கள். பிறகு ஒரு நாள் அனுப்பவில்லை என்றாலும், ‘‘என்னங்க பேப்பர் வரவில்லை’’ என்று கேட்கின்ற நிலை வரும். ‘‘ஏன், இன்றைக்குத் தாமதமாக வந்தது?’’ என்று கேட்பார். அந்த அளவிற்கு அது வேலை செய்யும்!
மருந்தைக் கொண்டு வந்து நீங்கள் பரப்பினால், நோய் தானாக ஓடிவிடும்.
மருந்தை முதலில் உள்ளே செலுத்தவேண்டும்!
எனவே, மருந்தை முதலில் உள்ளே செலுத்த வேண்டும். அந்த மருந்தை உள்ளே செலுத்துவதுதான் சந்தா சேகரிப்பது என்பதைத் தவிர, வேறு வருமானம் தேடுவது அல்ல.
‘விடுதலை’ ஏட்டிற்கு விளம்பரம் உண்டா?
ஏற்கெனவே, ‘விடுதலை’ ஏகப்பட்ட நட்டத்தில் நடக்கக்கூடிய ஏடாகும். மற்ற ஏடுகள் எல்லாம் விளம்பரத்தினால் நடக்கின்றன. ‘விடுதலை’ ஏட்டிற்கு விளம்பரம் உண்டா?
கிடையாது!
நட்டம் மிகவும் சிரமப்பட்டு சமாளிக்கப்படுவது எப்படி?
தந்தை பெரியார் உருவாக்கிய சேமிப்பு – அவர் உருவாக்கிய அறக்கட்டளையினால்தான் சமாளிக்கப்படு கிறது.
மற்ற ஏடுகளுக்கு, இந்த ஏற்பாடு கிடையாது.
பொருளாதார ரீதியாக நட்டம் ஏற்பட்டாலும், சமூக ரீதியாக வெற்றி கிடைத்திருக்கின்றது!
அதனால்தான், மற்ற கட்சிகளோ, மற்ற பிரபல மான பத்திரிகைகளோ தன்னுடைய ஆயுளை முடித்துக் கொள்கின்ற நேரத்தில், ‘விடுதலை’ தன்னு டைய பயணத்தை விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டி ருக்கின்றது. பொருளாதார ரீதியாக நட்டம் ஏற்பட்டாலும், சமூக ரீதியாக வெற்றி கிடைத்திருக்கின்றது; லாபம் கிடைத்திருக்கின்றது.
ஆகவேதான், அதற்காக இந்தப் பணி தொடருகிறது, தொடரவேண்டும்.
உங்கள் அன்பான ஒத்துழைப்பிற்கு நன்றி!
‘விடுதலை’ சந்தாதாராக நீங்கள் இருப்பீர்கள்; அறி வார்ந்த அறிஞர்கள் நிறைந்த அரங்கம் இது.
ஒருவர், இன்னொருவர்; ஒருவர், இருவர் என்று சொல்லக்கூடிய
ஒரு விகிதாச்சாரத்தை உருவாக்குங்கள்!
ஒரு விகிதாச்சாரத்தை உருவாக்குங்கள்!
எனவே, ஒரு புதிய நண்பருக்கு நான் சந்தா கட்டியி ருக்கின்றேன்; ஒரு புதிய உறவினரிடம், வைதிக சிந்தனையாளரிடம் இந்தக் கருத்தைப் படித்துப் பாருங்கள் என்று சொன்னீர்கள் என்றால், ஒருவர், இன்னொருவர். ஒருவர், இருவர் என்று சொல்லக்கூடிய ஒரு விகிதாச்சாரத்தை உருவாக்கிப் பணி செய்யுங்கள்.
வருங்கால சமுதாயத்தைத் திருத்துவதற்கு மிக முக்கியமான அடித்தளம்!
அதுதான், நாம் இது தந்தை பெரியாருக்குச் செலுத்தவேண்டிய காணிக்கையல்ல – வருங்கால சமுதாயத்தைத் திருத்துவதற்கு மிக முக்கியமான அடித்தளமாகும். அதைச் செய்யுங்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சி இவ்வளவு சிறப்பான சாதனைகளைச் செய்து கொண்டிருக்கும்போது,
இன்றைக்கு அதை எவ்வளவு திசை திருப்ப முடியுமோ,
அதை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ,
எவ்வளவு அவதூறுகளை அள்ளி வீச முடியுமோ
அவ்வளவையும் செய்து கொண்டிருக்கின்றனர் இன எதிரிகள்.
‘விடுதலை’ போன்ற ஏடுகள்தான், ‘முரசொலி’ போன்ற ஏடுகள்தான் அவர்களுக்குப் பதில் சொல்கின்றன.
‘விடுதலை’ சொல்லுகின்ற அளவிற்கு, வேகமாக மற்றவர்களால் சொல்ல முடியாது!
இன்னும்கூட, ‘விடுதலை’ சொல்லுகின்ற அளவிற்கு, வேகமாக மற்றவர்களால் சொல்ல முடியாது – சில, பல காரணங்களால்.
எனவேதான், ‘விடுதலை’ என்ற போர் ஆயுதம் – பெரியார் என்ற அந்தப் பட்டறையிலிருந்து வந்திருக்கின்றது.
சமுதாயத்தினுடைய விடுதலைக்காக, மனிதனுடைய அறிவு விடுதலைக்காக ஒத்துழையுங்கள்!
எனவே, ‘விடுதலை’ வளர்ச்சிக்காக நீங்கள் ஒத்துழைக்கவேண்டும் என்பதைவிட, இந்த சமுதாயத்தினுடைய விடுதலைக்காக, மனிதனுடைய அறிவு விடுதலைக்காக ஒத்துழையுங்கள்!
‘விடுதலை’யை வாங்குங்கள்!
‘விடுதலை’யைப் பரப்புங்கள்!
‘விடுதலை’யினுடைய கருத்துகளை விவாதம் செய்யுங்கள்!
மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும் ‘விடுதலை’யை அனுப்புங்கள்!
அதன்மூலமாக ஒரு புதிய சமுதாயத்தை உரு வாக்கலாம்!
ஜாதியற்ற சமுதாயம்!
பேதமற்ற சமுதாயம்!
‘திராவிட மாடல்’ ஆட்சிக்குப் பாதுகாப்பு அரண் ‘விடுதலை’ போன்ற ஏடுகள்தான்!
‘திராவிட மாடல்’ ஆட்சி – இன்றைக்கு உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய, எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய இந்த ஆட்சிக்குப் பாதுகாப்பு அரண் எதுவென்றால், பாதுகாப்புக் கருவிகள் எதுவென்றால், ‘விடுதலை’ போன்ற ஏடுகள்தான் என்கின்ற காரணத்தினால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள்!
அதன்மூலம், உங்கள் வருங்கால சந்ததியினுடைய கல்வி வாழ்வு, அறிவு, மானம் இவற்றைக் காப்பாற்று வதற்கு முன்வாருங்கள்.
வாழ்க பெரியார்!
வளர்க விடுதலை காணக்கூடிய இந்த சமுதாயம்!
நன்றி, வணக்கம்
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.