ஆன்மிக சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை
சண்டிகார், மே.28- ஒரே குடும் பத்தை சேர்ந்த 7 பேர் உத்தராகண்டில் இருந்து அரியானாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய காரில் கிடந்த பிணங் களை மீட்டு காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். கடன் சுமையால் அவர்கள் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.
7 பேர் மரணம்
அரியானா மாநிலம் பஞ்ச்குலா வில் உள்ள ஒரு குடியி ருப்பு பகுதியில் சந்தேகத்திற் கிடமான வகையில் கார் ஒன்று நின்றுகொண்டு இருந்தது. அந்த காரில் சிலர் இருந்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கார் துணிகளால் மூடப்பட்டு இருந்தன. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் காரில் சோதனை நடத்தினர்.
அப்போது காருக்குள் 40 வயதுடைய இணையர்கள் 3 குழந்தைகளும், 2 முதியவர்களும் என 7 பேர் மயங்கி கிடந்தனர். 5 இருக்கைகள் கொண்ட காரில் 7 பேர் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இருந்தனர். அதில் சிலர் வாந்தி எடுத்திருந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்ட காவல் துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காரில் இருந்து உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறையினர் மீட்டனர். அதில், “எல்லாம் என்னால்தான் நடந்தது. எங்கள் இறுதிச்சடங்கை எனது மாமனார்தான் செய்யவேண் டும். அவரை யாரும் கஷ்டப் படுத்தக்கூடாது’ என எழுதப்பட்டு இருந்தது. 7 உடல்களும் பிரேத உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக் குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் தொழில் அதிபர் பிரவீன் மிட்டல் (வயது 41), அவரது மனைவி, பிரவீன் தந்தை தேஷ்ராஜ் மிட்டல், அவரது – மனைவி, பிரவீனின் 2 மகள்கள், ஒரு மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆன்மிக சுற்றுலா
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த பிரவீன் மிட்டல் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அதிக கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த தால் சில ஆண்டுகளில் பிரவீனின் குடும்பம் பலமுறை வீடு மாறி உள்ளது. இந்த நிலையில் பிரவீன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரு காரில் அழைத்து கொண்டு அரியானா மாநிலத்துக்கு ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அங்கு பாகேஷ்வர் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து பஞ்சகுலா பகுதியில் காரை நிறுத்தி விட்டு 7 பேரும் விஷம் குடித்து காருக்குள்ளேயே தற்கொலை செய்து உள்ளனர் என தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த புனீத் என்பவர் கூறியதாவது:-
ஒரு கார் எங்கள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தது. நாங்கள் காருக்குள் இருந்த ஒருவ ரிடம் கேட்ட போது, பாபாவின் நிகழ்ச்சிக்காக வந்ததாகவும், தங்கும் விடுதி கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். இதனால் அவர்கள் காரில் தூங்குவார்கள் என நினைத்தோம். காரை நகர்த்தி வேறு இடத்தில் நிறுத்தும்படியும் சொன்னோம். சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் வாந்தி எடுத்ததை கவனித்தோம்.
அந்தநேரத்தில் ஒருவர் மட்டுமே ஓரளவு நினைவோடு இருந்தார். அந்த நபரை வெளியே தூக்கியபோது, அவர், “நாங்கள் கடனில் மூழ்கிவிட்டதால், விஷம் குடித்து விட்டோம். இன்னும் 5 நிமிடங்களில் இறந்து விடுவேன்’ என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு 40 நிமிடங்கள் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் அந்த நபரும் இறந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்கொலை செய்துகொண்டவர் களின் சமூகவலைத்தள பதிவுகளையும், வங்கி பரிவர்த்தனைகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். பிரவீன் மிட்டலுக்கு ரூ.20 கோடி கடன் இருந்ததாகவும், இதற்காக அவரது வீடு, சொத்துகளை வங்கிகள் பறித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.