தமிழ்நாடு அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஒய்வு

viduthalai
3 Min Read

சென்னை, மே 31- தமிழ்நாடு அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58இல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள். குறிப்பாக மே மாதங்களில் தான் அதிகம் பேர் ஒய்வு பெறுவார்கள்.

அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதங்களில் தான் ஒய்வு பெறுவார்கள். அந்த அடிப்படையில் மே மாதம் 31ஆம் தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஒய்வு பெறுகின்றனர்.

அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஒய்வு பெறுகிறார்கள். கடந்த மாதத்தில் (ஏப்ரல்) 22 பேர் ஒய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு முழுவதும்
மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 700 கோடி பயணங்கள்

தமிழ்நாடு

சென்னை, மே 31- தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டம் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மகளிர் விடியல் பயண பேருந்துகளில் நாள்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்வதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 29.05.2025 அன்று வரை தமிழ்நாடு முழுவதும் மகளிரால் 700.38 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரக் காவல் துறையின் சாதனை
சைபர் மோசடிக் கும்பல் பறித்த ரூ.2.31 கோடி மீட்பு

சென்னை, மே 31- சென்னையில் கடந்த 29 நாளில் பொதுமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் மோசடி கும்பல் பறித்த ரூ.2.31 கோடி பணத்தை காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம் காவலர்கள் மீட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 29 நாளில் சைபர் மோசடி கும்பலிடம் இருந்து அதிக பணம் மீட்டதில் சென்னை காவல்துறை முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில், அண்மைக்காலமாக சைபர் மோசடி கும்பல் பொதுமக்களிடம் மின்சார கட்டணம், ஆதார், பான் கார்டு புதுப்பிப்பு, வங்கி ஏடிஎம் கார்டுகள் மாற்றுவது, போதை பொருள் பார்சல் வந்துள்ளது என புதுப்புது வகையில் ஆன்லைன் மூலம் பணத்தை பறித்து வந்தது.  பொதுமக்களிடம் தொடர் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும், சைபர் குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் மத்திய குற்றப்பிரிவில் தனியாக சைபர் மோசடி தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் எல்ைலயில் கடந்த 29 நாளில் 1930 என்ற அவசர அழைப்பு மூலம் அளிக்கப்பட்ட 144 புகார்கள் மீது காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையால் 2 கோடியே 31 லட்சத்து 14 ஆயிரத்து 187 ரூபாய் சைபர் மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *