சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்
அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில், 1928 மே மாதம் 28 ஆம் தேதி முதல் சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.
இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகப் புரட்சியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இது பாரம்பரிய சடங்குகள், புரோகிதர்கள் மற்றும் ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் நடந்தது. அந்த நிகழ்வில் ஒரே மேடையில் மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.
ஊர் எல்லையிலிருந்து மாபெரும் வரவேற்புடன் தந்தை பெரியாரும், தலைவர்களும் ஊர்வலமாக 3 கி.மீ. வரை அழைத்து வரப்பட்டனர்.
விழா மேடையில் மணமகன் – மண மகள்கள் மேடைக்கு வந்த தலைவர்களை வணங்கினர். மணமக்கள் கதராடை அணிந்திருந்தனர்.
ஆடம்பரமான ஆடையோ, அணிகலன்களோ கிடையாது.
தந்தை பெரியார் அவர்கள் உறுதிமொழி கூற, மணமக்களும் உறுதி மொழியேற்று மாலை மாற்றி கொண்டனர்.
அப்போது, “சுயமரியாதை வெல்க! வைக்கம் வீரர் வாழ்க!!” என்ற முழக்கங்கள் கிராமத்தையே அதிரவைத்தன.
வரலாற்றுப் பெருமை வாய்ந்த முதல் சுயமரியாதைத் திருமணம் என்கிற சிறப்போடு தந்தை பெரியார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
அன்று முதல் முறையாக மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.
மதச்சடங்கு திருமணங்கள் பெரும்பாலும் ஜாதியப் பாகுபாட்டோடு இழிவுபடுத்தும் நிலையிலும் நடத்தப் பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
இப்படியாக 28-5-1928 வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறிப் போயிற்று. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தந்தை பெரியார் தலைமையில், திராவிட இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றன. கெடு வாய்ப்பாக, அப்போ திருந்த அரசோ, நீதிமன்றங்களோ இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால், அன்றைய சுயமரியாதை இயக்கத் தோழர்களும், பிற்காலங்களில் திராவிடர் கழகத் தோழர்களும், சட்ட அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை செய்து கொண்டே இருந்தனர். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் முறை தவறி (Illegitimate Child) பிறந்தவர்களாக சட்டம் கருதியது.
பின்னாளில், 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்து திருமணச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 1967 (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967) நிறைவேற்றப்பட்டது. இது 1968 ஜனவரி 20 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
உலகமெங்கிலும் இன்றளவும் பல்வேறு வகைகளில் திருமண முறைகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்துமே ஏதாவது ஒரு மதச்சடங்கு அல்லது அச்சமூகத்திற்கான அடையாளமாக ஏதாவது ஒரு சடங்கு நடத்தி முடிக்கின்றனர்.
ஆனால் முதல்முறையாக இணையர்கள் உறுதிமொழி ஏற்க புரட்சிகர சுயமரியாதைத் திருமணம் நடத்திய தந்தை பெரியார் மனிதகுலத்திற்கு மேலும் ஒரு நவீன பாதையினை அமைத்துகொடுத்த நாள் இன்று.