நீலமலையின் எழில் கொஞ்சும் மலை முகடுகளில் சாரல்மழை. இளம் காலை இனிய பொழுது. லாலி மருத்துவமனையின் பல் மருத்துவப் பகுதியின் புற நோயாளிகளின் பகுதியில் அமர்ந்து நோயாளிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நோயாளி உள்ளே வந்தார். அவருடன் அவர் தந்தையும் வந்தார். அவர் பெயர் சந்திரகலா. என்ன தொல்லை என்று கேட்டேன். அந்தப் பெண் பேசவில்லை. அந்தப் பெண்ணின் தந்தைதான் பேசினார். “அய்யா, அவள் பேசமாட்டாள்” என்றார். “ஏன்?” என்று கேட்டேன். “அய்யா, என் மகளுக்கு இப்பொழுது 18 வயது. 10 வயதில், அவள் ‘எஸ்டேட்’ பள்ளிக் கூடத்தில் 3ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் பள்ளிக்கூட பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது தவறிக் கீழே விழுந்து விட்டாள். விழுந்த இடம் ஒரு சரிவானப் பகுதி. உருண்டு விழுந்தவள் அந்த சரிவில் இருந்த பாறையால் தடுக்கப்பட்டாள். ஆனால், அந்த பாறையில் முகம் அடிபட்டு, முகம் முழுவதும் காயம். மிகவும் கஷ்டப்பட்டு, அந்தப் பள்ளத்திலிருந்து அவளை பலர் உதவியுடன், சாலைக்குக் கொண்டு வந்தோம். அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் எஸ்டேட் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம். டாக்டர் முகத்தில் தையல் போட்டு கட்டுக் கட்டி விட்டார். இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தோம். அதன்பிறகு சுமார் ஒராண்டு நன்றாகவே இருந்தாள். பள்ளிக்கூடம் கூடச் சென்றாள். நான்காம் வகுப்பு முடிக்கும் தருவாயில் ஒரு புதுப் பிரச்சினை. அவளுக்கு ஏற்பட்டுள்ளதை அவள் அம்மா கவனித்து என்னிடம் சொன்னார். “சந்திரகலா, அசைவ உணவே சாப்பிட மாட்டேன் என்கிறாள்” என்றார். “நான் ஏன், உனக்கு அசைவ சாப்பாடு மிகவும் பிடிக்குமே, சாப்பிட மாட்டேன் என்கிறாயே” என்று கேட்டதற்கு, “என்னால் வாய் திறந்து மென்று சாப்பிட முடியவில்லை” என்று கூறினாள். “வாயைத் திற” என்று நான் கேட்டபோது, அவளால் வாயை முழுமையாகத் திறக்க முடியவில்லை. உடனே அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காண்பிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
எஸ்டேட் மருத்துவ மனைக்குக் அழைத்துச் சென்று காட்டினோம். அங்கிருந்த டாக்டர் அவளைப் பரிசோதித்துப் பார்த்து, இதை இங்கு சரி செய்ய முடியாது. கோவை மருத்துவக் கல்லூரிக்கு சென்று காண்பியுங்கள் என்று பரிந்துரைக் கடிதமும் கொடுத்தார். நாங்கள் சந்திரகலாவை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அறுவை மருத்துவரிடம் காண்பித்தோம். அவர் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அதனால் ஏதும் குணம் கிடைக்கவில்லை. அதன் பிறகு பல தனியார் மருத்துவமனைகளிலும், பெரிய, பெரிய டாக்டர்களிடம் காண்பித்தோம். எந்தப் பலனும் இல்லை. பள்ளிக் கூடம் போவதும் நின்று போனது. ஓரிரு ஆண்டுகளில் வாய் முழுவதும் மூடிவிட்டது. பேச்சும் சரியாக வரவில்லை. பற்கள் கடித்தவாறேதான் இருக்கிறாள். முகமும் மாறிவிட்டது. கீழ்நாடி சிறுத்துவிட்டது. “கஞ்சிதான் மூன்று நேரமும் ஆகாரம். பெண்ணும் மனத்தளவில் மிகவும் பாதிப்படைந்து விட்டாள். மற்றவர்களைப் பார்க்க வெட்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டாள். வயதும் 18 ஆகிவிட்டது. அவள் அம்மாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சமீபத்தில் என் நண்பர் ஒருவர் இந்த நோய்க்கு நீங்கள் வைத்தியம் பார்ப்பதாகச் சொன்னார். அதனால் இங்கு கூட்டிக்கொண்டு வந்தேன். அவளை எப்படியாவது சரி செய்து விடுங்கள் டாக்டர்” என்று அழாதக் குறையாக, கண்ணீரோடு வேண்டினார். அந்தப் பெண் கன்னங்களிலும் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது. நான் அந்தப் பெண்ணைச் சோதிக்கத் தொடங்கினேன். சிறு வயதில் கீழே விழுந்து நாடி அடிபட்டதில், கீழ்த்தாடை மூட்டு சுக்கலாகி நொறுங்கிவிட்டது. இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதை ஆய்வில் அறிந்தேன். அறுவை மருத்துவத்தின் மூலம்தான் அதை சரி செய்ய முடியும் என்றும், அவர்கள் சம்மதத்தைக் கேட்டேன். அவர்கள் அதற்கு ஆயத்தமாக வந்துள்ளதாகச் சொன்னார்கள். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தேன். அறுவை மருத்துவத்திற்கு முன் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
மருத்துவ ஆய்வு முடிவுகள் சீராக இருந்தது. அறுவை மருத்துவத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. நான் காலை 10 மணியளவில் அறுவை அரங்கத்திற்குச் செல்கிறேன். நோயாளி ஏற்கெனவே படுக்கைப் பகுதியிலிருந்து அறுவை அரங்கிற்கு மாற்றப்பட்டு விட்டார். அரங்கிற்கு வெளியே காத்திருக்கும் அறையில் நோயாளியின் தந்தை அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் வெளியே வந்தார். பதட்டத்தோடு காணப்பட்ட அவர், என்னிடம், “டாக்டர் அய்யா, என் மனைவி இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன். சந்திரகலா (நோயாளி) மட்டுமே எனக்குத் துணை. எனக்கு இந்த ஒரே மகளைத் தவிர வேறு ஆதரவில்லை. என் பெண்ணின் உயிருக்கு இந்த மருத்துவத்தால் ஆபத்து ஒன்றும் இல்லையே?” என்று பயந்தவாறு கேட்டார். அப்போது அங்கு வந்த அறுவை அரங்க உதவியாளர், நோயாளியின் அப்பாவைப் பார்த்து, “அய்யா, பயப்படாதீர்கள். டாக்டர் அய்யா இது போன்ற பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து, அவர்களை நன்றாக ஆக்கியுள்ளார். அவர்கள் எல்லாம் நன்கு சாப்பிட்டு நன்றாக இருக்கிறார்கள். கவலை வேண்டாம்” என்று அவருக்கு தைரியம் சொன்னார். நானும் அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு அறுவை அரங்கிற்குள் நுழைந்தேன். முதலில் மயக்குநர் (Anaesthetist) மூச்சுக்குழாயை மூக்கின் வழியே செலுத்த முயன்றார். (பொதுவாக வாய் வழியேதான் மூச்சுக் குழாயை வழக்கமாகச் செலுத்துவர். வாய் இறுக மூடிய நிலையில் நோயாளி இருந்ததால் மூக்கு வழியே மூச்சுக் குழாயை செலுத்த முயற்சித்தோம். கீழ்நாடி வளர்ச்சி தாடை மூட்டில் உள்ள குறுத்தெலும்பில்தான் தொடங்கும். நோயாளியின் தாடையின் மூட்டில் இருந்த குறுத்தெலும்பின் சிதைவினால் மண்டையோடு இணைந்து விட்ட கீழ்த்தாடை மிகவும் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தது.
வளர்ச்சியடையாத கீழ்த்தாடையில் உள்புற உடல் அமைப்புகளிலும் மாற்றங்கள் இருக்கும். மூச்சுக் குழாய் இயல்பான நிலையில் இல்லாமல், இடமாற்றம் பெற்றிருக்கும். அதை விரல்களால் வெளிப்புறம் தேடி கண்டறிந்து, தோராயமாக மூக்கு வழியாக (Naso–endotracheal approach) மூச்சுக் குழாயைக் கண்டறிந்து, மயக்க மருந்துக் குழாயைச் செருக வேண்டும் (Blind intubation). மயக்குநரின் திறமைக்கு சவாலான பணி இது. நோயாளிக்கு மயக்க மருந்துக் குழாயை மூச்சுக் குழாயில் செருக மயக்குநர் முயன்றார். ஆனால் முடியவில்லை. இரண்டு, மூன்று முறை முயன்றும் தோல்வியே கிடைத்தது. இந்த முயற்சியிலேயே, ஒரு மணி நேரம் கழிந்துவிட்டது. கடைசியில் வேழி வழியின்றி, முன் கழுத்தின் கீழ் துளையிட்டு (Tracheostomy) மூச்சுக்குழாய்க்குள் மயக்க மருந்து குழாயைச் செருகினோம். மணி பிற்பகல் 1. நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. காதின் முன்புறம் கீரல் (Incision) போட்டு, பாதித்தப் பகுதிக்கு செல்ல ஆயத்தமானேன். வழமை போல் சிக்கலான இரத்தக் குழாய்களையும், நரம்புகளையும் பாதுகாப்போடு ஒதுக்கினேன். சதைப் பகுதிகளையும் நீக்கிவிட்டு கீழ்த்தாடை மூட்டை அடைந்தேன். மண்டையோட்டிலிருந்து, கீழ்த் தாடை மூட்டைப் பிரித்து, அறுவை மருத்துவம் வெற்றிகரமாக நடந்தேறியது. அறுவை மருத்துவ கீரல் காயம் தையல் போடப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு இரண்டு புற மூட்டுகளும் மண்டையோட்டோடு இணைந்து விட்டிருந்ததால் மறுபுறமும் அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். அங்கும் பாதிப்படைந்த மூட்டை, மண்டையிலிருந்து தாடையைப் பிரித்தேன். ஒரு வழியாக நோயாளியின் வாய் திறந்தது. வாய் நன்றாகத் திறக்கிறதா என்று ஆய்வு செய்தபின், அந்த அறுவை மருத்துவ கீறலை மூட தையல் போடத் துவங்கினேன்.
முதல் தையல் போடத் துவங்கினேன். ஒரு தையல்தான் போட்டேன். திடீரென்று எதிர்பாராத அதிர்ச்சி! அறுவை மருத்துவக் காயத்திலிருந்து இரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் வந்தது. அது ஒரு ஆபத்தான அறிகுறி. பதறிப் போய் மயக்குநரிடம், “அண்ணாச்சி, இரத்தம் கருப்பாக வருது, பாருங்கள்” என்றேன். மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நோயாளியின் அனைத்து இயக்கங்களும் நின்று விட்டது. இரத்த அழுத்தம் முழுமையாக குறைந்து விட்டது. நாடித் துடிப்பும் இல்லை. இதய மின் அலைப் பதிவு (ECG) இயல்பாக இல்லாமல், நெடுங்கோடாக (Cardiac straightaning) மாறிவிட்டது. மயக்க மருந்துக் கருவியால் நோயாளி லேசாக மூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருந்தார். அதைத் தவிர உயிரின் அறிகுறிகள் (Vital signs) அனைத்தும் நின்றுவிட்டன. நான், மயக்குநர், உதவி மருத்துவர், செவிலியர் என்று அனைவரும் பதற்றத்துடன் நோயாளிக்கு முதல் அவசர மருத்துவம் துவக்கினோம். இதயத்தையும், நுரையீரலையும் துடிக்க வைக்க உதவும் “இதய, நுரையீரல் உயிர்ப்பித்தல்” (Cardio-Pulmonary Resuscitation) முயற்சியை வேகமாகச் செயல்படுத்தினோம். உயிர் மூச்சுக் காற்றை (Oxygene) அதிகப்படுத்த மயக்குநர் இயங்கினார். ஆபத்துக் காலங்களில் பயன்படுத்தும் ஊசி மருந்துகளை, செவிலியரைப் போடச் சொன்னோம். இதயத்தில் நேரடியாக (Intra Cardiac) ஊசி மருந்தைச் செலுத்தினோம். இதயப் பகுதியை அழுத்தியும், வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தியும் (வாய் மூடியிருந்த நிலை மாறி, வாய் திறந்து விட்டதால் இதைச் செய்ய முடிந்தது). உள்ளிழுத்தும் செய்தேன். மயக்குநர் ஆழ்ந்த கவனிப்போடு, நோயாளியைக் கவனித்தார். இத்தனை முயற்சிகளும் ஒருசேர, வேகமாகச் செய்தோம். ஏறத்தாழ 40 நிமிடப் போராட்டம். அசைவின்றி இருந்த நோயாளியின் உடலில் லேசான அசைவு தெரிந்தது. மெல்ல இதயத்துடிப்பு தோன்றியது. அதை வேகப்படுத்த மீண்டும் சில மருந்துகளைச் செவிலியரைக் கொடுக்கச் சொன்னோம். இதயத் துடிப்பு சீராகத் தெரியத் துவங்கியது. நாடித் துடிப்பும் மெல்லச் சீராகத் தொடங்கியது.நோயாளி இயற்கையாக மூச்சு விடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஏறத்தாழ ஒன்றரை மணிநேரப் போராட்டத்திற்குப் பின் மரணத்தின் வாயிலிருந்து, அந்தப் பெண்ணை மீட்டோம். “மரணத்தை வென்ற மருத்துவம்” என்ற மகத்துவத்தை நேரில் கண்டு, அந்நோயாளியை மரணத்தின் பிடியிலிருந்து மீட்ட பின்தான் நானே மூச்சு விட்டேன் என்று கூடச் சொல்லலாம். அதுவும் அந்த நோயாளியின் தந்தைதான் அறுவை அரங்கின் உள் நுழையும்போது, “என் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே டாக்டர்?” என்று கேட்டார். அதுவரை யாரும் என்னிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதில்லை. அவர் பெண்ணிற்கு இப்படி ஆயிற்றே என்று நான் மிகவும் பதறிப்போனேன். எப்படியோ, ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் போக இருந்த உயிரை மீட்டோம். அந்தப் பெண் திருமணமாகி, குழந்தைகளோடு குன்னூரில்தான் வாழ்கிறார். இன்றும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் “இதய, நுரையீரல் உயிர்ப்பித்தல்” முறையில் ஆபத்தான நிலையிலிருந்து உயிர் மீள்கிறார்கள். கடவுள் அவ்வளவுதான் ஒருவருக்கு ஆயுசைக் கொடுக்கிறார்” என்றும், “விதி முடிந்தது, போய்விட்டார்” என்றெல்லாம் கூறுவதைக் கேட்டுள்ளோம். “விதியை மாற்றிய (மருத்துவ) மதி” என்பது எவ்வளவு உண்மை!
(தொடருவேன்)