சென்னை, மே.23– தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமெரிக்காவில் நடந்த மனநல பன்னாட்டு மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
பன்னாட்டு மாநாடு
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் மனநல பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில், தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். மாநாட்டில், ‘நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால் உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்’ என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் எனது கால்மூட்டு உடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். 3 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தேன். இனிமேல் உட்காரவோ, நடக்கவோ, ஓடவோ கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரை ஒரு பேரிடியாக வந்தது. ஆனால், தன்னம்பிக்கையை கைவிடாது 6 மாதங்கள் கழித்து படிப்படியாக யோகா பயிற்சி, சிறிது தூரம் ஓடுதல் என முயற்சிக்கத் தொடங்கி தற்போது மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளேன்.
5 ஆண்டுகளில் 100 மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்று உலக சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்தேன். இதுவரை 160 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். வருகிற 25-ஆம் தேதி கலிபோர்னியாவில் நடக்கும் மாரத்தான் போட்டியில் 161-ஆவது முறையாக பங்கேற்கிறேன். மன உறுதி, தொடர் பயிற்சி காரணமாக இளைய சமுதாயத்திற்கு நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மூலம் உடல் மற்றும் மனநலம் காக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
முன்னோடி மாநிலம்
இதேபோல தமிழ்நாடு அரசு கடந்த 2020, 2021-ஆம் ஆண்டுகளில் ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்’, 2022-ஆம் ஆண்டு ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான்’, 2023-ஆம் ஆண்டு ‘கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்’ ஆகிய போட்டிகளை நடத்தியது.
இதில் கிடைத்த ரூ.5.43 கோடி பதிவுத்தொகையை கரோனா நோய்த்தடுப்பு நிவாரண நிதி, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் உறைவிட கட்டடம், ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை கட்டடம் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
மேலும், மக்களை தேடி மருத்துவம், பாதம் பாதுகாப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்களால் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.