உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக தனது 3 குழந்தைகளைக்
கொடூரமாக தாக்கிய மதபோதகர்!
கன்னியாகுமரி, மே 31 கன்னியாகுமரியில் குழந்தைகளின் உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கொடூரமாக தாக்கிய மதபோதகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி (45 வயது). மதபோதகராக உள்ளார். இவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6, 3 வயதில் 2 மகன்களும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
கிங்ஸ்லியும், அவரது மனைவியும் 30.5.2025 அன்று வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அவருடைய குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, 3 குழந்தைகளையும் கயிற்றால் சரமாரியாக அடித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த தகவல்பேரில், கருங்கல் காவல்துறையினர் அங்கு வந்து 3 குழந்தைகளையும் மீட்டனர்.
விசாரணையில் கிங்ஸ்லி காவல்துறையினரிடம் கூறியதாவது: தினமும் ஊழியத்துக்குச் செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம். சம்பவத்தன்று, தான் வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளைக் காணவில்லை. அவர்கள் பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களின் உடம்பில் சாத்தான் புகுந்து விட்டதாகக் கருதி அவர்கள் உடம்பில் இருந்து சாத்தானை விரட்ட, கயிற்றினால் கட்டி வைத்து அடித்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் 3 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, காப்பகத்தில் சேர்த்தனர்.