சென்னை, மே 26- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி
தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில் நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,635 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (25.5.2025) நிறைவு பெற்றது.
முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக்கு 11,140 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேரடி 2ஆம் ஆண்டு படிப்பில் சேர 12,184 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கால அவகாசம் நீட்டிப்பு
இதற்கிடையே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான அவகாசமானது கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tnpoly.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் வழி முறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தவிர கல்லூரிகளே இனி நேரடியாக விண்ணப்பங்களை வழங்கி சேர்க்கை நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 68 சதவீத இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன. இந்த ஆண்டு சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயர் கல்வி தொடராதவர்கள் மற்றும் பத்தாம் வகுப்புக்கு பின்பு இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அத்தகைய மாணவர்களை தொடர்பு கொண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான பணிகள் தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
விலையில்லா மடிக் கணினி உதவித்தொகை வழங்கப்படும்
கிண்டி மகளிர் அய்டிஅய் சேர்க்கை
ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, மே 26- கிண்டி மகளிர் அய்டிஅய்யில் சேர விரும்பும் மாணவிகள் வரும் ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
தொழில் பிரிவுகள்
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மகளிர் அய்டிஅய்யில் 2025ஆம் ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் கணினியில் எம்பிராய்டிங் வடிவமைப்பு, அலங்கார நுட்பங்கள், ஃபேஷன் தொழில் நுட்பம், கட்டடக்கலை வரைவாளர், தகவல் தொடர்பு தொழில் நுட்பம், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், தையல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை உட்பட தேவையான சான்றிதழ்களுடன் https://skilltraining.tn.gov.in/index.html என்ற இணையத்திலும், கிண்டியில் உள்ள மகளிர் அய்டிஅய்யை நேரடியாக தொடர்பு கொண்டும் வரும் ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். பயிற்சிபெறும் மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி, மிதி வண்டி, சீருடை, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 உள்ளிட்டவை வழங்கப்படும்.
பயிற்சி இலவசம்
பயிற்சி முடித்தவுடன் தொழிற் பழகுநர் பயிற்சியும், பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப் படும். தகுதியுள்ள மாணவிகள் கூடுதல் விவரங்களை 044 – 2251 0001, 94990 55651 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
4 மாநிலங்களில்
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
புதுடில்லி, மே 26- குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (25.5.2025) அறிவித்தது.
ஜூன் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூன் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா, கேரளாவில் நிலம்பர், மேற்கு வங்காளத்தில் காளிகஞ்ச், குஜராத்தில் காடி மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினம் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.