தந்தை பெரியாராலும், சுயமரியாதை இயக்கத்தாலும், அதனுடைய ஆக்கங்களாலும் பயன்பெறாத குடும்பத்தினர், தமிழ்நாட்டில் யாராவது ஒருவர் உண்டா?
எல்லோரும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெரியாரால், சுயமரியாதை இயக்கத்தினால் பயன்பட்டு இருப்பார்கள்!
சென்னை, மே 28 தந்தை பெரியாராலும், சுயமரியாதை இயக்கத்தாலும், அதனுடைய ஆக்கங்களாலும் பயன்பெறாத குடும்பம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வெளிநாட்டில், உலகத்தில் உண்டா? வெளிநாட்டில் வேண்டுமானால், கொஞ்சம் குறைந்து இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், யாராவது ஒருவர் உண்டா? என்றால், கிடையாது. எல்லோரும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெரியாரால், இந்த இயக்கத்தினால் பயன்பட்டு இருப்பார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா-
தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை
தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை
26.5.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், புதுமை இலக்கியத் தென்றல் 1042 ஆவது சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற, சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகச் சிறப்பாக தொய்வின்றி, தொண்டறம் தொடரும் என்பதற்கு பெரியார் திடலே சான்று என்று சொல்லக்கூடிய அளவில், ஒவ்வொரு வாரமும், இரண்டு நாள்கள் சலிப்பில்லாமல், தயக்கமில்லாமல், கேட்கின்றவர்களுக்கும் சலிப்பில்லை, உரையாற்று கின்றவர்களுக்கும் சலிப்பில்லை, சளைக்கவில்லை என இந்நிகழ்விற்கு நிறைய பேர் வந்திருக்கின்றீர்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, நிறைய வயதானவர்களும் இருக்கிறார்கள்.
முதியவர்கள் அல்ல –
பழைய வாலிபர்கள்!
பழைய வாலிபர்கள்!
சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் தோற்றுவித்த அந்தக் காலகட்டத்தில், ‘‘பழைய வாலிபர்கள்’’ என்று சொன்னார். வயதானவர்களை, முதியவர்கள் என்று அவர் சொல்லவில்லை. அதற்கு இந்த ஒரு நல்ல சொற்றொடரை சொன்னார்.
நாங்கள் எல்லாம் யார் என்றால், ‘‘பழைய வாலிபர்கள்’’ என்று சொன்னார். அதில்கூட நாங்கள், ‘‘பழைய’’ என்ற சொல்லை எடுத்துவிட்டோம். நாங்கள்தான் வாலிபர்கள். அதற்குப் பிறகுதான், இளைய வாலிபர்கள். வேண்டுமானால் முதிய வாலிபர்கள் – இளைய வாலிபர்கள் என்று வகைப்படுத்தலாம்.
ஒவ்வொரு வாரமும் தவறாமல் நடக்கும் புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு!
புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பினர் அற்புதமான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வாரமும் சலிக்காமல் நடத்துகிறார்கள். அதற்குக் காரணம் நம்முடைய செல்வமீனாட்சி சுந்தரத்தினுடைய உழைப்பு; அவருடைய குழு – கலையரசன் போன்ற பெருமைக்குரியவர்கள் கொண்ட ஒரு நீண்ட பட்டியல் உண்டு. அவர்கள் எல்லாம் தவறாமல் வந்து பணி செய்கிறார்கள். கேட்பாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.
நான் அடிக்கடி சொல்வேன், யார் வரவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியில் இரண்டு பேர் நிச்சயம் இருப்பார்கள். தனலட்சுமி, தங்கமணி ஆகியோர் கட்டாயம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். மேடை யில் தலைவரோடு நிச்சயம் அய்ந்து பேர் இருப்பார்கள் என்று.
10 பேர் இருந்தாலும், ஒரு மணிநேரம் உரையாற்றுவார் அய்யா பெரியார்!
சுயமரியாதை இயக்கத்தினுடைய தொடக்கம் அதுதான். அய்யா அதைப்பற்றி கவலைப்படாமல், அய்ந்து பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும், ஒரு மணிநேரம் உரையாற்றுவார்.
சுயமரியாதை இயக்கம் வளர்ந்ததே அந்தக் கால கட்டத்தில் இப்படித்தான்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சி. 1042 ஆவது நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி.
சுயமரியாதைச் சுடரொளியும், எடுத்துக்காட்டான கொள்கை வீரரும், சுயமரியாதைக் கொள்கையாளருமான அருமை அய்யா சபாபதி – அவருடைய வாழ்விணையர் அன்பிற்குரிய அம்மா இந்திராணி குடும்பத்துப் பிள்ளைகள், தோழர்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காஞ்சிபுரத்தில் நல்லதும் நடக்கிறது; கெட்டதும் நடக்கிறது
அய்யா சபாபதி அவர்களுக்கு நூற்றாண்டு இந்த ஆண்டு. காஞ்சிபுரத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் நல்லதும் நடக்கிறது; கெட்டதும் நடக்கிறது. ஜெயிலுக்குப் போன சங்கராச்சாரியார்களும் அங்கேதான் இருந்தார்கள். நாட்டிற்கே அறிவுறுத்திய அண்ணா அவர்களும் அங்கேதான் பிறந்தார். நம்முடைய கொள்கையாளர் சபாபதியும் அங்கேதான் பிறந்தார்.
நம்முடைய கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள், சபாபதி அவர்களோடு ஆட்சி மொழிக் காவலர் இராமலிங்கனாரோடு பேட்டி எடுத்ததைப்பற்றியெல்லாம் இங்கே சொன்னார்.
விஞ்ஞானிக்கும் – பக்தனுக்கும் உள்ள வேறுபாடு!
இந்த இயக்கத்தில் ஈடுபட்டவர்கள், இந்தக் கொள்கையில் ஈடுபட்டவர்கள் எப்படி நூறாண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்கள்?
ஒரு விஞ்ஞானி நூறாண்டு காலம் வாழ்வதற்கும், ஒரு சாதாரண பக்தன் நூறாண்டு வாழ்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
பக்தன் என்ன சொல்வான், ‘‘எதுவும் என் கையில் இல்லீங்க, அவன் விட்ட வழிங்க’’ என்று சொல்வான்.
தூயவாழ்க்கை, தெளிவான வாழ்க்கை வாழ்பவர்கள் சுயமரியாதை இயக்கத்தவர்கள்!
ஆனால், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியல்ல; ‘‘எல்லாமே எங்கள் முடிவுதான்’’ என்று சொல்வார்கள்.
குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டுமா? எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பது தங்கள் முடிவுதான் என்றும், அவர்களை சரியான பாதையில் வளர்த்து, அவர்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்றும் அறவாழ்க்கை, தூயவாழ்க்கை, தெளிவான வாழ்க்கை வாழ்ப வர்கள்.
தன்பெண்டு, தன் பிள்ளை என்று சின்னதோர் கடுகு உள்ளம் இல்லாமல், தொல்லுலக மக்கள் எல்லாம் நம்முடைய மக்கள் என்ற அந்தப் பெரு உள்ளம், தாயுள்ளம், உலகப் பார்வை உள்ள உள்ளத்தை உடையதுதான் சுயமரியாதை வாழ்வாகும்.
சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்ததினால், கெட்டுப் போனேன் என்று ஒருவர்கூட சொல்ல முடியாது.
பெரியார் கொள்கையைப் பின்பற்றியதினால், நான் கெட்டுப் போனேன் என்று யாரும் சொல்ல முடியாது.
தெரிந்தோ, தெரியாமலோ, கோவிலுக்குப் போகிறவராக இருக்கலாம்; கடவுளைக் கும்பிடு கிறவராக இருக்கலாம்; அல்லது ஆச்சாரம், அனுஸ்டானம், கிழக்கே பார்க்கவேண்டும் என்று சொல்லுகின்ற மூடநம்பிக்கையாளராகக் கூட இருக்கலாம்.
ஆனால், ஒரே ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
தந்தை பெரியாராலும், சுயமரியாதை இயக்கத்தாலும், அதனுடைய ஆக்கங்களாலும் பயன்பெறாத குடும்பம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வெளிநாட்டில், உலகத்தில் உண்டா? வெளிநாட்டில் வேண்டுமானால், கொஞ்சம் குறைந்து இருக்கலாம்.
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், யாராவது ஒருவர் உண்டா? என்றால், கிடையாது. எல்லோரும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெரியாரால், இந்த இயக்கத்தினால் பயன்பட்டு இருப்பார்கள்.
‘‘பார்ப்பனர்கள் பயன்பட்டார்களா?’’ என்று ஒரு குறுக்குக் கேள்வியை கேட்பார்கள்.
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். பார்ப்பனர்கள் இவ்வளவு விஷமத்தனம் செய்தும், இவ்வளவு நம்மை இழிவுபடுத்தியும், இவ்வளவு நம்மைக் கேவலப்படுத்தி யும், நம்முடைய பெண்களையெல்லாம் தாசிகள் என்று வர்ணித்தார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்ற முயற்சியை, அம்பேத்கர் செய்தபோது, ‘‘இல்லை, இல்லை, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்தால், படித்த பெண்கள் எல்லாம் ஓடிப் போய்விடுவார்கள்’’ என்று திலகர் சொன்னார்.
பெண்களைப் படிக்கக் கூடாது என்று சொன்னவர்கள் யார்?
சுயராஜ்ஜியத்திற்கே அவர்தான் பிறப்புரிமை என்று பெரிதாகச் சொல்வார்கள். ஆனால், அவர் என்ன சொன்னார் தெரியுமா?
பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது; அப்படி படிக்க வைத்தால், திமிர் பிடித்தவர்களாக ஆகிவிடுவார்கள் என்றார்.
ஜோதிபாபுலே, பெண்களைப் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்கிறார். சாவித்திரி பூலே, பெண்களைப் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்கிறார்.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார், அதுவும் சாதாரண சங்கராச்சாரியார் அல்ல; அவருக்குக் காற்று அடிக்கிறார்கள் பாருங்கள், பலூனில் காற்று அடிப்பதுபோன்று, ‘தினமலர்’ பத்திரிகையைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும்.
‘‘மகா, மகா மகா பெரியவா’’ என்று வா………………… என்று சொல்வார்கள்; ‘ள்’ என்று கூட போடமாட்டார்கள்.
ஒருமுறை கனடாவிற்கு கச்சேரிக்குச் சென்றார் ஒருவர். கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போதே, கடம் உடைந்துவிட்டது. என்ன செய்வது என்று, கடம் அடிப்பவர் நினைத்தாராம்.
உடனே சங்கராச்சாரியாரை நினைத்தவுடன், ‘‘உடனே ஒரு கடம் அங்கே வந்துவிட்டது’’ – எல்லாம் அற்புதங்கள், அதிசயங்கள்.
சங்கராச்சாரியார் சொல்வது என்ன ஆரூடமா?
இன்னொருவர், நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்தவர் – திடீரென்று அவருக்கு ‘ஞானஸ்தானம்’ வந்துவிட்டது. அரசியல் கட்சியில் இருந்தவர்.
அவர், காஞ்சிபுரத்திற்குச் சென்று, சங்கராச்சாரியாரை சந்தித்துவிட்டு திரும்புகிறார்; சிறீபெரும்புதூருக்கு அருகே சென்றபோது, இப்போது மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாராம்; ‘‘நீ போவதற்குள் மழை பெய்யும்’’ என்று சங்கராச்சாரியார் சொன்னாராம். சங்கராச்சாரியார் சொல்வது என்ன ஆரூடமா?
அவரை பூஸ்ட் செய்வார்கள். அந்த இனத்திற்கு அதுதான் பெருமை.
குழவிக் கல்லை வைத்து, எல்லோரையும் கும்பிட வைத்துவிட்டார்கள்.
திருவண்ணாமலையில் பாலாபிஷேகம் என்று தொலைக்காட்சியில் நேரலையில் காட்டுகிறார்கள்.
ஏனென்றால், தொலைக்காட்சி அருணாசலேசுவரர் கண்டுபிடித்தது அல்லவா?
பார்ப்பனர்கள்கூட, பெரியாரின் இயக்கத்தால் இன்றுவரையில் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
ஆகவே, பெரியாரால் பயன்படாதவர்கள் யாராவது உண்டா? பார்ப்பனர்கள்கூட, பெரியாரின் இயக்கத்தால் இன்றுவரையில் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பார்ப்பனர்களை நாம் வெறுக்கவில்லை; ஆனால், அவர்கள், வேண்டுமானால், நம்மை வெறுக்கலாம்.
நாம் என்ன சொல்கிறோம், ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ – ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று.
உங்களுக்கு மூன்று சதவிகித இடம் உண்டு. அது உங்கள் இடம். அதற்கு மேலும் அவர்கள் ஆசைப்படும்போதுதானே, சங்கடம் ஏற்படுகிறது.
எங்கள் ஆட்களுக்குக் கிடைக்கவேண்டியதை, கிடைக்காமல் செய்கிறீர்களே – நியாயமாக, பசியேப்பக்காரர்களை முதலில் பந்தியில் அமர உள்ளே விடவேண்டும். புளியேப்பக்காரர்களை அதற்குப் பிறகுதானே உள்ளே விடவேண்டும்.
ஆனால், அப்படி நடைமுறையில் இல்லையே!
அப்படி இருந்தும், பார்ப்பனர்கள் இன்னமும் பத்திரமாக இருக்கிறார்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சியில்கூட, அவர்கள்தான் பத்திரமாக நன்றாக இருக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்!
நம்மில் சில பைத்தியக்காரர்கள், பார்ப்பனர்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு தவறான கணக்குப் போட்டுக் கொண்டு, இல்லாத கடவுளை வணங்குவது போன்று, வராத ஒரு ஆசைக்காக வணங்கிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். ‘‘கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்றது’’ அது.
ஆகவே, பார்ப்பனர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
மகளிரைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை.
எல்லா மகளிருக்கும், இந்த இயக்கம் பாதுகாப்பானது.
பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்துத்தான்.
பார்ப்பனப் பெண்களையும், சூத்திரப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.
பல கூட்டங்களில் நான் சொல்லியிருக்கிறேன். மகளிர் நிறைய பேர் இருக்கிறீர்கள். அதில், மூத்தவர்களும் இருக்கிறீர்கள். இளையவர்களும் இருக்கிறீர்கள்.
50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீர்களேயானால், அக்கிரகாரம் என்று தனியாக இருக்கும். அந்தத் தெருவில், நம்மைப் போன்றவர்களை நடமாடக் கூட விடமாட்டார்கள்.
பிறகு, கொஞ்சம் வளர்ச்சி அடைந்தவுடன், அக்கிரகாரத் தெருக்களில் நடக்க ஆரம்பித்தோம். கடலூரில், எங்கள் வீட்டிற்குச் செல்லவேண்டுமானால், அக்கிரகாரத் தெருவை கடந்துதான் செல்லவேண்டும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில், எங்கேயாவது ஒரு ‘‘மொட்டைப் பாப்பாத்தி’’யைப் பார்க்க முடியுமா?
கணவனை இழந்த பார்ப்பனப் பெண், வெள்ளை புடவை உடுத்தி, மொட்டை அடித்தி ருப்பார். அவரை, ‘‘மொட்டைப் பாப்பாத்தி’’ என்று அழைப்பார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில், எங்கேயாவது ஒரு ‘‘மொட்டைப் பாப்பாத்தி’’யைப் பார்க்க முடியுமா?
காவல்துறை ஆணையராக இருந்த கி.இராதா கிருஷ்ணன் அன்னை மணியம்மையாரிடம், ‘‘பெரியாரால், எங்களுடைய சமுதாயம்தான் (பார்ப்பன) லாபமடைந்தது’’ என்றார்.
மொட்டைப் பாப்பாத்தியை இப்போது எங்கேயும் பார்க்க முடியாது? ஒரே ஒரு இடத்தைத் தவிர, ‘‘தசாவதாரம்’’ திரைப்படத்தில், கமலகாசன்மூலமாகப் பார்க்கலாம்.
(தொடரும்)