சென்னை, மே 13 உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி சென்னை யில் நாளை (14.5.2025) முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கல்லூரி கனவு நிகழ்ச்சி
சென்னையில் உள்ள அரசு, மாநகராட்சி, ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 மற்றும் 2023-2024ஆம் கல்வி ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மற்றும் உயர்கல்விக்கு விண்ணப்பித்து கல்லூரியில் சேராத மாணவர்கள் 5,666 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உயர்கல்வி படிப்பைத் தொடர தகுந்த ஆலோ சனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு நிகழ்ச்சி’ சென்னை மாவட்டத்தில் நாளை (மே 14) முதல் மே 20-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து அடையாறு, கோடம்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்களுக்காக சாந் தோம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் பீட்ஸ் அகாடமியின் சீனியர் செகண்டரி பள்ளியில் வரும் 16-ஆம் தேதியும், திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல் நிலைப்பள்ளியில் வரும் 19-ஆம் தேதியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையடுத்து இறுதியாக 20-ஆம் தேதி அண்ணாநகர், ராயபுரம் தெற்கு, ராயபுரம் வடக்கு, தேனாம்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் பீட்ஸ் அகாடமியின் சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது கல்லூரிக் கனவை நிறைவேற்ற முகாமில் கலந்துகொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.