தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (1.6.2025) மதுரை, கலைஞர் திடலில் திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அய்.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை, ஜூன் 1- தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை என்னும் சிறப்புத் தீர்மானம் உள்பட, மதுரையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் முத்திரை பதித்த 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்புத் தீர்மானம் வருமாறு:
புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக சிறப்புத் தீர்மானம்: ‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர்.
இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைந்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு “ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
திமுக சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு. கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது.
வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட – பகுதி – நகர – ஒன்றிய – பேரூர் – வட்ட – கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தினர் அனைவரும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.
புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வை யாளர்களும், மாவட்டச் செயலாளர் களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.