திருச்சி அருகே சிறுகனூரில் பெரியார் உலகம் மூன்றில் ஒரு பாகம் பணிகள் முடிந்துவிட்டன!
ஒருவர் அல்லது குடும்பத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் என்று தொடங்கி காசோலை அல்லது வரைவோலை மூலம் வழங்குவீர்!
பெரியார் தொண்டால் பயன்பெற்றவர்கள் நன்றி காட்ட
இது நல்ல சமயம்! இதை நழுவவிடலாமா?
திருச்சியையடுத்த சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் பெரியார் உலகிற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவது – தந்தை பெரியார் பணியால் பலன்பெற்ற நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு என்றும், இன்னும் இரு மாதங்களுக்குள் தனியாகவோ, குடும்பத்தின் சார்பிலோ நிதியை அளிக்க முனைப்பாக செயல்படவேண்டும் என்ற அந்த வேண்டுகோளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு::
திருச்சி அருகே, சுமார் 30 கிலோ மீட்டர் தொலை வில், திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில், 27 ஏக்கர் பரப்பளவில் ‘‘பெரியார் உலகம்’’ உருவாகிறது, தந்தை பெரியார் 95 அடி உயர பெரும் சிலை, 60 அடி பீடம், பீடத்திற்குள்ளேயும், வெளியேயும் நூலகம், திராவிட ஆய்வகம், குழந்தைகள் அறிவுப் பூங்கா, பார்வையாளர்களுக்குரிய உணவகச் சேவைகள், ‘‘தந்தை பெரியாருக்கு முன் – தந்தை பெரியாருக்குப் பின்’’ என்ற சமூக வரலாற்று அரசியலும், ஆயுதங்களைப் பிரயோகப்படுத்தியோ, வன்முறைகள்மூலம் ரத்தம் சிந்தியோ எந்த மாற்றமும் செய்யாமல், அறிவாயுதங்களின் வீச்சினால், அமைதிப் புரட்சியாக சமுதாய, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு ஒரு நூற்றாண்டின் தொண்டறம், பிரச்சாரம் என்ற பரப்புரை, அறப்போர்மூலம், பொது மக்களுக்கு இடையூறு இன்றி, பொது அமைதிக்குப் பங்கமேற்படாமல் சமூக மாற்றங்கள் – அடிநிலை பெயர்த்த அதிசயத்தக்க சமூகம், அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் என சாதனைகளை, சில மணிநேரத்தில் – பன்மொழிகளில், பார்வையாளர்கள் பலரும் பார்த்துக் ‘கற்றோம்’ என்று மகிழும் வண்ணம் விரிவான ஆய்வகம் உள்ளிட்ட நூலகம் உள்பட பல்வேறு ஏற்பாடுகள்பற்றி முறைப்படி, தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் பல துறைகளில் ஒப்புதல், தடையில்லா சான்றிழ்கள் பெற்று, பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்குமேல் களத்தில் தொடங்கி, மிகச் சிறப்புடன், தக்காரின் கட்டுமான திட்டமிடுதல், கட்டடப் பணிகள் மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகின்றன!
மூன்றில் ஒரு பாகம் பணி நிறைவேறியது!
அவ்வப்போது, ‘பெரியார் அறக்கட்டளை’ நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அதற்குரிய பொறுப்பாளர்களின் விளக்கமும், பணி வளர்ச்சியில் அடைந்துவரும் முன்னேற்றம் பற்றியும், ஆய்வுகள்பற்றியும் விரி வாக எடுத்துரைக்கப்பட்டு, அதன் ஒப்புதலை மகிழ்வோடு பெற்று வருகின்றனர்; அப்பணிக்கான பொறுப்பாளர்களும், பொறியாளர்களும் பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் அவர்களது தலைமையில் ஒரு குழுவினர்.
மூன்றில் ஒரு பாகம் பணி முடிவடைந்து வரும் நிலையில், இத்தகைய ‘மெகா’ திட்டத்திற்குரிய நிதி – நன்கொடைகளை நமது இயக்கத் தோழர்களும், குடும்பத்தவர்களும், பெரியார் பற்றாளர்களும் தொடர்ந்து நம்மிடம் நாம் வேண்டுகோள் எதனையும் தீவிரப்படுத்தும் முன்பே தந்து, ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி மகிழ்வது ‘‘நம்மால் இப்பணியை முடிக்க முடியுமா?’’ என்ற கேள்விக் களத்திலிருந்து நகர்த்தி, முடிக்க முடியும் – ‘‘தந்தை பெரியாரால் பயனடைந்த நன்றி காட்டும் மக்கள் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்’’ என்று நம்ப வைத்து, மிகத் தாராளமாய் உதவி வருகிறார்கள். சிறு துளியாகத் தொடங்கி, பெரு வெள்ளமாய்ப் பாயும் ஜீவ நதியாக அது நமக்குப் பயன்படும் என்ற நன்னம்பிக்கை ஆழமாக நம்முள் பதிந்துவிட்டது.
சென்னையில் ‘‘பெரியார் திடல்’’ உருவானது எப்படி?
நம் அறிவாசான் அய்யா வாழ்ந்த காலத்தில், சென்னை பெரியார் திடல் உருவாகும்போது கேட்ட நன்கொடைகளைவிட, மூன்று மடங்கு தந்து, தந்தையை ஊக்கமூட்டினர் என்பது ‘‘எப்படியும் முடிப்போம்; முடித்தே காட்டுவது உறுதி’’ என்று மற்ற திட்டங்களை நாம் உருவாக்க அவைகளே காரணமாக அமைந்தன.
இன்றைக்கு நம் முன்னே ஒரு வரலாற்று வழிகாட்டி மய்யமாகவும், அரசியல் கலங்கரை வெளிச்சமாக்கித் தரும் முக்கிய திசைகாட்டும் ஒளியகமாகவும் இருப்பது அந்தப் பெரியார் திடல்தானே!
இப்படி எத்தனை எத்தனையோ!
இடையில் இவற்றிற்கு நமது கொள்கை எதிரி களால், துரோக சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட தொடர் தொல்லைகளும், அவதூறுகளும், பல்வேறு ‘‘கண்ணிவெடிகளையும்’’ தாண்டி, நாம் நிலை நிறுத்தி, எதிர்நீச்சலில் எவரும் காணாத ஏற்றமிகு வெற்றியைக் கண்டு, களைப்பு, சோர்வு, சலிப்பின்றி எம் பணி முடிப்போம்; புதிய வரலாற்றை எழுதுவோம் என்று லட்சியப் பணிகளையும், தொடர் பயணங்களையும் நடத்தி வருவதில், நாளும் ஊக்கமிகு உற்சாகத்தைப் பெறுகிறோம்.
அதை வைத்து, நிதியின் தேவை பெரிதாகும் நிலையில், (விலையேற்றம், திட்டச் செயல்பாடு நிதிப் பற்றாக்குறை காரணமாக) உங்களிடம் துண்டேந்தி, தொண்டறம் தவறாமல் நடக்க உரிமையுடன் கூடிய நிதி நன்கொடை வேண்டுகோளை மிகுந்த பணிவுடன், கனிவுடன் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம்.
இரு மாதங்களுக்குள் முதல் கட்டமாக நிதி திரட்டித் தாரீர்!
அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கருத்துக் கூறி, நன்கொடை வசூல் பணியில் பெரிதும் பங்கேற்க உறுதி கூறியது நமது ‘பளுவை’ லேசாக்கியது!
ஒவ்வொருவர்மூலமும் தனித்தனியாக அவரவர்கள் திரட்டி ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நன்கொடை திரட்டுதல்படி திட்டமிடும் வகையில், உங்கள் தொண்டனாக, தோழனாக உழைக்கும் எனது வேண்டுகோள் இது. உகந்தவர்கள் உதவிட உடனே வாருங்கள்.
இவ்வாண்டின் முதல் தவணை கட்டமாக, 2 மாத கால கெடுவுக்குள் (2025 ஆகஸ்ட் முதல் நாளுக்குள்) நமது நன்கொடைத் தோழர்கள் 200 பேர், எங்களது கரங்களைப் பலப்படுத்தி, உழைக்கும் எங்கள் உள்ளங்களை ஊக்கப்படுத்திட, ஒருவர் அல்லது குடும்பம் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் என்று தொடங்கி காசோலை அல்லது வரைவோலை மூலம் அல்லது வங்கி விவரம் பெற்று அதிகாரப்பூர்வமாக (ரொக்கமாக அல்ல; சட்டப்படி ஒரு ஓட்டையும் இன்றி) நன்கொடை அடை மழையைப் பொழியவேண்டுமென வேண்டுகோளை உரிமையு டன் உழைப்பை உயிர்மூச்சு அடங்கும்வரை நல்க உறுதி பூண்டுள்ள உங்களுக்கான தொண்டன் என்ற முறையில் அன்பு வேண்டுகோளாக உங்களுக்கு விடுக்கிறேன்.
தனியே பல நண்பர்களிடம் இதுபற்றி கலந்தபோது, ‘‘உடனடியாக அறிக்கை விடுங்கள். ஆதரவுக்கரம் நீட்ட, உங்களை – இயக்கத்தை அணைக்க ஆயிரம் கைகள் உள்ளபோது தயக்கம் வேண்டாம்!’’ என்று உணர்ச்சிப் பெருக்கோடு ஊக்கம் தந்து, உற்சாகப் பெருவெள்ளத்தில் எம்மைத் தள்ளினர்.
தாமதமின்றிப் பணி தொடங்கி
இலக்கை அடைவோம்!
இலக்கை அடைவோம்!
தருவது பெரியார் தொண்டால் பெற்ற பயன், நன்றி காரணமாகவே – மறவாதீர்!
நாளைய பேரர்களும், கொள்ளுப் பேரர்களும் இதோ எங்கள் குடும்பத்தின் பங்களிப்பு இந்தப் ‘‘பெரியார் உலகத்தில்’’ உள்ளது என்று பெருமிதத்தோடு விம்மி மகிழ்வார்கள்; தாமதமின்றிப் பணி தொடங்கி, 2 மாதங்களில் இந்த இலக்கை அடைவோம்!
எங்கள் நன்றி!
எதிர்பார்ப்புடன்,
உங்கள் தொண்டன், தோழன்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.5.2025