செவ்வாய்க் கோளில் இருக்கும் உலர்ந்த ஹேமடைட் ( hematite) என்ற கனிமம் தான் செவ்வாய் கோள் சிவப்பு வண்ணத்தில் இருக்க காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால்.. பூமிக்கு அருகாமையில் இருப்பதாலும், கடந்த சில தசாப்தங்களாக பார்வையிட்ட ஏராளமான விண்கலங்களாலும் செவ்வாய் கோள் சூரிய மண்டலத்தில் மிகவும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட கோள்களில் ஒன்றாக கருதப்படுகிறது. செவ்வாய் ளோள் சிவப்பு வண்ணத்தில் இருப்பது குறித்து விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
செவ்வாய் கோளில் இருக்கும் உலர்ந்த ஹேமடைட் ( hematite) என்ற கனிமம் தான் செவ்வாய் சிவப்பு வண்ணத்தில் இருக்க காரணம் என்று நம்பப்பட்டது. அதாவது மேற்பரப்பில் திரவ நிலை இல்லாததால், செவ்வாய் கோளின் சிவப்பு நிறம் ஹெமடைட் போன்ற உலர்ந்த இரும்பு ஆக்சைடுகளிலிருந்து வந்தது என்று நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது.
ஆனால் ஃபெரிஹைட்ரைட் எனப்படும் தண்ணீரைக் கொண்ட இரும்பு ஆக்சைடுகள் தான் செவ்வாய் கோளின் சிவப்பு வண்ணத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நேச்சர் கம்யூனிகேசன் (Nature Communications) என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், தண்ணீரைக் கொண்ட ஃபெரிஹைட்ரைட் இரும்பு ஆக்சைடு செவ்வாய் கோள் முழுவதும் பரவியுள்ளதாகவும், இவை துருப்பிடித்ததன் காரணமாக சிவப்பு வண்ணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய் கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஃபெரிஹைட்ரைட் கனிமம், குளிர்ந்த நீரால் உருவாகிறது. செவ்வாய், வறண்ட கோளாக மாறுவதற்கு முன்பு தண்ணீரைத் தாங்கும் திறன் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இது செவ்வாய் கோள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதையும், அது வாழத் தகுதியானதா என்பதையும் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றக்கூடும் எனவும் கூறப்படுகிறது.தற்போது செவ்வாய் கோளை ஆராய்ந்து வரும் நாசாவின் Perseverance ரோவர் பூமிக்கு கொண்டு வரும் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.