கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும்வரை எங்கள் போராட்டம் தொடரும்!
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’’ நூலை வெளியிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!
சென்னை, மே 18 – ‘‘கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.05.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய “தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை” நூலினை வெளியிட்டு ஆற்றிய உரை வருமாறு:–
இது, புத்தக வெளியீட்டு விழாவா? இல்லை,உரிமைக் குரல் எழுப்பும் கூட்டமா? என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி கோபாலா கவுடா ஆற்றிய உரையாக இருந்தாலும் சரி, மேனாள் முதலமைச்சர் திக்விஜய சிங் உரையாக இருந்தாலும், முதலமைச்சர் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரையாக இருந்தாலும் மிகச் சிறப்பாக உரையாற்றிருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு தாயின் மகிழ்ச்சி மனநிலையில்
நான் இருக்கிறேன்!
நான் இருக்கிறேன்!
இந்த விழாவைப் பொறுத்தவரை, என்னுடைய மனநிலை தாலாட்டி வளர்த்த மகனுக்குப் பாராட்டு கிடைக்கும்போது, ஒரு தாய் எப்படி மகிழ்ச்சி அடைவாளோ, அதே மனநிலையில் நான் இருக்கிறேன். ஏனென்றால், என் நண்பன் பெற்றெடுத்த மகேஸ் அந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறார்!
உதயாவும் – மகேசும் என் கண் முன்னால் வளர்ந்த பிள்ளை கள்! இன்றைக்கு எல்லோரும் பாராட்டுகின்ற வகையில் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! இதை பார்க்கின்றபோது அளவில்லா மகிழ்ச்சியும், பெருமையும் எனக்கு ஏற்படுகிறது! ஏனென்றால், எங்களுடைய குடும்பத்துக்கும், அன்பில் குடும்பத்திற்குமான நட்பு என்பது மூன்று தலைமுறையான நட்பு! தலைவர் கலைஞர் – அன்பில் தர்மலிங்கம்! நான் – அன்பில் பொய்யாமொழி! உதயநிதி – அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்று இந்த நட்பு தொடருகிறது! இப்போது பொய்யாமொழியை நினைத்தாலும் எனக்கு கண்ணீர் வரும், எப்போது நினைத்தா லும் கண்ணீர் வரும்.
குடும்பப் பாச உணர்வோடு பொய்யாமொழியின் இடத்திலிருந்து அன்பில் மகேஸை வாழ்த்துகிறேன்!
1999 நாடாளுமன்றத் தேர்தல் நேரம்! திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், தலைவர் கலைஞர் உரையாற்றிக் கொண்டு இருந்த மேடையில்இருந்த நம்முடைய அன்பில் பொய்யாமொழி சிரித்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆனால், இரவு விடிவதிற்குள்ளாக எங்கள் எல்லோரையும் அழ வைத்துவிட்டு போய்விட்டான்! அப்போது, நான் தேனியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தேன். இடியாக வந்திறங்கிய செய்தியை கேட்டதும் துடியாக துடித்து போய், திருச்சிக்கு ஓடோடி வந்தேன். என் நண்பனுடைய உடலில் சாய்ந்து நான் கதறி அழுதேன்… அன்றைக்கு தலைவர் கலைஞர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “என் பிள்ளைகளில் ஒருவரை இழந்துவிட்டேன்” என்று எழுதினார். இதுதான் எங்களுடைய நட்பின் ஆழம்!
இந்தக் குடும்ப பாச உணர்வோடு, பொய்யாமொழியின் இடத்தில் இருந்து நூலாசிரியர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், பள்ளிக்கல்வித் துறை அடைந்திருக்கின்ற உயரங்களை பார்க்கிறேன். செய்திருக்கின்ற சாதனைகளை பட்டியலிட்டு மட்டும் நான் சொல்லவேண்டும் என்றால், இல்லம் தேடிக் கல்வி – மாணவர் மனசு – எண்ணும் எழுத்தும் – வாசிப்பு இயக்கம் – நம்ம பள்ளி நம்ம ஊரு – வானவில் மன்றம் – மணற்கேணி செயலி- கோடைக் கொண்டாட்டம் – கலைத் திருவிழா – தகைசால் பள்ளிகள் – மாதிரி பள்ளிகள் – ஸ்மார்ட் வகுப்பறைகள்! ஹை-டெக் லேப்கள்! அதுமட்டுமல்ல, மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள்! பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள்! சாரண – சாரணியர் இயக்கத்தின் உலக மாநாடு! ஆசிரியர்களுக்கு டேப்! அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று ஊக்கப்படுத்துவது, இதுவரையில் யாரும் செய்யாத 234 தொகுதிகளிலும் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் நம்முடைய தம்பி அன்பில் மகேஸ்.
பள்ளிக் கல்வித் துறையின்
பொற்காலமாக மாற்றிய மகேஸ்
பொற்காலமாக மாற்றிய மகேஸ்
ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம், அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகரிப்பு! இடைநிற்றல் இருக்கக் கூடாது என்று மாணவர்களை திரும்ப கல்விச் சாலைகளை நோக்கி அவர் அழைத்துக் கொண்டு வருவது. பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமாக நம்முடைய ‘திராவிட மாடலை’ மாற்றியிருக்கிறார் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
இந்த சாதனைகளை எடுத்து சொல்வதோடு மட்டு மல்லாமல், ஒன்றிய பா.ஜ.க. அரசால், தமிழ்நாடு எதிர்கொண்டி ருக்கின்ற நெருக்கடிகளையும், நம்முடைய அரசியல்ரீதியாக அவர்கள் நம்மைப் பழிவாங்கிக் கொண்டு இருப்பதை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் துணிச்சலோடு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்! ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சி வரிசையோ, என்றைக்கும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம்; தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் என்பதற்கான அடையாளம்தான் இந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி! “தேசியக் கல்விக் கொள்கை 2020 எனும் மத யானை!” புத்தகத்தின் தலைப்பே மொத்த கருத்தையும் சொல்லிவிடுகிறது!
புதிய கல்விக் கொள்கையை
ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!
ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!
இப்படியொரு கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கியபோதே “புதிய கல்விக் கொள்கை என்ற மதயானை தமிழ்நாட்டுக்குள் புகுந்து, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூகநீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்கு
கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது – வருமுன் காப்பதே அறிவுடைமை” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கே அறிக்கையாக வெளியிட்டார்!
கலைஞரின் வரிகளையே புத்தகத்தின் தலைப்பாக ஆக்கியிருக்கிறார் நம்முடைய மகேஸ். இன்றைக்கு நாடு இருக்கின்ற நிலைக்கு மிக அவசியமான புத்தகம் இது! ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரைக்கும், எல்லாவற்றையும் காவிமயமாக்க வேண்டும்! முதலில் கல்வியை காவிமயமாக்க வேண்டும்! அதற்காக கொண்டு வந்ததுதான் இந்த தேசியக் கல்விக் கொள்கை! அதனால்தான், நம்முடைய அன்பில் மகேஸ், இந்தப் புத்தகத்தின் மூலமாக “மதவாதம் உருவாக்கும் அழிவுப் பாதையில் நாம் செல்லப் போகிறோமா? நம் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கும் சமூகநீதிப் பாதையை நோக்கிச் செல்லப் போகிறோமா?” என்ற மிக முக்கியமான கேள்வியை இந்த நாட்டை நோக்கி அவர் எழுப்பியிருக்கிறார். இதை ஒரு அமைச்சராக மட்டும் அவர் எழுதவில்லை. “சமூகநீதியை அடித்தளமாக கொண்டு உருவான தமிழ்நாட்டின் கல்விக் கூடத்தில் படித்து உருவான ஒரு இளைஞனாக இந்த நூலை எழுதி இருக்கிறேன்” என்று அவர் சொல்லி இருக்கிறார்.
தன் கடமையை சிறப்பாக
செய்திருக்கிறார் தம்பி மகேஸ்!
செய்திருக்கிறார் தம்பி மகேஸ்!
என்னைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டின் இளைஞனாக இந்திய நாட்டு குடிமகனாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக, தன்னுடையகடமையை சிறப்பாக செய்திருக்கிறார் தம்பி மகேஸ்!
இந்தப் புத்தகத்தில் நாம் ஏன் சமூகநீதிப் பார்வையோடு தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று விரிவாக எழுதியிருக்கிறார். பா.ஜ.கவின் திட்டங்கள், அதன் செயல்பாடுகள், அதன் எதிர்கால எண்ணங்கள் இதையெல்லாம் பார்த்துத்தான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்கிறோம்! எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால், அது நம்முடைய திராவிட மாடல்! இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால், அது பா.ஜ.க-வின் காவி மாடல்! “எல்லார்க்கும் எல்லாம்” என்று சொன்னால், அது நம்முடைய திராவிட மாடல் கருத்தியல்! “எல்லாம் ஒருவர்க்கே” என்று சொன்னால், அது ஆரிய கருத்தியல்! இதுதான் ஈராயிரம் ஆண்டுகளாக இந்தச் சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கின்ற போர்!
நம் இனத்தின் உயர்வுக்கு கல்விதான் அடித்தளம்!
இன்றைக்கு நம்முடைய உயர்வுக்கும், மேன்மைக்கும் அடித்தளமாக இருக்குறதே கல்விதான்! நீதிக்கட்சி காலம் தொடங்கி, நம்முடைய போரை கல்விக் கூடங்கள் எனும் களத்தில் இருந்துதான் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அறிவுதான் நம்முடைய ஆயுதம்! இன்றைக்கு, கல்விக்குத் தடை போடும் ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிராக நம்முடைய திராவிட மாடல் அரசு போர்வாளை சுழற்றிக் கொண்டிருக்கிறது! இந்தப் போர் ஏன் முக்கியமானது என்றால், தேசியக் கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும். இடஒதுக்கீடு இருக்கின்ற வரைக்கும்தான், ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும்! பன்முகப் பண்பாட்டை N.E.P. தகர்த்துவிடும்.
சமஸ்கிருத பண்பாடு கொண்ட
ஒற்றை தேசியத்தை கட்டமைக்க முயற்சி!
ஒற்றை தேசியத்தை கட்டமைக்க முயற்சி!
75 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டைச் சிதைத்து, சமஸ்கிருத பண்பாடு கொண்ட ஒற்றை தேசியத்தை கட்டமைப்பதுதான் அவர்களுடைய ஒரே நோக்கம்! தேசியக் கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளரும் என்று சில நாட்களுக்கு முன்னால், உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய திரு. அமித்ஷாவே சொல்லி இருக்கிறார். எது நடக்கும் என்று நாம் தொடர்ந்து எச்சரித்தோமோ, அதை உள்துறை அமைச்சரே உறுதி செய்திருக்கிறார். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் அழிக்கும் முயற்சி இது! இதை தடுக்க ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான். அதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்! பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும் மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக ஒன்றிய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையால் அனைவருக்குமான கல்வி எட்டாக் கனியாகிவிடும்!
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக் கனியாக மாறிவிடும்! தடுப்புச் சுவரை எழுப்பி எழுப்பி, பலரையும் பாதித் தூரத்திலேயே தடுத்து, கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்தி விடுவார்கள். இதைப் பற்றி கடந்த 2022-ஆம் ஆண்டு காந்தி கிராமம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா – அந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். அப்போது அவரிடம் நேரடியாகவே நான் வலியுறுத்தி இருக்கிறேன். மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய பண்பாடு இருக்கின்ற நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் படிக்கவேண்டும் – எந்த பாடத்திட்டத்தில் படிக்கவேண்டும் என்று முடிவு செய்கின்ற அதிகாரம் மாநில அரசுகளுக்குத்தான் இருக்கவேண்டும்! எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் வரை நம்முடைய போராட்டம் தொடர வேண்டும். அதற்கு தம்பி அன்பில் மகேஸ் எழுதியுள்ள இந்த நூல் ஊக்கமளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய இரண்டாயிரத்து 152 கோடி ரூபாயை தராமல் முரண்டு பிடிப்பதை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும்!
கல்வி நிதியைப் பெற உச்சநீதிமன்றத்தில் – வழக்கு!
இங்கே இருக்கின்ற திக் விஜய சிங் அவர்கள் உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவே பரிந்துரைத்திருக்கிற நிதிதான் அது! மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியை தங்களுடைய ‘Petty Politics’-ற்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது.
இதற்கு எதிராக, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரத்தான் போகிறது! எப்படி, நாட்டிற்கே வழிகாட்டும் தீர்ப்புகளைப் பெற்று, இன்றைக்கு இந்திய நாட்டின், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்து இருக்கிறோமோ, அதேபோல, இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.
தம்பி மகேஸ் பொய்யாமொழியை மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்!
நிறைவாக நான் சொல்ல விரும்புவது, தம்பி அன்பில் மகேஸ் – அன்பில் – அறிவில் – ஆற்றலில் – பண்பில் – பாசத்தில் – பேச்சில் என்ற அந்த வரிசையில், இப்போது எழுத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் மாண்புமிகு அமைச்சரும், நூலாசிரியருமான என்னுடைய தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி. எனவே, அவரை மீண்டும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
பங்கேற்றோர்
இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவர் திக்விஜய சிங், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. , தமிழ்நாடு மாநில காங்கிரஸ் சுமிட்டித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈஸ்வான், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி கோபால கவுடா. இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் மேனாள் இயக்குநர்டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, இந்து குழுமத்தின் இயக்குநர் ராம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வாரியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.