பார்ப்பனியத்தின் திருத்தூதராக மனு
புசியமித்திரனின் புரட்சி முற்றிலும் ஓர் அரசியல் புரட்சியாக இருந்திருக்குமானால் அவன் பவுத்தத்துக்கு எதிராக மிகக் கொடிய அடக்குமுறையை ஏவிவிடத் தேவை இல்லை. அவரது அடக்குமுறையை கஜினி முகமது இந்து மதத்துக்கெதிராக நடத்திய அடக்குமுறையோடுதான் ஒப்பிடமுடியும். இவை இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை. புசியமித்திரனின் நோக்கம் பவுத்தத்தைத் தோல்வியுறச்செய்து அதன் இடத்தில் பார்ப்பனியத்தை நிலைநிறுத்துவதே என்பது இந்தச் சான்றின் மூலம் மெய்ப்பிக்கப்படுகிறது.
புசியமித்திரன் மவுரியர்களுக்கெதிராக நடத்திய புரட்சியின் மூலகாரணமும் நோக்கமும் பவுத்தத்தை அழித்தொழித்து பார்ப்பனியத்தை நிறுவுவதே என்பதற்கு மற்றொரு சான்றாக இருப்பது மனு ஸ்மிருதியின் அடிப்படையில் அவன் பல சட்டங்களைப் பிறப்பித்ததாகும்..
- Burnouf – I’Introduction a L’ Historic on Bhuddhisme Indian (2nd Ed.) p. 388.
- பவுத்த ஆராய்ச்சிகள் (பதிப்பு லா), இயல் 34, பக். 820
ஸ்மிருதி கடவுளிடமிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதைச் சுயம்பு (அதாவது படைப்புக் கடவுள்) மனுவுக்கு, வெளிப்படுத்தியதாகவும், மனு அதை மனிதர்களுக்கு வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூற்று மனுவின் சட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது என்பதை முன்பே கொடுத்துள்ள குறிப்பிலிருந்து அறியலாம். இத்தகைய கூற்றுக்கு என்ன அடிப்படை என்பதை யாரும் ஆராயப் புகவில்லை என்பது வியப்புக்குரியது. இதன் விளைவாக இந்தியாவின் வரலாற்றில் மனு ஸ்மிருதியின் முக்கியத்துவம், அதன் இடம், நிலை ஆகியவை முற்றிலும் உணரப்படாமல் உள்ளது. இந்து சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சமூகப் புரட்சியைக் காட்டும் ஆவணமாக மனு ஸ்மிருதி இருந்தபோதிலும் இந்திய வரலாற்றாசிரியர்கள்கூட இதை உணராமலிருக்கிறார்கள். ஆயினும் மனு ஸ்மிருதியை இயற்றியவர் யார் என்பது பற்றிய கூற்று வெறும் ஏமாற்று என்பதில் அய்யமிருக்க முடியாது. இந்தப் போலிக்கூற்றை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளும் முற்றிலும் ஏற்க முடியாதவை.
மனு என்ற பெயருக்கு இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றில் பெரும் மதிப்பு இருந்தது. இந்த மதிப்பின் மூலம் சட்டத்தொகுப்புக்கு பெருமை சேர்க்கும் நோக்கத்துடனேயே அதை மனு வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு வஞ்சகம் என்பது அய்யத்துக்கு இடமில்லாதது. சட்டத்தொகுப்பில் அதை இயற்றியவரின் பெயரைக் குறிப்பிடும் இடத்தில் பண்டைக் கால வழக்கப்படி பிருகு என்ற குடும்பப் பெயர் கூறப்பட்டுள்ளது. “மனு தரும சாத்திரம் என்ற தலைப்பில் பிருகு இயற்றிய நூல்” என்பதே அதன் உண்மையான தலைப்பு. தொகுப்பின் ஒவ்வொரு இயலின் இறுதியிலும் பிருகு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமக்கு அதை இயற்றியவரின் குடும்பப் பெயர் தெரிகிறது. அவருடைய சொந்தப் பெயர் நூலில் தெரிவிக்கப்படவில்லை. நாரத ஸ்மிருதியை எழுதியவருக்கு மனு ஸ்மிருதியை இயற்றியவரின் பெயர் தெரிந்திருந்தது. அவர் அந்த இரகசியத்தை வெளியிடுகிறார்; மனு சாத்திரத்தை இயற்றியவர் சுமதி பார்கவா என்பவர் என்று நாரதர் கூறுகிறார். சுமதி பார்கவா என்பது கட்டுக் கதைகளில் வரும் பெயர் அல்ல; அவர் வரலாற்றில் இடம்பெற்ற ஒருவராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் மனுவின் சட்டத் தொகுப்புக்கு உரை எழுதிய ‘மேதாதிதே’ கூட இந்த மனு ஒரு ‘குறிப்பிட்ட நபர்’ என்ற கருத்தைக் கொண்டிருந்தார். எனவே மனு என்பது மனு ஸமிருதியின் உண்மையான ஆசிரியரான சுமதி பார்கவாவின் புனை பெயராகும்.
இந்த சுமதி பார்கவா இந்தச் சட்டத் தொகுப்பை எப்போது இயற்றினார்? இது இயற்றப்பட்ட காலத்தைத் துல்லியமாகத் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது என்றாலும் நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு கால அளவைக் குறிப்பிடமுடியும். தேர்ந்த அறிஞர்களின் கருத்துப்படி, சுமதி பார்கவா திட்டமிட்டே மனு ஸ்மிருதி என்று பெயர்சூட்டிய இந்த நூலை பொ.ஆ.மு. 170க்கும் பொ.ஆ.மு. 150-க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றியிருக்க வேண்டும். புசியமித்திரனின் பார்ப்பனியப் புரட்சி பொ.ஆ.மு. 185 இல் நடந்தது என்பதை நினைவில் கொண்டால், மனு ஸ்மிருதி என்ற தொகுப்பு மவுரியர்களின் பவுத்த அரசுக்கு எதிரான பார்ப்பனியப் புரட்சியின் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதற்காகப் புசியமித்திரனால் பிரகடனம் செய்யப்பட்டது என்பதில் எந்த அய்யமும் இருக்க முடியாது. மனு ஸ்மிருதி, பார்ப்பனியச் சட்டத் தொகுப்பாக அமைந்துள்ளது என்பதும், புசியமித்திரனின் புரட்சி முற்றிலும் ஒரு தனிமனித வீரச்செயல் அல்ல என்பதற்கு அது சான்றாக உள்ளது என்பதும் மனு ஸ்மிருதி பற்றிய பின்வரும் விளக்கங்களைக் கவனிப்பவர் எவருக்கும் தெளிவாகப் புரியும். முதலாவதாக, மனு ஸ்மிருதி ஒரு புதிய சட்டத் தொகுப்பாகும்; அது முதன் முதலாக புசியமித்திரனின் ஆட்சியில்தான் வெளியிடப்பட்டது. மானவ-தரும-சூத்திரம் என்ற பெயருள்ள ஒரு தொகுப்பு இருந்ததாகவும், மனு ஸ்மிருதி என்பது அதனுடைய தழுவல் நூல் எனவும் ஒரு கருத்து இருந்தது. ஆனால் இந்தப் பெயர் உள்ள பழைய நூல் பற்றிய சுவடு எதுவும் கிடைக்காததால் இந்தக் கருத்து கைவிடப்பட்டது.
இப்போதுள்ள மனு ஸ்ருமிதிக்கு முன் வேறு இரண்டு நூல்கள் இருந்தன. இவற்றுள் ஒன்று மானவ அர்த்த சாத்திரம் அல்லது மானவ ராஜ சாத்திரம் அல்லது மானவ ராஜு தரும சாத்திரம் என்பதாகும். மற்றது. மானவ கிருஹ்ய சூத்திரம். எனப்பட்டது. அறிஞர்கள் மனு ஸ்மிருதியை ஒப்புநோக்கி ஆராய்ந்திருக்கிறார்கள். முதன்மையானப் பொருண்மைகளில் ஒரு நூலில் கூறியிருப்பது மற்ற நூலில் கூறியிருப்பதிலிருந்து வேறுபட்டிருப்பது மட்டுமின்றி, பல வகைகளிலும் அதற்கு நேர்மாறாகவும் உள்ளது. புதிய ஆட்சியின் புதிய சட்டங்கள் மனு ஸ்மிருதியில் அடங்கியுள்ளன என்பதைக் காட்டுவதற்கு இஃது போதுமானது.
புசியமித்திரனின் புதிய ஆட்சி பவுத்தர்களுக்கு பகையானது என்பதை மனு ஸ்மிருதியில் பவுத்தர்களுக்கும் பவுத்தத்துக்கும் எதிராக வெளிப்படையாக இயற்றப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. மனு ஸ்மிருதியில் உள்ள பின்வரும் விதிகளைக் கவனிக்கவும்:
9:225. “மதநெறிகளுக்கு மாறான வழியைப் பின்பற்றும் மனிதர்கள்… மன்னன் அவர்களைத் தன்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்.”
9:226. “மாறுவேடத்தில் உள்ள இந்தக் கொள்ளைக்காரர்கள், மன்னனின் நாட்டில் வாழ்ந்துகொண்டு, தங்களுடைய தவறான செயல்கள் மூலம் நல்ல குடிமகனுக்குத் தீங்கு இழைக்கிறார்கள்.”
5:89. “வீணாகப் பிறவி எடுத்த (வரையறுக்கப்பட்ட சடங்குகளை நிறைவேற்றத் தவறுகின்ற, மனிதர்களுக்கும் (அவர்களின் ஆன்மாக்களுக்கு), சட்டவிரோதமான முறையில் ஜாதிகள் கலந்ததால் பிறக்கின்றவர்களுக்கும், (மதத்துக்குப் புறம்பான பிரிவுகளில்) துறவிகளாய் உள்ளவர்களுக்கும், தற்கொலை செய்துகொண்டவர்களுக்கும் எள்ளும் நீரும் இறைக்கும் நீர்க்கடன் ஆற்றக்கூடாது.”
5:90. “மதத்துக்குப் புறம்பானப் பிரிவுகளில் சேர்ந்த பெண்களுக்கு… நீர்க்கடன் ஆற்றக்கூடாது.”
4:30. “(குடும்பத் தலைவன்) மதத்துக்குப் புறம்பானவர்களை (வேதங்களுக்கெதிராக வாதிடும்) தர்க்கவாதிகளை, முகமன் கூறும் செயலால்கூட மேன்மைப்படுத்தக்கூடாது.
12:95. “வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாத வழக்கங்கள் எல்லாம், வெறுக்கத்தக்க தத்துவமுறைகள் எல்லாம் இறப்புக்குப் பின் எந்தப் பேற்றையும் அளிக்க மாட்டா. ஏனென்றால் அவை இருளில் கால்கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.”
12:96.”(வேதத்துக்கு) மாறுபடும் அவை (அந்தக் கருத்துநிலைகள்) எல்லாம் தோன்றி (விரைவில்) அழிபவை; புதிதாக வந்த அவை, பயனற்றவை; பொய்யானவை.”
மனு யாரை மதத்துக்குப் புறம்பானவர்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னாலும் அவர்களைப் புதிய மன்னன் நாடு கடத்த வேண்டும் என்றும், குடும்பத்தலைவன் அவர்களை வாழுங் காலத்திலும் இறந்த பின்னும் மேன்மைப்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார்! புதிதாக வந்த இந்தப் பயனற்ற தத்துவம் எது? வேதத்திலிருந்து மாறுபட்ட, இருளில் அமிழ்ந்து போயுள்ள, அழிந்துபோகக்கூடிய தத்துவம் எது? மதத்துக்கு மாறுபட்டவர்கள் என்று மனு குறிப்பிடுபவர் பவுத்தர்கள்தான் என்பதிலும், வேதத்துக்கு மாறுபட்டதாகப் புதிதாக வந்த தத்துவம் என்று அவர் குறிப்பிடுவது பவுத்தம்தான் என்பதிலும் அய்யம் ஏதும் இருக்க முடியாது. மனு நூலில் காணும் இந்தச் செய்யுள்கள் பவுத்தர்களையும் பவுத்தத்தையும்தான் குறிக்கின்றன என்று. மனு ஸ்மிருதியின் மற்றொரு உரையாசிரியரான குல்லுகபட்டர் வெளிப்படையாகக் கூறுகிறார்.
மூன்றாவது சான்று மனு ஸ்மிருதியில் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி இடம். மனு நூலில் உள்ள பின்வரும் விதிகளைக் கவனிக்கவும்:
1:93. ‘பார்ப்பனர் (பிரம்மாவின்) வாயிலிருந்து தோன்றியதால் அவர் முதலில் பிறந்தவர், ஆதலால், வேதம் அவர் வசம் இருப்பதால், இந்தப் படைப்பு முழுவதற்கும் அவர் உரிமைப்படி தலைவனாக இருக்கிறார்.
1:96. “படைக்கப்பட்டவற்றுள் உயிர் உள்ளவை சிறந்தவை என்று கூறப்படுகிறது: உயிருள்ளவற்றுள் அறிவுத்திறத்தால் வாழ்பவை சிறந்தவை; அறிவுள்ள உயிர்களுள் மனிதன் சிறந்தவன்; மனிதர்களுக்குள் பார்ப்பனர்கள் சிறந்தவர்கள்.”
1:100. ”உலகில் உள்ள அனைத்துமே பார்ப்பனர்களின் உடைமையாகும்; பார்ப்பனரது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவரே எல்லாவற்றுக்கும் உரியவராயிருக்கிறார்.”
1:101. “பார்ப்பனர் தன்னுடைய சொந்த உணவையே உண்கிறார்; சொந்த உடையையே அணிகிறார்; தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறார். மற்ற மனிதர்கள் பார்ப்பனரின் அருளின் மூலமே உயிர் வாழ்கிறார்கள்.
10:3. “பார்ப்பனர் ஒப்புயர்வற்றவராக இருக்கும் காரணத்தாலும் அவரது உயர்ந்த பிறப்பின் காரணத்தாலும், குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட விதிகளைப் பின்பற்றும் காரணத்தாலும் அவரது குறிப்பிட்ட புனிதத்தன்மை காரணத்தாலும், (எல்லா) ஜாதிகளுக்கும் தலைவராயிருக்கிறார்.”
11:35. “பார்ப்பனர் உலகைப் படைத்தவராகவும், தண்டிப்பவராகவும், ஆசிரியராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்; எனவே அவர் படைக்கப்பட்டவை அனைத்துக்கும் புரவலனாக விளங்குகிறார்; அவரிடம் எந்த மனிதரும் கேடான எதையும் சொல்லவோ, கடுமையானச் சொற்களைப் பயன்படுத்தவோகூடாது.”
பார்ப்பனர்கள் மனம் கோணும்படியான எதையும் மன்னன் செய்யக்கூடாது என்று கூறி மனு பின்வருமாறு எச்சரிக்கிறார்:
11:313. ”அவன் (மன்னன்) மிகக் கடுமையான துன்பத்துக்கு உள்ளானபோதிலும் பார்ப்பனர்களுக்குச் சினம் உண்டாக்கக் கூடாது; ஏனென்றால் அவர்களுக்குச் சினம் ஏற்பட்டால், கணப்போழுதில் ‘மன்னனையும் அவனுடையப் படையையும் ஊர்திகளையும் அழித்துவிடமுடியும்.”
11:31, “சட்டத்தை அறிந்த பார்ப்பனர் எந்தக் குற்றத்தையும் மன்னனின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டியதில்லை
தனக்கு தீங்கு செய்வோரைத் தன்னுடைய அதிகாரத்தினாலேயே அவர் தண்டிக்கலாம்.
11:32. “.அவருடைய சொந்த அதிகாரம் மன்னனின் அதிகாரத்தைவிட பெரியது: எனவே பார்ப்பனர் தனது எதிரிகளைத் தன்னுடைய சொந்த அதிகாரத்தின் மூலமே தண்டிக்கலாம்.”
மன்னனே ஒரு பார்ப்பனராகவும் மனுவின் கருத்துகளுக்கு உடன்பாடு உள்ளவனாகவும் இருந்தாலன்றி, இவ்வாறு உடன்பாடு உள்ளவனாகவும் பார்ப்பனர்களைத் தெய்வமாக்குவதும் அரசனுக்கும் மேலான் இடத்தில் அவர்களை வைப்பதும் கைகூடி இருக்காது புசியமித்திரனும், அவனுக்குப் பின்வந்த மன்னர்களும் தாங்களே பார்ப்பனர்களாகவும் பார்ப்பனியத்தை நிலைநிறுத்துவதில் அக்கறையுள்ளவர்களாகவும் இருந்திருந்தாலன்றி, பார்ப்பனர்கள் இவ்வளவு தூரம் மிகையான உரிமைகள் கோருவதைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்க முடியாது. உண்மையில் புசியமித்திரனின் கட்டளையின் பேரிலேயே மனு ஸ்மிருதி இயற்றப்பட்டிருப்பதும் அது பார்ப்பனியத் தத்துவத்தின் புத்தகமாக அமைந்திருப்பதும் முற்றிலும் இயல்பே! இந்த உண்மைகள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஒரு செய்தி தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அதாவது புசியமித்திரனின் புரட்சியின் ஒரே குறிக்கோள் பவுத்தத்தை ஒழித்துவிட்டு பார்ப்பனியத்தை மீண்டும் நிலை நிறுத்துவதேயாகும்.
– அண்ணல் அம்பேத்கர்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’ நூலிலிருந்து