ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலையின் பின்னணி என்ன?

viduthalai
4 Min Read

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மய்யங்களின் கூடமாக செயல்படும் கோட்டாவில் நிகழாண்டில் மட்டும் இதுவரை 14 மாணவர்களும், கடந்த ஆண்டு 17 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டனர்.

நீட் தேர்வுக்கு தயாராகிவந்த மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த 18 வயது மாணவி ஒருவா், மே 3-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து, மே 4-ஆம் தேதி கரக்பூர் அய்.அய்.டி.யில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த முகமது ஆசிஃப் கமர் (22) என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பான மனுக்கள்மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது அந்த நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ‘கரக்பூர் அய்.அய்.டி. மாணவர் மே 4-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். ஆனால், மே 8-ஆம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்ய 4 நாள்கள் தாமதம் ஆனது ஏன்? மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை மிக எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும்.

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கவனத்தில்கொண்டு மாணவர் களின் மனநலனை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான பணிக் குழுவை அமைக்குமாறு மார்ச் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தற்போது மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

மாணவா் தற்கொலை செய்துகொண்டவுடன் காவல்துறையினருக்கு உடனடியாக கரக்பூர் அய்.அய்.டி. நிர்வாகம் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எல்லைக்குள்பட்ட காவல் நிலைய அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். எனவே, சட்டரீதியாக முறையான விசாரணையை காவல்துறையினர் மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

முதல் தகவல் அறிக்கை பதியாதது ஏன்?: நீட் தோ்வுக்கு தயாராகிவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? நிகழாண்டு கோட்டாவில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்’’ என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் குழு, ‘நிகழாண்டு மொத்தம் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தோ்வுக்கு தயாரான மாணவி தற்கொலை விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்அய்டி) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து கூறிய நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றத் தீா்ப்பை நீங்கள் மதிக்கவில்லை. நீட் தோ்வு  பயிற்சி மய்யத்தின் விடுதியில் இருந்து அந்த மாணவி 2024, நவம்பரில் வெளியேறி தனது பெற்றோருடன்  வசித்து வந்தார்.

எங்களது உத்தரவின்படி மாணவி வசித்து வந்த எல்லைக்குள்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி அதைச் செய்யவில்லை. அவா் நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை. இதுகுறித்து அவா் ஜூலை 14-ஆம் தேதி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நீட் தேர்வு பயிற்சி மய்யங்களுக்குப் பெயர் பெற்றது. ஆனால், அண்மைக் காலமாக இங்கு நீட் தேர்வு மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

2025 மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில், ராஜஸ் தானில் வினாத்தாளை ரூ. 40 லட்சம் வரை விற்பனை செய்ய முயன்ற மோசடிக் கும்பல் பிடிபட்டுள்ளது.

ஒடிசாவில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுத்தர ரூ. 20 லட்சம் வரை கையூட்டு வாங்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இந்தக்கும்பலை வழிநடத்தும் பெண் பிரமுகர் கும்பமேளாவின் போது காவல்துறையிடம் பிடிபட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, சிகார் போன்ற நகரங்களில் உள்ள மய்யங்களில் தேர்வெழுதிய மாணவர்கள் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது எப்படி? இதில் முறைகேடுகள் நடந்துள்ளன.  இத்தகைக்கும் ஏற்கெனவே சிபிஅய் வசம்  இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா நகரம், ‘நீட்’ தேர்வு மோசடிகள் முக்கிய மய்யமாக மாறியுள்ளது. நீட் மோசடி குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தில் பல மாநிலங்களில் இருந்து அங்கு சென்று தங்கிப் படிக்கும் மாணவர்களின் தற்கொலையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகரமான கோட்டா முன்னிலையில் இருந்து வருகிறது.

எவ்வளவு நடந்தால் என்ன? தற்கொலைகள் நடந்தால் தான் என்ன?

அடித்தட்டு மக்கள் படித்து மேலே வந்து விடக் கூடாது – அவர்களின் கல்விக் கண்களைக் குத்துவது தானே பார்ப்பனிய பா.ஜ.க. அரசின் மனு தர்மப் பார்வைபடிச் செயல்பாடு!

அடித்தட்டு மக்கள் விழித்து எழாத வரை மனுதர்மத்தின் அகங்கார அணுகுமுறை அடங்கப் போவதில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *