போச்சம்பள்ளி, மே 20 மத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த, சரஸ்வதி சிலை, கழகத்தினரின் எதிர்ப்பால் அகற்றப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரில், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சரஸ்வதி சிலை வைக்க கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்த பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். குழு உறுப்பினர்கள் 24 பேரின் நன்கொடையில், பள்ளி வளாகத்தில் கடந்த, 15 நாள்களாக பீடம் அமைத்து, அதில் சரஸ்வதி சிலையை வைத்து, கட்டுமானப் பணி நடந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட கழக துணைத் தலைவர் வ.ஆறுமுகம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.சிலம்பர சன் ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாளிடம், ‘பள்ளி வளாகம் பொதுவானது. அதில் ஹிந்து கடவுள் சரஸ்வதியின் சிலை வைப்பது நியாயமா?’ என கேள்வி எழுப்பி, எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி சிலை அகற்றப்பட்டது
நேற்று முன்தினம் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாளைத் தொடர்பு கொண்ட, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.) முனிராஜ், எவ்வித அனுமதியுமின்றி சிலை வைப்பதை ஏற்க முடியாது எனக் கூறி சிலையை அகற்ற உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொக்லைன் கொண்டு சரஸ்வதி சிலை உடைத்து அகற்றப்பட்டது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் பெருமாளிடம் கேட்டதற்கு, ‘‘பள்ளி மேலாண்மை குழு முடிவு செய்து, அவர்கள் சிலை அமைக்க கட்டுமான பணி செய்தனர். அரசுப் பள்ளி பொதுவானது. இதில், சரஸ்வதி சிலை அமைக்கக்கூடாது என திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, சி.இ.ஓ.,விடம் புகார் அளித்ததால், அவரது உத்தரவுப்படி சிலை அகற்றப்பட்டது,” என்றார்.
மாவட்ட சி.இ.ஓ., முனிராஜிடம் கேட்ட தற்கு, ”பள்ளி வளாகத்தில் புதிய சிலைகள் அமைக்க அனுமதி இல்லை. மேலும், மத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. சிலையை இரவோடு இரவாக மேலாண்மை குழு உறுப்பினர்கள் வைத்துள்ளனர். புகார் எதுவும் தனக்கு வரவில்லை. மேலும், மதச்சார்புடைய சிலைகள் பள்ளி வளாகத்தில் வைக்கக்கூடாது என்பது விதி. அதனால் அதை அகற்ற உத்தரவிடப்பட்டது,” என்றார்.