சென்னை, மே 13 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கு சிறந்த நூல்களை அளித்த நூலாசிரியர் களுக்கும், அந்நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், 1.1.2024 முதல் 31.12.2024 வரை தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழுக்காக வரவேற்கப்படுகின்றன.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் என 33 வகைப்பாட்டில் சிறந்த நூலாக ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு பரிசுத் தொகையாக ரூ.50 ஆயிரமும், பதிப்பகத்தாருக்கு பாராட்டுத் தொகையாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். 5 நூல்களுடன் போட்டிக்கான விண்ணப்பத்தை ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ்வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 16-ஆம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.