சென்னை, மே 20– தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-
சுதந்திர நாள் விழாவின் போது, துணிவு மற்றும் சாகச் செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு விருதாளருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு சுதந்திர நாள் விழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் 16ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணைய தளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிட ஏதுவாக, இணையதளத்தின் மூலம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.