சென்னை, மே 28– திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் 26.5.2025 அன்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தலைமை வகித்தார். மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கல்வி உரிமை சட்டத்துக்கான நிதியை உடனடியாக ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். கீழடி அகழாய்வு அறிக்கையை திருப்பி அனுப்பிய ஒன்றிய அரசுக்குக் கண்டனம். உயர்கல்வி, பள்ளி துறை சாதனைகளை பட்டிெதாட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம். மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் கலைஞரின் கனவை நிறைவேற்றும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மண்டலந்தோறும் “சேவ் ஸ்டேட் எஜிகேசன்” என்ற முழக்கத்தை முன்வைத்து மாணவர் அணி சார்பில் பேரணிகள் நடத்தப்படும்.
பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்த்து, 100 சதவிகிதம் பள்ளிப்படிப்பை தொடரும் மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் மாணவர்கள், பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இருநூறு தொகுதிகளில் வெற்றி என்ற திமுக தலைவரின் முழக்கத்தை நிறைவேற்றுவோம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.