ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (11)

viduthalai
7 Min Read

பாடம் 11

பிரிஸ்பேன் நகரின் கடைசி நிகழ்ச்சியாக மருத்துவர் கண்ணன் நடராசன் வீட்டில் பதிவு செய்யப்பட்ட வானொலி பேட்டி அமைந்தது. அன்றைய நாள் முழுவதும் எங்களை காரில் அழைத்துச் சென்ற தோழர் முகுந்தராஜ் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தாய்த் தமிழ்ப் பள்ளிகளின் வழிகாட்டியாக செயல்படுகிறார். இ-கலப்பை என்ற எழுத்துருவை உருவாக்கி இணையத் தமிழ் உலகில் புகழ் பெற்று விளங்குகிறார். இத்தனை பொறுப்புகளை ஏற்றிருக்கும் தோழர் முகுந்தராஜ் இரவு முழுவும் பணியாற்ற வேண்டிய சூழலிலும் மறுநாள் காலை எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை  ஏற்றுக்கொண்டிருந்தார். எனவே இரவு முழுவதும் தன் காரிலேயே இருந்து அலுவலகப் பணிகளை கவனித்துக்கொண்டு இருந்தார்.

காலையில் குறித்த நேரத்தில் பிரிஸ்பேன் விமான நிலையம் சென்று சேர்ந்தோம். ஆசிரியர் அவர்கள், தோழர் முகுந்தராஜின் உதவிக்கு நன்றி கூறி, மேலும் பிரிஸ்பேன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆஸ்திரேலியா பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத் தோழர்களின் அரிய முயற்சியைப் பாராட்டி மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக் கூறினார்.

சிறப்புக் கட்டுரை

திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் பற்றியும், ஆசிரியருடைய பணிகள் மற்றும் பிரச்சாரம் பற்றியும் அறிந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து வந்திருந்த புவனா என்ற மாணவியும் நாடு திரும்பி மருத்துவக் கல்லூரியில்  சேர்வதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார். தான் இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கற்றுக் கொண்ட சிறந்த பகுத்தறிவு வாழ்வியல் பாடங்களுக்காக ஆசிரியரிடம் நன்றி கூறி விடைபெற்றார்.

காலை 10 மணிக்கு பிரிஸ்பேன் விமானநிலையத்தில் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு கேன்பரா விமான நிலையத்தில் இறங்கினோம். அங்கே எங்களை வரவேற்க ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயலாளரான சுமதி காத்திருந்தார். அவருடன் திராவிடர் கழகத்தின் பொருளாளராக நீண்ட காலம் இருந்த அய்யா கா.மா. குப்புசாமி அவர்களின் பேரனும், மறைந்த சகோதரர் வடுகநாதனின் மகனுமாகிய பொறியாளர் அறிவுமணி மற்றும் திராவிடர்கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் குடும்ப நண்பரான சுரேஷ் ஆகியோர் விமான நிலையத்தில் எங்களை வரவேற்றனர். அங்கிருந்து கேன்பராவில் நாங்கள் தங்க வேண்டிய ரிட்ஜஸ் (Rydges) என்ற உணவு விடுதியை அடைந்தோம். அன்று மதியம் சுரேஷ் வீட்டில் இருந்து ஆசிரியருக்கு உடல்நலனுக்கேற்ப சமைக்கப்பட்ட உணவு அளிக்கப்பட்டது.

சிறப்புக் கட்டுரை

அறைக்கு வந்தவுடன்,சுமதி ஆசிரியருக்கு, “Look East,Cross Black Waters“ என்ற நூலையும் எனக்கு “ The women’s Hour” என்ற நூலையும், அண்ணாமலை மகிழ்நனுக்கு அவர்களுக்கு EWS இட ஒதுக்கீடு சரியா தவறா? என்ற நூலையும் பரிசளித்தார் . மேலும் ஆசிரியருக்கு ஒரு ஸ்வெட்டரும், எனக்கு ஒரு சால்வையும் கைப்பையும் பரிசளித்தார். குளிரும் வெயிலும் மிதமாக இருந்தாலும் ஆசிரியருக்கு அந்த ஸ்வெட்டர் மிகவும் பயனுடையதாக இருந்தது.

மதிய உணவிற்குப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகு சுமதி விஜயகுமார் வீட்டிற்குச் சென்றோம். அந்த குறுகிய நேரத்திற்குள்ளாக ஆசிரியர் தனக்கு சுமதி அளித்த நூலின் முன்னுரையோடு நூலின் ஒரு பகுதியையும் படித்து முடித்து விட்டு, “இந்த நூல் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையுடையவரால் எழுதப்பட்டுள்ளது: இந்தியாவின் பெருமையைப் பேசுவது போன்ற போர்வையில் எழுதப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார். சுமதிக்கு ஆசிரியர் அவ்வளவு விரைவாக தான் அளித்த நூலின் பகுதிகளைப் படித்து அதன் சாரத்தை எடுத்துச் சொன்னது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.

சுமதி திருச்சியைச் சேர்ந்தவர். கேன்பராவில் அரசுப் பணியில் இருப்பவர். அவரது இணையர் விஜயகுமார் சேலம் நகரத்தைச் சார்ந்தவர். அவர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுபவர். இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.அவர்கள் மகன் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக் கல்விக்குத் தயாராகிறார். ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகுதான் தந்தை பெரியாரைப்பற்றி அறிந்து கொண்டதாக சுமதி கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் விழாவின் போது சுமதி பெரியார் திடலுக்கு வந்திருந்தார். ஆசிரியரையும் என்னையும் சந்தித்தார். பின்பு ஆஸ்திரேலியா பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து எங்களை அழைத்துச் சென்ற போதும், மீண்டும் பல இடங்களுக்குச் சென்ற போதும் சுமதிதான் காரை ஓட்டி வந்தார். இரவு நேரம் தனியாக காரில் திரும்பிச் செல்ல வேண்டுமே என்று நாங்கள் யோசித்தால் இந்த நாட்டில் அந்த பயமே தேவை இல்லை அய்யா ! என்று சிரித்தபடி கூறுவார்.

அவரது வீட்டில் உணவருந்தி ஓய்வாக சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். சுமதியின் இணையர் விஜயகுமார் தனது அலுவலகப் பணிகளையும் கவனித்துக் கொண்டு எங்களுக்கு உணவு பரிமாறி கலகலப்பாக உரையாடினார். அவர்கள் வீட்டில் இருந்து புறப்படும்போது எங்களை அழைத்துச் சென்று உணவு விடுதியில் விட்டுச் சென்றார்கள். இன்றைக்குதான் உண்மையிலேயே ஓய்வு என்றார் ஆசிரியர். நாளை காலையில் நாடாளுமன்றத்தைப் பார்க்கப் போகலாம் அய்யா என்று கூறி விடை பெற்றார் சுமதி.

சிறப்புக் கட்டுரை

மறுநாள் 20.03.2025 அன்று காலை நாங்கள் தங்கி இருந்த விடுதியிலேயே உணவருந்திவிட்டு, நாடாளுமன்றத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். கேன்பராவில் சுற்றுலா செல்வதற்கான பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இல்லை. அனைத்து இடங்களுமே அரசு தொடர்பானவை. வரலாற்றுச் சின்னங்களாக இருப்பவை. ஏனெனில் கேன்பரா என்பது எந்த மாநிலத்தின் பகுதியும் அல்ல. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலியா கண்டத்தின் தலை நகரம் ஆகும். 1913 ஆம் ஆண்டுவரை விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்பேர்ன் நகரத்தில்தான் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் இருந்தது. வேகமாக  வளர்ந்து வரும் தொழில் நகரமான சிட்னி, நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமாகும். வளர்ச்சியின் அடிப்படையில் நாடாளுமன்றம் சிட்னியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததால் ஆஸ்திரேலிய அரசு இரண்டு மாநிலங்களிலும் சேராத இயற்கை வளம் பொருந்திய நிலப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு நாடாளுமன்றத்தை கட்டி எழுப்பியபின் 1927 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டாட்சியின் (Federal Government) தலைநகராக கேன்பரா அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றமும் அதைச் சார்ந்த அரசு அலுவலகங்களும் நூலகமும் மியூசியமும் அமைந்த அப்பகுதிக்கு  ‘கேன்பரா’ என்று பெயர் சூட்டப் பட்டது. கேன்பரா  என்ற ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மொழிச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Meeting Place என்று பொருளாம். தமிழில், ‘ கூடல் நகரம்’ என்று பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு உருவான பழைய நாடாளு மன்றம் கட்டடத்திற்கு மாற்றாக 1988 ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டது. அது மிகப் புதிய வடிவில் வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை

21.03.2025 உணவு விடுதியிலேயே காலை உணவை முடித்து விட்டு ஆசிரியருடன் நான், சுமதி மற்றம் அண்ணாமலை மகிழ்நன் ஆகியோர் நாடாளுமன்றத்தைப் பார்க்கச் சென்றோம். கேன்பரா புதிய நாடாளுமன்றக் கட்டடம் அழகானது. இயற்கையான வெளிச்சம் உள்ளே வரும்படியாக கட்டப்பட்டது. அதன் தாழ்வாரங்களில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வரலாறு அனைவரும் அறியும்படி ஓவியங்களாகவும், அச்சிட்ட திரைகளாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த நாடாளுமன்றத்தின் கொத்தளத்தில் நின்றுதான் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் நாள் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரட் அவர்கள் அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்கு தாங்கள் இழைத்த அநீதிகளுக்காக மன்னிப்புக் கேட்ட நெகிழ்ச்சியான வரலாறும் நிகழ்ந்தது. இத்தகைய நினைவுகளுடன் அந்த நாடாளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்த எங்களுக்கு நாங்கள் எதிர்பாராத உணர்ச்சிப் பெருக்கான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது..

தொடர்ச்சியாக ஓய்வில்லாத பயணங்களாலும், நிகழ்ச்சிகளாலும் ஆசிரியருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அதிக தூரம் அவர் நடப்பதை தவிர்க்க வேண்டி இருந்தது. அப்படி நடக்க வேண்டிய இடங்களில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து கொண்டோம். கேன்பராவில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் நுழைந்த உடன் சுற்றிப் பார்க்க வேண்டிய தூரம் அதிகமாக இருந்ததால் ஆசிரியரை ஓரிடத்தில் அமரச் செய்து விட்டு அண்ணாமலை மகிழ்நன் சக்கர நாற்காலி பெறுவதற்கான பிரிவிற்குச் சென்று விசாரித்தார். அங்கிருந்த ஒரு அதிகாரி தமிழில் யாருக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று கேட்க தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ள மூத்த தலைவருக்கு, என்று ஆசிரியரின் பெயரைக் கூறியவுடன்  சக்கர நாற்காலியைக் கொடுத்துவிட்டு நானும் அவரைப் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை மகிழ்நனுடன் வந்தார். நல்ல உயரமான தோற்றம் கொண்ட அந்த அதிகாரி அருகில் வந்தவுடன் ஆசிரியருக்கு வணக்கம் கூறினார். ஆசிரியரும் அவருக்கு வணக்கம் கூறியதும் அந்த அதிகாரி ஆசிரியரின் கைகளைப் பற்றிக் கொண்டு “அய்யா நான் ஒரு ஈழத் தமிழன். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் இங்கு வந்து பணியாற்றுகிறேன். நாங்கள் அரசியல் ஆதரவின்றித் தவித்த காலங்களில் நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ உதவிகளை செய்தீர்கள். அக்காலத்தில் நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு மிகப் பெரிய ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்தது. உங்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று உணர்ச்சி மேலிட நன்றி கூறினார். ஆசிரியரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவரிடம் சில விவரங்களைக் கேட்ட பிறகு, “எவ்வளவோ துன்பங்களை துயரங்களை போராட்டங்களைக் கடந்து இங்கு வந்து நல்ல நிலையில் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை இனியேனும் நிம்மதியாக இருக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவரை வாழ்த்தினார். கடைசியாக “நீங்க நல்லா இருக்கணும்” என்று ஆசிரியர் கூறியபோது அனைவரும் கலங்கி நின்றோம். அந்த அதிகாரி விடை பெற்றுக் கொண்டார்.

சிறப்புக் கட்டுரை

நாங்கள் இன்னொரு தொல்குடிச் சமூகத்தின் தழும்புகளைத் தாங்கி நிற்கும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்கத் தொடங்கினோம்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *