புற்றுநோய்க்கான
சிகிச்சை முறைகள் என்னென்ன?
சிகிச்சை முறைகள் என்னென்ன?
புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை என மூன்று சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த மூன்று சிகிச்சை முறைகளையும் ஒவ்வொரு புற்றுநோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள.
ஒரு சில புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தேவைப்படும். ஒரு சில புற்றுநோய்களுக்கு இந்த மூன்றில் மூன்றும் அல்லது ஏதேனும் இரண்டோ தேவைப்படலாம். இவற்றை புற்றுநோய் சிறப்பு நிபுணர்களின் கூட்டுக்குழும சிகிச்சை முறை முடிவெடுக்கும்.
கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் பொழுது பாதிப்புகள் ஏற்படுமா?
பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை என்றாலே பலர் பயப்படுகின்றனர். ஆனால் இது தேவையில்லாத பயம். கதிர்வீச்சு கொடுக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டும்தான் அதுவும் அந்தந்த நோயாளியின் உடல் தன்மைக்கு ஏற்பவாறு எவ்வளவு கதிர்வீச்சு கொடுக்க வேண்டும்? எங்கு கொடுக்க வேண்டும்? பிற உறுப்புகள் பாதிக்காத அளவிற்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் முடிவெடுப்பார்கள். இவ்வாறு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை கட்டியை மட்டுமே அழிக்கும் தன்மை கொண்டது. பிற நல்ல உறுப்புகளை இவை பாதிக்காது. சிறிய பக்கவிளைவுகளான தோலின் நிறம் மாறுதல், வாய்ப்புண் ஏற்படுதல் ஆகியவை ஏற்படலாம். ஆனால் இவையெல்லாம் தற்காலிகமானவையே. அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள பல மருந்துகள் உள்ளன.
கதிர்வீச்சு சிகிச்சையில் அண்மைக் காலமாக லீனியர் ஆக்ஸிலரேட்டர் எனப்படும் கருவி பயன்படுத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் கோபால்ட் எனப்படும் கருவி பயன்படுத்தப்பட்டு வரும்பொழுது பக்கவிளைவுகள் அதிகமாக காணப்பட்டன. இவற்றைத் தடுக்கும் வகையில் தற்போது லீனியர் ஆக்ஸிலரேட்டர் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய லீனியர் ஆக்ஸிலரேட்டர் கருவிகள் மூலம் மிகத் துல்லியமாக கதிர்வீச்சின் அளவு மற்றும் கதிர்வீச்சு அளிக்கக்கூடிய பகுதி ஆகியவற்றை கட்டியின் தன்மைக்கேற்பவாறு, கம்ப்யூட்டர் மென்பொருள்கள் மூலம் எளிதில் வடிவமைத்து அந்தந்த நோயாளியின் நோயின் தன்மைக்கேற்றவாறு கதிர்வீச்சு சிகிச்சையை வழங்க முடியும். இது தவிர உள்கதிர்வீச்சு கருவியிலும் பல முன்னேற்றங்கள் வந்துள்ளன. புற்றுநோய்க் கட்டி பாதித்து இருக்கும் பகுதிக்கு நேரடியாக ஊசி மூலம் கதிர்வீச்சினை செலுத்தி அந்த கட்டிகளை மிகத் துல்லியமாக கரைக்கக் கூடிய கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புரோட்டான் தெரபி, நியூட்ரான் தெரபி, டோமோ தெரபி ஆகியவை கதிர்வீச்சு சிகிச்சை துறையில் ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்கள் ஆகும் இதில் எந்த வகையான கதிர்வீச்சு சிகிச்சை எந்தெந்த நோயாளிகளுக்கு உகந்தது என்பதை கதிர்வீச்சு துறை நிபுணர்கள் முடிவு செய்து வழங்குவார்கள்.
நவீன முன்னேற்றங்கள்
புற்றுநோய் என்றாலே மிகப்பெரிய அறுவை சிகிச்சை என்று இருந்த காலம் போய் தற்போது புற்றுநோய்க்கு உறுப்புகளை அகற்றாத வண்ணம் கட்டியை மட்டும் அகற்றி அழிக்கக்கூடிய நவீன அறுவை சிகிச்சை முறைகள் முன்னேறியுள்ளன. அது தவிர நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் லாப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையும் புற்றுநோய்க் கட்டிகளுக்கு செய்யப்படுகிறது. மேலும் ரொபாடிக் சர்ஜரிகளும் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட முழு உறுப்பினையும் அகற்றி விடாமல் கட்டியை மட்டும் அகற்றி அதே சமயத்தில் மீண்டும் வராமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொண்டு முழு உறுப்பை அகற்றாமலேயே புற்றுநோயிலிருந்து நோயாளிகளை பாதுகாக்க முடியும்.
புற்றுநோய் மருந்தியல் சிகிச்சைத் துறையில் அண்மைக்காலமாக டார்கெட் தெரபி எனப்படும் ஆன்டிபாடி சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகை மருந்துகள் கீமோதெரபி மருந்துகள் போல் அல்லாமல் பக்கவிளைவுகள் ஏதுமின்றி நேரடியாக கேன்சர் செல்லை மட்டும் டார்கெட் செய்து அழிக்கக்கூடியவை. இதனால் பக்கவிளைவுகள் குறைகின்றன. மேலும் புற்றுநோய் செல்கள் அழியும் விகிதம் அதிகமாகின்றன. இத்தகைய டார்கெட் தெரபிகள் தான் நவீன காலமாக பல்வேறு புற்றுநோய்களுக்கு உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவை பல பிரமிக்கத்தக்க மாற்றங்களை புற்றுநோயாளிகளின் குணப்படுத்தும் விகிதத்தில் ஏற்படுத்தி வருகின்றன. அண்மைக்காலமாக டி செல் தெரபி, கார் டி செல் தெரபி எனப்படும் சிகிச்சை முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இது புற்றுநோய் செல்களை குறிப்பாக ரத்த புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஒருவகை சிகிச்சை முறையாகும் இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள டி செல்கள் நோய் எதிர்ப்பு அணுக்களை தனியே பிரித்து எடுத்து அந்த செல்களை புற்று நோய்க்கு எதிராக போராடக்கூடிய தன்மை உள்ள செல்களாக மாற்றி மறுபடியும் நோயாளியின் உடம்பிற்குள் செலுத்துவதன் மூலம் அந்த செல்கள் உடலில் பன்மடங்கு பெருகி அந்த புற்றுநோய் செல்களை நேரடியாக கண்டறிந்து சென்று அழித்து விடுகின்றன இதனை கார்ட் டி செல் சிகிச்சை என அழைக்கிறோம்.
புற்றுநோய் சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகளை அகற்றி விடுவதனால் பாதிப்புகள் ஏற்படாதா?
அண்மைக்காலங்களில் முழு உறுப்பினை உறுப்புகளையும் அகற்றாமல் புற்றுநோய்க் கட்டிகளை மட்டும் அகற்றி அழிக்கப்படும் சிகிச்சை முறைகள் நிறையவே முன்னேற்றமடைந்துள்ளன. உதாரணத்திற்கு மார்பக புற்றுநோயில் முழு மார்பகமும் அகற்றப்பட வேண்டிய நிலைமை போய், தற்போது கட்டியை மட்டும் அகற்றி விட்டு அதே அளவு குணமடையும் விகிதத்தை நாம் காண முடிகிறது. எனவே முழு உறுப்பினையும் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் சிறுநீரக பகுதிகளில் சிறுநீர்ப்பை பகுதியில் புற்று நோய்க் கட்டி ஏற்படும் பொழுது அந்த முழு உறுப்பையும் அகற்ற நேரிட்டால் சிறுநீர் கழிப்பதற்கு ஒரு துவாரம் செயற்கையாக வயிற்றின் மேற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் ஒரு பை பொருத்தி காலம் முழுவதும் நோயாளி அந்த பையிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் முந்தைய காலங்களில் இருந்தது. ஆனால் தற்போது சிறுநீர் பை உறுப்பை அகற்றாமல் ரேடியோதெரபி மற்றும் மருந்தியல் சிகிச்சை அளிப்பதன் மூலம் கட்டியைக் கரைத்து அறுவை சிகிச்சையைத் தவிர்க்கக்கூடிய சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளி புற்றுநோயிலிருந்தும் குணமடைய முடியும்.
செயற்கை துவாரம்
அதே சமயத்தில் தன்னுடைய இயற்கையான பாதையிலேயே சிறுநீர் கழிக்க முடியும். வயிற்றின் மேற்பகுதியில் துளை அமைப்பதை தவிர்க்க முடியும். இதேபோல் தொண்டை பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களுக்கு லாரிங்ஸ் அதாவது குரல் வளை புற்றுநோய்க்கு முந்தைய காலங்களில் முழுவதுமாக குரல் வளையை அகற்றிவிட்டு மூச்சு விடுவதற்கு செயற்கையாக ஒரு துவாரம் செய்து கழுத்தில் அமைத்து விடுவார்கள் இதனால் நோயாளிகள் பேச முடியாது அந்த செயற்கை துவாரம் மூலமாக மட்டுமே சுவாசிக்க முடியும் நிலைமை இருந்தது ஆனால் அண்மை காலங்களில் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை இணைந்து அளிக்கும் போது இத்தகைய குரல்வளை புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சைக்கான அவசியமே இல்லாமல் குணமடைந்து விடுகின்றன.
மலக்குடல் பகுதியில் வரக்கூடிய புற்று நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மலக்குடலை அகற்றிவிட்டு மலம் கழிக்கும் பாதையில் செயற்கை துவாரமாக வயிற்றின் மேற்பகுதியில் ஏற்படுத்தும் சிகிச்சை முறை முந்தைய காலங்களில் சாதாரணமாக இருந்தன. ஆனால் தற்போது அத்தகைய சிகிச்சை முறைகளை தவிர்க்கும் வண்ணம் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை அளித்து நோயின் தன்மையை குறைத்து அறுவை சிகிச்சையை குறைந்த அளவில் செய்வதன் மூலம் இயற்கையான பாதையிலேயே மலம் கழித்து அதே சமயத்தில் புற்றுநோயிலிருந்து குணமடையவும் வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையே இல்லாமல் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை மூலம் மட்டுமே கூட சிகிச்சை அளித்து குணமடைய செய்ய முடியும்.
எனவே முந்தைய காலங்களில் புற்றுநோய் என்றாலே பாதிக்கப்பட்ட உறுப்புகளை முழுவதுமாக அகற்றி காலம் முழுவதும் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான சிகிச்சை முறைகள் தவிர்க்கப்பட்டு தற்பொழுது நோயாளியின் வாழ்வு காலத்தில் அவருடைய வாழ்க்கை தரத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் அளவிற்கு சிகிச்சை முறைகள் முன்னேறிக்கொண்டே வருகின்றன.
புற்றுநோய்க்கு தடுப்பூசி
கருப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க நாம் எச்பிவி (ஹூமன் பாபிலோமா வைரஸ்) எனப்படும் ஒரு தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். ஒன்பது வயது முதல் நாற்பத்தைந்து வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.