சென்னை, மே 25- தமிழ்நாட்டில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகை யில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக் கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த நிலை யில், கிராமப்புறங்களில் நில விவ ரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு அரசு “வில்லேஜ் மாஸ்டர்” என்ற இணையதளத்தை உருவாக்கியது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
புவியியல் தகவல் அமைப்பு
ஆனால் இப்போது, பொதுமக்களுக்கு நில விவரங்களை மிகவும் தெளிவாக வழங்க தமிழ்நாடு அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த உரிமை ஆவணமும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நில விவரங்களை ஒரே இடத்தில் விரைவாகப் பெறலாம். இதற்காக புவியியல் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், தமிழ்நாட்டின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தால் நிலத்தின் எல்லை எங்கு இருக்கிறது?, உரிமையாளர் யார்?, நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? யார் பெயரில் பட்டா இருக்கிறது? யார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? வில்லங்க சான்றிதழ்? நிலத்தின் அரசு மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகா, அருகிலுள்ள காவல் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற தகவல்களும் முழுமையாக காட்டப் படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த தகவல் அமைப்புகளை உருவாக்கி இருந்தாலும், பல புதிய வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சி தமிழ்நாட்டில்தான் முதன் முறையாக நடைமுறையில் வந்துள்ளது.
முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் தற்போது, எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும், நமது நில விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக https://tngis.tn.gov.in/apps/gi-viewer/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூகுள் மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வது போல், நமது இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாவட்டம், கிராமம் வாரியாகவும் தேடி நமது நிலத்தை எளிதாக கண்டறிய முடிகிறது.
நிலத் தகவல்
தற்போது இந்த இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரகப் பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங் களில் தமிழ்நாட்டின் அனைத்து நிலத்தகவல்களும் இதில் கிடைக் கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வசதிகளை இணையதளத்தோடு மட்டுமல்லாமல், TN-GIS என்ற அலைபேசி செயலியாகவும் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
வசதிகள்
பட்டா: அந்த நிலத்தின் உரிமையாளர் யார், மேலும் இந்த நிலத்தின் அளவு என்ன? என்ப தனை தெரிந்து கொள்ளலாம்.
வரைப்படம்: அந்த நிலத்தின் நீளம், அகலம் எவ்வளவு என்பதனை அதில் தெரிந்து கொள்ளலாம்.
முனைத் தகவல்: இது நிலத்தின் வடிவம், எல்லைகள், மற்றும் பரப்புகள் பற்றிய தகவல்.
வழிகாட்டி மதிப்பு: இது பத்திரப்பதிவு துறையில் நிலம் அல்லது சொத்திற்கு நிர்ணயிக்கப்படும் வழிகாட்டி மதிப்பு.
வில்லங்க சான்றிதழ்: இதில் நிலத்தின் தற்போதைய உரிமையாளர், கடந்த கால உரிமையாளர் களை தெரிந்து கொள்ளலாம்.
எல்லைகள்: இது நிலத்தின் நான்கு பக்கமும் உள்ள எல்லைகளை அப்படியே காட்டும்
நிலம் தகவல்: இது அந்த நிலத்தில் உள்ள நில பயன்பாடுகள், வகைகள், நிலத்தின் அடர்த்தி, போன்றவை இடம் பெற்று இருக்கும்.
பயிர் தகவல்கள்: இது விவசாய நிலமாக இருந்தால் அங்கு பயிரிடப்படும் பயிர் வகைகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
மாஸ்டர் பிளான்: இது நிலப்பகுதியின் எதிர்கால வளர்ச்சிக்காக ஒருங்கிணைத்திருக் கும் முழுமையான திட்டம்.
அருகில் உள்ள வசதிகள் பட்டியல்
அருகில் வசதிகள்: இது நிலத்தின் அருகில் உள்ள வசதிகள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதனை வரையறுக்கிறது
ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், இ-சேவை மய்யம், வருவாய் அலுவலர், காவல் நிலையங்கள், ரேசன் கடைகள், தீயணைப்பு நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி, தாலுகா அலுவலகம், பெட்ரோல் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனை, ரத்த வங்கிகள்.