ஒரகடத்தில் ரூ.12,870 கோடியில் புதிய அய்போன் ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

viduthalai
2 Min Read

சென்னை, மே 25- தமிழ்நாட்டில் அய்போன் தொடர்பாக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறது. ஏற்கெனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூரில் உள்ள அதன் புதிய உற்பத்தி நிலையத்தில் அய்போன் மாடல்களை தயாரிக்க தொடங்கியுள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தைவான் நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான அய்போன்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே தன்னுடைய அய்போன் உற்பத்தி ஆலையில் அய்போன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது.

இந்த நிலையில், சென்னை ஒரகடத்தில் அய்போன்களை தயாரிக்கும் மேலும் ஓர் ஆலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைக்கிறது. ரூ.12,870 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் புதிய ஆலையில் அய்போன் டிஸ்ப்ளே இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கிலாந்தின் லண்டன் பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ள தகவலில் ஃபாக்ஸ்கான் புதிய ஆலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ்கான் தனது இந்திய அலகான யூசான் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டில் ரூ.12,870 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. ஒரகடத்தில் அமையும் அய்போன் டிஸ்ப்ளே அசம்பிளி ஆலையில் 14,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கானின் புதிய ஆலை மூலம் அய்போன்கள் தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர
மாணவர்கள் போட்டா போட்டி1.25 லட்சம் இடங்களுக்கு
2 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு

சென்னை, மே 25- அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் 1.98 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு கலைக்கல்லூரி

தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இணைய வழியில் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று, நேற்று முன்தினம் (23.5.2025) மாலை நிலவரப்படி மொத்தம் 1 லட்சத்து 98,263 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 57,093 மாணவர்கள் மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இதனிடையே, விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 27ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மய்யங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044–24343106/24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *