சென்னை, மே 29- பொள்ளாச்சி வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு கூறப்பட்டதாகவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளிக்கு 157 நாட்களில் தண்டனையை தமிழ்நாடு காவல் துறை உறுதி செய்திருப்பதாகவும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி
எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2ஆம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அதே பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உடனே குற்றவாளி ஞானசேகரனை காவல் துறை கைது செய்தது.
3 பெண் அய்.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு, வழக்கை விசாரித்தது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது, ஏற்கனவே ஞானசேகரன் மீதான திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல வழக்குகளையும் காவல் துறை விசாரித்தது. மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
157 நாட்களில்…
சம்பவம் நடந்த நாளில் இருந்து சரியாக 157ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழ்நாடு காவல் துறை.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது ‘இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.
இந்த வழக் கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்ச பட்ச தண்டனை கிடைக்கும்’ என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.
பொள்ளாச்சி வழக்கு
2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான 6½ ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சி.பி.அய்.. ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழ்நாடு காவல் துறை.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க 6½ ஆண்டுகள் ஆனது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்