தமிழ்நாடு அரசின் ஏழாவது நிதி ஆணையம் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் அமைப்பு

1 Min Read

சென்னை, மே 30 தமிழ்நாடு அரசின் 7-ஆவது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாநில நிதி ஆணையம்

இதுகுறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு 7-ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையம், பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அதன்படி, தலைவராக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையம், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின், அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதி நிலையை ஆய்வு செய்து, பரிந்துரை செய்யும்.

குறிப்பாக, மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல், அத்தகைய வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றுக்குரிய பங்குகளை முறையாக பிரித்தளிக்கும்.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக் கூடிய அல்லது அவையே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானிக்கும்.

மாநில அரசின் தொகுப்பு நிதியி லிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள்; 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் அய்ந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *