மகாராட்டிரா அரசு தனது பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) இன் கீழ் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த “மூன்றாம் மொழி” திட்டத்தை கைவிட்டுள்ளது. இதன் மூலம், மகாராட்டிரா பள்ளிகளில் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே தொடர்ந்து பயிற்றுவிக்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கை 2020, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்தி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மகாராட்டிரா அரசு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தது. இது ஆளும் பாஜக கட்சியினரிடமிருந்தே கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.
மகாராட்டிராவில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள், ‘‘இது ஹிந்தி மொழித் திணிப்பு முயற்சி’’ என்று குற்றம் சாட்டின.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகளைக் கற்பிப்பது – தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என்றும், இது அவர்களின் மனநிலைக்கு ஏற்றது அல்ல என்றும் கல்வி யாளர்கள் மற்றும் மொழி ஆலோசனைக் குழுவினர் கருத்து தெரிவித்தனர்; மேலும் அரசு நிறுவனமான மராட்டிய மொழி வளர்ச்சிக் குழுவின் தலைவரான என்.கே. தேஷ்முக் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித் திருந்தார். .
பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மூன்று மொழிகளைக் கற்பிப்பது சாத்தியமில்லை என்றும், இதனால் மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளின் தரம் பாதிக்கப்படும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
மராத்தி மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் இந்த முடிவு ஒரு அச்சுறுத்தலாக அமையும் என்றும் கவலை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ஏற்ெகனவே மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு உள்ள நிலையில், மகாராட்டிராவிலும் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது கவனிக்கத்தக்கது.
இந்த எதிர்ப்புகள் காரணமாக, மகாராட்டிரா அரசு தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது. தற்போது, “மூன்றாம் மொழி” திட்டத்தை கைவிட்டு, பள்ளிகளில் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே தொடர்ந்து பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது – இருப்பினும் இந்த முடிவில் அரசு உறுதியாக இருக்கவேண்டும் என்றும், மறைமுகமாக வேறு வழியில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக பள்ளிகளில் கொண்டுவரக்கூடாது என்றும் மராட்டி மொழி ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஹிந்தியை ஆதரிக்கின்றன. தமிழ்நாடுதான் எதிர்க்கிறது என்று மிகப் பெரிய பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்.
அது ஒரு மாய்மாலம். ஏமாற்றுத் தந்திரம் என்பதை பிஜேபி ஆளும் மராட்டிய மாநிலமே தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையைப் புறந்தள்ளி விட்டது.
இதன் எதிரொலி பிற பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை. சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகள் வட மாநிலங்களில் புழக்கத்தில் இருந்த பல மொழிகளைக் கபளீகரம் செய்து விட்டன.
போஜ்பூரி, மைதிலி, அவதி, பிரஜ், குந்தேலி, கர்வாரி, குமாவேனி, மகாஷி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கரி, சந்தாலி, அங்கிகா, சகரியா, கூர்மாலி, குருக், முண்டாலி முதலிய மொழிகள் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஆக்ரமிப்பால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன.
சமஸ்கிருத மொழியின் ஊடுருவலால் தமிழிலிருந்து பல மொழிகள் சிதைந்து உருவான வரலாறு உண்டு. தமிழ் தன் தனித் தன்மையால் நிலைத்து நிற்கிறது.
மொழித் திணிப்பு என்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு – எச்சரிக்கை!