சென்னை, மே 13 இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் 3.57 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்துகளில் சிக்கியவர் களுக்கு இலவச சிகிச்சை அளிக் கும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித் துள்ளது. அந்த திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டம்
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிசம்பர் 18-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, அவர்களைக் காப்பாற்றுவதே இதன் நோக்கம்.
தமிழ்நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து, அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவராக இருந்தாலும், விபத்துக் குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில் அவரிடத்தில் பணம் இருக்கிறதோ, இல்லையோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அளித்து, அவரின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
3.53 லட்சம் பேர் பயன்
இந்த திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,57,137 பேர் விபத்து காய சிகிச்சையை கட்டணமின்றி பெற்றுள்ளனர். அதற்காக அரசு ரூ.318.89 கோடி செலவிட்டுள்ளது. மொத்தம் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அந்த மருத்துவமனைகள் அனைத்திலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த தொகை ரூ.2 லட்சமாக அண்மையில் உயர்த்தி வழங்கப்பட்டது.
மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் திட்டங்களாக மக் களுக்கு பயன்பாட்டில் இருந்து கொண் டிருக்கிறது. அதன் தொடர்ச்சி யாகவே தற்போது ஒன்றிய அரசு இத்திட்டத்தை தேசிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.