உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. சட்ட நடவடிக்கை எடுக்கும் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் பேட்டி

viduthalai
2 Min Read

சென்னை, மே 25- அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று சட்டத்துறை செயலாளர்
ஆர்.என்.இளங்கோ தெரிவித் துள்ளார்.

அதிகார வரம்பு மீறல்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்று தி.மு.க. சட்டத்துறை செயலாளர்
என்.ஆர்.இளங்கோ எம்.பி., சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமலாக்கத்துறை தங்களது வரம்புகளை மீறி செயல்படுகிறது, மாநில சுயாட்சிக்கு எதிரானவை, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை என்பதை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது.

2014ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை டாஸ்மாக் ஊழியர்கள் மீது அவ்வப்போது கணக்கில் வராத பணத்துக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 46 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் அ.தி.மு.க. ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட 39 வழக்குகளும், தி.மு.க. ஆட்சியில் 7 வழக்குகளும் அடங்கும்.இந்த பணத்துக்கு தகுந்த விளக்கம் கொடுத்தால் இந்த வழக்குகள் முடித்து வைக்கப்படும். அந்த வகையில் பதிவு செய்யப் பட்ட 46 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதற்குமான தீர்ப்பு

இந்த வழக்குகளில் சிக்கிய ஊழியர்கள் வீடுகளில் சோதனை நடத்தாமல், அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்துக்குள்ளே சென்று சோதனை நடத்தியது முறையற்றது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

அமலாக்கத் துறை ஒரு வழக்கை எடுத்து நடத்த வேண்டுமென்றால் அதற்கு முதன்மை வழக்கு ஒன்று இருக்க வேண்டும். அந்த வழக்கில் இடம் பெற்றவர் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு சென்று ரூ.1,000 கோடி முறைகேடு, ஊழல் என்று அரசியல்வாதிகள் போன்று அமலாக்கத்துறை அறிக்கைகளை கொடுத்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது. இதைத்தான் தமிழ்நாடு அரசும், தி.மு.க.வும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்தது. இதை உச்சநீதிமன்றமும் ஒப்புக்கொண்டு தடை விதித்து இருக்கிறது.

உச்சநீதிமன்றம் முதன்முறையாக மாநில சுயாட்சிக்கு எதிராக நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்று அமலாக்கத் துறையை கேட்டிருப்பதால் இந்தியா முழுவதுக்குமான தீர்ப்பாக இதனை நாங்கள் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருகிறது. இதற்காக அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்பதையும் மக்களும் நன்கு அறிவார்கள்.

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இந்த சட்டத்தை பயன்படுத்தி உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை தி.மு.க. எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், ‘அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை மூலம் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டு உள்ளது’ என்று கருத்து தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *