அடுத்த பிறவியிலும் வஷிஷ்ட பார்ப்பனராக பிறக்க வேண்டுமாம்! சர்ச்சைப் பேச்சு சாமியாருக்கு ஞானபீட விருது

Viduthalai
7 Min Read

அடுத்தமுறை, வஷிஷ்டகோத்ர பார்ப்பனகுலம் – அதாவது மனிதப் பிறவியிலேயே மிகவும் உயர்ந்த குலமான (தற்போது தான் இருக்கும்) அதே குலத்திலேயே தான் பிறக்கவேண்டும் என்று கூறியவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதை வழங்கியுள்ளார்.

விருதுகளுக்கு எதுதான் வரம்புமுறை என்ற கேள்வி எழுகிறது.

ராம்பத்ராச்சாரியாரின், இயற்பெயர் கிரிதர் மிஸ்ரா.  சாமியார் மற்றும் ஆன்மிக கதை சொல்பவர். ஆனால் இவர் சர்ச்சையான பேச்சிற்காக மிகவும் பரவலாக அறியப்பட்டவர்.

இவருக்கு அரசுத் தரப்பில் பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது. தான் துளசி பீடத்தின் மடாதிபதி என்று அவரே சொல்கிறார்.

இந்த துளசி பீடம் என்று ஒன்று இல்லவே இல்லை. இது இவராகவே உருவாக்கி தன்னைத்தானே சங்கராச்சாரி என்று அழைத்துக்கொள்கிறார். அதன் பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தைத் துவக்கி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டுகிறார் என்று கும்பமேளாவில் சாமியார் அமைப்பு குற்றம் சாட்டியது.

தற்போது இவருக்கு மிகவும் உயர்ந்த விருதான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுகளுக்கான காரணங்கள் திறமையா? விசுவாசமா? அல்லது தீவிர ஹிந்துத்துவ மதவெறியா என்று அரசுதான் விளக்கவேண்டும்.

ஞானபீட விருது

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பாரதீய ஞானபீட அறக்கட்டளை ஞானபீட விருதுகளை 1961ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது இந்திய இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் (தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், வங்கம் உள்ளிட்ட) எழுதப்பட்ட இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

ராம்பத்ராச்சாரியாருக்கு 2015இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 15.05.2025 அன்று  இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. விமர்சகர்களின் கூற்றுப்படி, ராம்பத்ராச்சாரியார் ஜாதிரீதியில் மிகவும் மோசமான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைப்பவர்.

இவர் குறித்து செய்தி வரும்போது எல்லாம் மோசமான சர்ச்சைக்குரிய ஜாதியக் கருத்துக்கள் தான் வெளிவரும். மத நல்லிணக்கத்திற்கு முரணான சில கருத்துக்களை கூறியுள்ளதாக விமர்சனங்கள் உள்ளன.

இடஒதுக்கீடு எதிர்ப்பு

இடஒதுக்கீடு முறைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இவையனைத்திற்கும் மேலாக, இவர் ஒரு தீவிர மோடி பக்தர்

கிருஷ்ணன் கூறியதால்
மனிதர்களில் மோடியை நண்பராக ஏற்றாராம்

மோடியை காக்காய்பிடிப்பதற்காக சாமியார்கள் முதல் அக்கட்சியில் பெரிய தலைவர்கள் என எல்லோரும் நண்பராகத்தான் கூறுவார்கள். ஆனால், இவர் கூறியது  மிகவும் வித்தியாசமானது.

இந்த உலகில் தனக்கு இரண்டு நண்பர்கள் மட்டுமே; ஒருவர் கிருஷ்ணன். அவர் கடவுளாக உள்ளார். அவர் கூறியதால் மோடியையும் நண்பராக ஏற்றுகொண்டேன் என்று கூறுகிறார்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை முற்றிலும் வெறுப்பதாகவும், அவர் எப்படி அரசியலில் இருக்கிறார். ராகுல் காந்தியைப் பிரதமராக என்னால் பார்க்கவே முடியாது. ராகுல் காந்தி வாழ்த்து கேட்டு வந்தாலும், தான் ஏற்கெனவே மோடிக்கு வாழ்த்து கொடுத்துவிட்டதால் மீண்டும் வாழ்த்து கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கும் அத்தனை தலைவர்களையும் உடனடியாக மரணம் அணுகவேண்டும். அவர்கள் அடுத்த பிறவியில் அறிவிலிகளாக பிறக்கவேண்டும்.

இவர் ஹிந்தியில் “மரே முலாயம் கான்ஷிராம், பிரேம் சே போலோ ஜெய் சிறீராம்” (செத்துப் போகட்டும் கன்சிராம், முலாயம் சிங், என்று சொல்லிவிட்டு ஜெய சிறீராம் என்று கூறுங்கள்) என்று பொதுமக்களை நோக்கி அடிக்கடி கூறுகிறார்.

அவர்கள் இருவருமே இறந்துவிட்டார்கள். ஆனால் அவர்களைப் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்களும் இறந்துபோகவேண்டும் என்றும் அவர்கள் மறுபிறவியில் மனிதர்களாக பிறந்தாலும் விலங்குகளைப் போல் இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.

“மீண்டும் உயர்ந்த குலப் பார்ப்பானாகப்
பிறக்க வேண்டும்”

ராம்பத்ராச்சாரியார், தான் மீண்டும் ஒரு பார்ப்பனனாகப் பிறக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதுவும், சாதாரண பார்ப்பனனாக அல்லாமல், “தாழ்ந்த அல்லது இழிவான பார்ப்பனனாக” இல்லாமல், பார்ப்பனர்களிலேயே உயர்ந்த வசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனனாகப் பிறக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்தக் கூற்றுக்கள், ஜாதி ரீதியிலான பாகுபாடு மற்றும் சமூக சமத்துவமின்மை குறித்த விவாதங்களைத் தூண்டுவதோடு, பொது வாழ்க்கையில் உள்ள ஒரு ஆன்மிகத் தலைவர், தனது தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தும் விதத்தையும், அதன் தாக்கத்தையும் சிந்திக்க வைக்கிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

அம்பேத்கருக்கு
மனுஸ்மிருதி பற்றி தெரியாதாம்!

“அம்பேத்கர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மனுஸ்மிருதியை படித்தார். அது தவறான மொழிபெயர்ப்பு. அதனால்தான் அவர் அதை தவறாகப் புரிந்துகொண்டு, அதை எரித்தார். அவர் அதை சம்ஸ்கிருதத்தில் படித்திருந்தால், அதை இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக மாற்றியிருப்பார்.”

– இது ஜகத்குரு ராமபத்ராச்சாரியார்.

இந்தச் சாமியாருக்கு தெரியுமா அம்பேத்கர் சமஸ்கிருதம் மற்றும் பாலிமொழியில் பாண்டித்யம் பெற்றவர் என்று.

அரசியலிலும் “பார்ப்பனர்” முன்னுரிமை

ராம்பத்ராச்சாரியார் ஆன்மிக உலகில் மட்டுமல்லாமல், அரசியலிலும் தனது ஜாதி வெறியை வெளிப்படையாகவே கூறுகிறார்.

மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட  மாநிலங்களுக்கு முதலமைச்சர் யார் என்ற விவாதம் நடந்தபோது, “முதலமைச்சர் பதவி பார்ப்பனருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்றும், அவர்களுக்கு மட்டுமே தகுதியான பதவி என்றும் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல அரசு வேலைகள் அனைத்துமே “பார்ப்பனருக்கே” என்று முழங்குகிறார்.

இவர் வெளிப்படையாக சாஸ்வத் சர்மா (உயர்ந்த குலப் பார்ப்பனராம்) என்பவருக்கு  ஒரே வார்த்தையில் உத்தரப் பிரதேச தலைமைச் செயலகத்தில் “சமீக்ஷா அதிகாரி”யாக (மதிப்பீட்டு அதிகாரி) நியமிக்க தான் ஆணையிட்டேன் என்கிறார். இதன் மூலம், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பார்ப்பனர்களுக்கு வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கிறார்.

வஷிஷ்ட பார்ப்பனர்களைத் தவிர்த்த வேறு எந்த பார்ப்பனர்களுமே உயர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் கையால் தண்ணீர் குடித்தால் அடுத்த பிறவியில் மோசமான பிறப்பே கிடைக்கும். வஷிஷ்ட பார்ப்பனர்களில் “உபாத்யாயா, சவுபே, திரிகுணாயத், தீட்சித் மற்றும் பாடக்  போன்றவர்கள்தான் உயர்ந்தவர்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறுகிறார்.

இது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி குறிப்பிட்ட ஜாதிக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதாக மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

இவர் நாட்டில் ஜாதிப் பிரிவினையை தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைச் சேர்ந்த தலைவர்கள் தான் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.  அவர்கள் ஜாதியால் நாட்டை பிரிக்கின்றனர் என்று கூறுகிறார்.

கிருஷ்ணன் கூறியதால் நண்பனாக ஏற்றுக்கொண்டேன் என்று இவர் கூறும் மோடி ஓபிசி வகுப்பு என்பது இவருக்குத் தெரியவில்லைபோலும்.

பார்க்கத்தான் சாமியார். ஆனால், கதாகலாட்சேபங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவர்களைப் போன்று மிமிக்கிரி பேசி கேலி செய்து இழிவுபடுத்துவார்.

மனுஸ்மிருதிதான் இந்திய அரசமைப்புச் சட்டம்

அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், சமத்துவம், சுதந்திரம், மற்றும் நீதியை அனைவருக்கும் உறுதி செய்யும் ஒரு நவீன சட்டக் கட்டமைப்பாகும். இந்திய அரசியலமைப்பு, ஜாதி, மதம், இனம், அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. ஆனால் சாமியார் ராம்பத்ராச்சாரி நமது அரசமைப்பை ஏற்கமாட்டாராம்

மனுதர்மம் தான் இந்தியாவின் உன்னதமான சட்டம். அதை ஒழித்து அரசமைப்புச் சட்டம் கொண்டுவந்தது. நாட்டுமக்களை ஒற்றுமையாக வாழவிடாமல் செய்யவதற்கு ஆங்கிலேயர்கள் செய்த சூழ்ச்சி, இங்கு சிலர் ஆங்கிலேயரிடம் பணம் வாங்கிக்கொண்டு இதைச்செய்தனர் என்று மறைமுகமாக அண்ணல் அம்பேத்கரையும் பழிசொல்லி உள்ளார் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் அனைவருமே மனவளர்ச்சி இல்லாதவர்களாம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்களாம்.

அவர்கள் மேலோட்டமாகப் ஹிந்துவாகத் தோன்றினாலும், அவர்களின் உண்மையான குணம் ஹிந்துமதத்தில் பிளவை உண்டுசெய்து ஒற்றுமையைச் சிதைப்பதுதான் என்கிறார்.  அவரது கருத்துக்களில், ஜாதிவெறி, வகுப்புவாதம், ஹிந்து ராஷ்டிரா, இடஒதுக்கீடு எதிர்ப்பு, லவ் ஜிகாத், பெண்களின் கைகளில் கத்தி இருக்க வேண்டும், ராமசரிதமானஸ் தேசிய நூலாக வேண்டும் போன்ற கூறுகள் இருப்பதாகப் பேசப்படுகிறது.

பாகிஸ்தானை அழிக்கவேண்டுமா? ஜெய் சிறீராம் சொல்லுங்கள், பார்ப்பனர்களின் மந்திரமே பாகிஸ்தானை அழித்துவிடும், ஜெய் சிறீராம் என்னும் முழக்கம் பாகிஸ்தானை கதிகலங்கச்செய்துவிடும், “இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் ஜெய் சிறீ ராம் சொல்ல வேண்டும்”  என்கிறார்.

ஹிந்தி சேனல்கள் அனைத்தும் ஞானபீட விருது வழங்கப்பட்டதைப் பாராட்டி, அவரை “ஸநாதனத்தின் மிகவும் உயந்த நிலை மனிதர்” என்றும், “அறிவின் மகாசமுத்திரம்” என்றும் புகழ்கின்றனர்.

ஞானபீட விருது என்பது மக்களின் வரிப்பணத்தில் தரப்படுபவது. அது ஒரு தனியார் அமைப்பின் மூலமாகவோ அல்லது ஏதோ ஒரு பிரமுகரின் பெரும் சொத்திலிருந்து கொடுக்கும் பணம் அல்ல, இந்த விருது பெறுபவர்களுக்கு எண்ணிலடங்கா சலுகைகள் உண்டு, இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம் ஆகும். இப்படி மக்களின் வரிப் பணத்தில் மொழி இலக்கியத்திற்காக கொடுக்கப்படும் விருதை சமூகநீதிக்காக பாடுபட்ட தலைவர்களை மிகவும் கொச்சையாக பேசிய, நமது அரசமைப்புச்சட்டத்தை ஏற்கமாட்டேன் என்று பொதுவெளியில் எப்போதும் கூறிவரும், பார்ப்பனர்களிலேயே உயர்ந்த ஜாதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே முதலமைச்சர் பதவி தரவேண்டும் என்று வெளிப்படையாகவே தொடர்ந்து பேசி வருபவருக்கு இலக்கியத்திற்காக் ஆற்றிய பணிக்கு ஞானபீட விருது கொடுக்கிறார்கள்.

ஒருவேளை பாஜகவினர் இலக்கியம் என்றால் ஹிந்துத்துவ வெறிச்சொற்களை அகராதி போட உதவியது போன்று பேசியதற்காகத்தான் இவருக்கு ஞானபீட விருது கொடுத்தார்களோ? பழங்குடியின மக்கள் வனங்களில் தான் இருக்கவேண்டும். ஊரில் வசித்தால் சலுகைகள் கொடுக்ககூடாது என்று பேசியவருக்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரே விருது வழங்கி சிறப்பிக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *