நடப்புக் கல்வி ஆண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

viduthalai
2 Min Read

சென்னை, மே 27– தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) திறந்து வைத்தார்.

11 புதிய கல்லூரிகள்

2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் நீலகிரி மாவட்டம் – குன்னூர், திண்டுக்கல் மாவட்டம்-நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம்- விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம்- மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம்,தூத்துக்குடி மாவட்டம்-ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடலூரில் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று நடைபெற்ற அரசு விழாவில் கடலூர் மாவட்டம்- பண்ருட்டியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கோவி. செழியன், டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர் கல்வித் துறை செயலாளர் சமய மூர்த்தி,கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, பொதுப்பணித்துறை (தலைமை என்ஜினீயர் தொழில்நுட்பம்) சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

5 பாடப்பிரிவுகள்

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இப்புதிய கல்லூரிகள் ஒவ்வொன்றும் தலா 5 பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாம் ஆண்டுக்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 11 கல்லூரிகளுக்கு மொத்தம் 132 ஆசிரியர்கள் மற்றும் 154 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவித்து, கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் ரூ.25 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரிக்கும் 5 பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கு 3 ஆயிரத்து 50 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 ஆயிரத்து 150 மாணவர்கள் பயன்பெறுவர். தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *